September 18, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 9)

தமாம் பாலா
k.h.s.s நினைவுகள், ஒன்பதும் பத்தும்..

பள்ளி படிப்பில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல், எல்லோருக்குமே ஒரு சீரியஸ்னஸ் வந்து விடுகிறது. அது வரை ஜாலியாக போகும் வாழ்க்கையில், என்ன செய்வது என்ன ஆவது என்பது பற்றிய எதிர்பார்ப்புகளும், ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையும், வாழ்க்கையில் முதல்முறையாக பயமும், பதட்டமும் எட்டிப்பார்க்கின்றன!

என்ன பாடம் படிக்க வேண்டும், எந்த துறைக்கு போக வேண்டும் என்பதும் ஓரளவு சுற்றுப்புறத்தை பொறுத்து அமைகின்றன. எனக்கும் இந்த பருவத்தில் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டன. நாங்கள் மேல அலங்கத்தில் இருந்த போது, கோபால் என்று ஒரு அண்ணா இருந்தார். கடுமையான வாழ்க்கை சூழல்களுக்கு நடுவே, படிக்க வேண்டும் என்ற வெறியுடன் முன்னேற துடித்தவர் அவர். படிப்புக்கு இடையில் பார்ட்டைம் புக் சர்குலேஷன் நடத்தி வந்தார்; அந்த வகையில் எங்களுக்கு பரிச்சயமானார். அப்போது, எங்கள் சுற்றத்தில் இஞ்சினியர்கள்/டாக்டர்கள் மிக குறைவு. கோபால் அண்ணா, திருச்சி ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகும், விடுமுறை நாட்களில் எங்களை சந்திக்க தவறவில்லை. பொறியியல் துறையில் நான் நுழைந்ததற்கு, அவரே முதல் காரணம். பின்னாளில் கோபால் அண்ணா எண்டிபிசி டெல்லியில் சேர்ந்து விட்டார் என்று கேள்வி. இன்று அவர் எதாவது ஒரு உயர்பதவியில் இருப்பார் என்று நம்புகிறேன்! எனக்கு அவர்தான், அப்துல் கலாம்!! :)))


என் அப்பாவின் கஸின், எஸ்.பி.சீனிவாசன் சித்தப்பா, காரைக்குடி/பொன்னமராவதியில் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில்,ஹிஸ்ட்ரியில் டபுள் எம்.ஏ அவர். ரேடியோவிலும் பேசுவார், பெரிய படிப்பாளி. அவரும், அவரது அப்பா-எங்கள் சின்ன தாத்தாவும், நானூறுக்கு மேல் மார்க் வாங்கணும் என்று மந்திரம் போல எனக்கு உருவேற்றியவர்கள்.. :)) சித்தப்பா, எனக்கு பாடபுத்தகங்களையும் கொடுத்து ஊக்கப்படுத்தி வந்தார்.

எனது பள்ளி சீனியர்களில் பலர் அப்போது பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்து வேலைக்கு போனார்கள்; பதினெட்டு வயதிலேயே கைநிறைய சம்பளம் என்பது ஒரு அட்ராக்டிவ் ஆப்ஷனாக இருந்தது அப்போது!

சரி, படிப்பை விட்டு கொஞ்சம்.. வீட்டுக்கு போவோம். ராசாத்தி அம்மா வீட்டிலிருந்து, வீடு மாறி விட்டோம் இப்போது. லோகேஷன்? அய்யங்கடை தெரு பக்கத்திலே, காசு கடைதெரு. அங்கேதான், நகைகள் செய்யும் கடைகள் இருக்கும். துருத்தி போல நெருப்பு உருக்க, அமிலங்கள் சூழ, கடைகள் மினி லாபரெட்ரி போல இருக்கும்; பக்கத்து சாக்கடை மண்ணை கூட தங்க துகளுக்காக அலசி, ஆராயும் பாவப்பட்ட மக்களும் உண்டு! :((

காசு கடை தெரு இறுதியில், நாதன்ஸ் காபி! அவர்கள் ப்ரத்தியேக பார்முலா, காபி டேஸ்ட் அந்த ஏரியாவில் ரொம்ப பிரபலம். தெரு முனையிலிருந்து, குறுக்காக உள்ளே வந்தால், கொஞ்ச தூரத்தில் நாலு கால் மண்டபம்! அது என்ன நாலு கால் என்கிறீர்களா? மண்டபத்துக்கு குறைந்தது நாலு கால் தானே! நாலுகால் மண்டபத்துக்கு வலது புறம்.. குட்டியாக ஒரு அனுமார். எப்போதும் செந்தூரம் கலந்த வெண்ணையில் குளித்திருப்பார். ரொம்ப சக்திவாய்ந்த, அதே சமயம் ஃபிரண்ட்லியான சாமி! :)) நாமே நேரடியாக தொட்டு கும்பிடலாம்; எண்ணை தீபம் எரிந்து மை போல இருக்கும், தொட்டு நெற்றியில் வைத்துக்கொள்வோம். அதிக பட்ச வேண்டுதல் 25 பைசா, எல்லாமே மனம் போல நிறைவேறி விடும்!!

நாலுகால் மண்டபத்தில், திருவிழா காலங்களில் ஆர்கெஸ்ட்ரா/உபன்யாசம் என்று அமர்க்களப்படும், அவ்வப்போது. மண்டபத்துக்கு நேர் எதிரே.. படிகளில் ஏறினால் முதல் தளத்தில்.. வெங்கடேச பெருமாள் கோயில்! அந்த இடத்தின் முகவரியே அதுதான்; வி.பி.கோயில் ஸ்ட்ரீட் என்று சுருக்கி விட்டார்கள். கோயிலை தொட்டது போல், இடதுபுறம் விறகு கடை, வலது புறம் பெட்டி கடை.. வலது புறம் கூப்பிடு தூரத்தில் எல்.எஸ்.கடலை மிட்டாய் பாக்டரி, தாய் சேய் நலவிடுதி (எங்கள் கிரிக்கெட் கிரவுண்டு) டைப்பிங் இன்ஸ்டிடூயூட்.

கோயில் இடதுபுறம் விறகு கடையை தாண்டி உள்ளே வந்தால், ப வடிவத்தில் ஒரு உள்ளடங்கிய பகுதி.. பெயர்.. தெற்கு மட விளாகம். நந்தா/மகா வீட்டை தாண்டி, ப-வின் முடிவில் 3/2186, அது தான் எங்கள் குடியிருப்பு. தக்ஷ்னா மூர்த்தி பிள்ளை என்று எழுதியிருக்கிறது அல்லவா? அதுதான், வீட்டு ஓனர்களின் மெயின் வீடு! இடதுபுறத்தில், ஒரு ஆள்.. அதுவும் குறுக்காக நடந்து போவது போல சந்து இருக்கிறதல்லவா? அதுதான், எங்கள் வீடுகளுக்கு போகும் வழி!

நீங்கள் குண்டாக இருந்தால், சமயத்தில்.. சந்தின் குறுகலான பகுதியில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்! :)) அல்லது, நீங்கள் நடந்து வரும் போது.. பக்கத்து மாட்டு கொட்டகையிலிருந்து எருமை/பசு மாடுகள் உங்களுக்கு எதிராகவும் வந்துவிடக்கூடும்; அப்போது நீங்களோ அல்லது மாடுகளோ ‘ரிவர்ஸ்’ எடுத்தால் மட்டுமே, ட்ராஃபிக் கிளியர் ஆக முடியும்!! :)))))


இதை எல்லாம் தைரியமாக தாண்டி நீங்கள் வந்தால், சந்து எல் போல வளைய, எங்கள் குடியிருப்பின், தகர கதவும், கொஞ்சம் மூச்சு விடும் அளவுக்கு அகலமாக சிமெண்டு பாதையும் தெரியும். இப்போதும், நீங்கள் கவனக்குறைவாக இருக்க முடியாது! நானும் குமார் அண்ணாவும் விளையாடும் பலகை பேட் கிரிக்கெட்டின் பந்து உங்களை தாக்கி விடும் வாய்ப்புகள் அதிகம்! ஆகவே எச்சரிக்கை!! :)))

அந்த ப்ரைவேட் பாதையின் இடது பவுண்டரி மாட்டு கொட்டகை; வலது புறம் வரிசையாய்.. வீடுகள்.. மொத்தம் நான்கு. முதல் வீட்டில் கொஞ்ச நாள் இருந்தோம்; அதன் மத்திய அறையின் உயர்ந்த பகுதியின் ஓட்டைகளிலிருந்து.. கரப்பான் பூச்சிகளின் படை அவ்வப்போது தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து மூன்றாவது வீட்டுக்கு மாறி விட்டோம்! இரண்டாம் வீட்டில் புதுமணத்தம்பதி பெருமாள் செட்டியார்(லெட்சுமி சீவல், வேலை) மல்லிகா ஆச்சி! செட்டியார், அமைதியே உருவான, காசில் கெட்டியான நல்லவர், மல்லிகா.. டென்ஷன் பார்ட்டி! ஆண்டவன் எப்போதுமே அப்படித்தான் காம்பினேஷன் போடுவார் போலும்!

நான்காம் வீட்டில் அவ்வப்போது மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்; பூர்ணிமா ஜெயராமின் (கொஞ்சம் டார்க்)ஸெராக்ஸ் காப்பியாக, மீனா அம்மா, குட்டி பெண் மீனா, அவர் கணவர் மெய்யப்பன் என்று நினைக்கிறேன்.. கொஞ்சம் படித்தவர்.. சோடாபுட்டி.. மெடிக்கல் டிஸ்ட்ரிப்யூஷனில் இருந்தார்; வித் ஆல்தட் என்று ஆரம்பித்து, அதிலேயே முடிப்பார்.. :)) அவருக்கு எங்க அப்பாவின் சாந்தத்தில் தனி மரியாதை! அவர்கள் மாறி போன பின் கொஞ்ச நாள்.. சித்ரகலா டீச்சர் (டைவர்ஸி என நினைவு!) பின் திருமேனி அங்கிள் என்று மாறி மாறி யார் யாரோ வந்து போனார்கள்!


இப்போது மெயின் வீட்டிற்கு வருவோம்.. தக்ஷ்னா மூர்த்தி பிள்ளை ஒருகாலத்தில் முறுக்கி.. இப்போது தொங்கி போன மீசையுடன், கிழ சிங்கம் போல இருந்தார்; அய்யங்கடைதெருவில், காமராசர் காய்கறி மார்க்கெட் அருகில், மளிகை கடை வைத்திருந்தார். அவர் மனைவி, வயசான அம்மாள், சிரித்த முகமாக 70 எமெம் குங்கும பொட்டுடன், வார்த்தைகளை நிறுத்தி, நிதானமாக அம்மாவுடன் பேசுவார்கள். அவர்கள் பிள்ளைகள், முகத்தில் அம்மை தழும்புகளுடன்.. ப்ருந்தா அக்கா, மைனர் போல மீசை/கண்களுடன் முருகன், தம்பி விடலை ராகவன்.. கடைசியாக.. லஷ்மி! முழு பெயர் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்; அவளுக்கும் என் வயதுதான். சேக்ரட் ஹார்ட் கான்வெண்டில் படித்தாள்; ரொம்ப செல்லம், அம்மா தட்டில் வைத்த சாப்பாட்டோடு ஊட்டி விட முயல, இங்கும் அங்கும் ஓடி தண்ணி காட்டுவாள். அப்படி குழந்தையாய் இருந்த லஷ்மி, பெற்றோர் இறந்து விட, பின்னாளில், யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு.. எல்லாரையும் போல ஆகிவிட்டதாய் நினைவு!

எங்கள் வீடு சின்னதுதான், ஆனால் சந்தோஷமாக வாழ்ந்தோம்; அப்பாவின் உயர்ந்த பட்ச லக்ஸரியான கைதான் பேனுடன், ஈஸி சேரில், பொறி/கடலை கொறித்தலுடன் என் படிப்பும், இனிதாக தொடர்ந்தது!

படிப்பு இல்லாத நேரத்தில், அரண்மனை/பீட்டர்ஸ் க்ரவுண்டில் கொளுத்தும் வெயிலில், கவர்பால் கிரிக்கெட்டில் காலம் கழியும்; வருட விடுமுறையில், பெரியப்பா/பெரியம்மா குழந்தைகள் நிம்மி அக்கா, குமார் அண்ணா, ஜெயஸ்ரீ வர, டே அண் நைட், கேரம் போர்ட்/செஸ்/சீட்டு கட்டு ப்ள்ஸ் சாப்பாடு/நொறுக்குதீனி என்று “நிலவுகள் சேர்ந்து.. பூமியில் வாழ்ந்தது.. அது ஒரு பொற்காலம்’ தான்!

குடித்தன காரர்களிடையே அவ்வப்போது, சிறுசிறு சண்டைகளும் உண்டு; ஒரு நாள் ராகியும், (ஓனர் பையன்- ராகவன்) பெருமாளும், மொட்டை மாடியில் படுத்து கொண்டு, எதையோ பார்த்து பயந்து ஓடி வந்து விட்டார்கள்! எல்லாரும் அன்பாகவும் இருப்பார்கள், அவ்வப்போது அடித்துக்கொள்ளவும் செய்வார்கள்! :)))

பத்தாம் வகுப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது. ரிசல்ட் வரும் அன்று, நண்பர்கள் சண்முகராஜ், பாஸ்கர், மாதவன் ஏரியாவுக்கு போயிருந்தேன். வீட்டுக்கு வருவதற்குள், பெரிய களேபரம் நடந்து விட்டது!

முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அல்லவா? விசித்திர குள்ளன், வாத்தியார்களின் அடி/உதை ஃபேவரிட் ‘ஜான் ப்ரிட்டோ’? அவனால் தான் களேபரம்..!

அவன் ரிசல்டை தப்பும் தவறுமாக பார்த்து விட்டு.. அம்மாவிடம்.. “பாலா அம்மா.. நான் பாசுங்க.. ஆனா பாலு ஃபெயிலு..!!!!” என்று ஒரே சமயத்தில் எப்படி.. இரண்டு தப்புகள்(?!) நடைபெற முடியும் என்பது போல புலம்பி இருக்கிறான்!

அம்மாவுக்கு ரிசல்ட் பற்றி கூட பயமோ கவலையோ இல்லை; அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்! பையன் அவசரப்பட்டு எதாவது தவறான முடிவு எடுத்து விடக்கூடாதே என்று மிகவும் பயந்து விட்டார்! நான் வீட்டுக்கு வந்து, பாஸாகி விட்டேன் என்று சொன்ன பின் தான்.. அவருக்கு.. நிம்மதி!! :)))))


பாஸான சந்தோஷத்துக்கு பிறகு, மார்க் பற்றிய கவலை.. 25 பைசா வேண்டுதலுக்கு செவி சாய்த்து.. நாலுகால் மண்டபத்து ஆஞ்சனேயர்.. 400+ மார்க் கொடுத்து.. அருளி விட்டார்!! :))

பாலிடெக்னிக் போறேன் அப்பா, என்று நான் குதிக்க.. அப்பா.. ப்ளஸ் 2 படி, டிகிரிக்கு போகலாம் என்று சொல்லி முடித்து விட்டார்!

மீண்டும் k.h.s.s..!! மாதவராவ் சாரிடம் இண்டர்வியு.. இங்க்லீஷ் மீடியம் ஃபர்ஸ்ட் க்ரூப்புக்கு 125 ரூ! அப்பா 100ரூ டொனேஷன் தருகிறேன் என்றார்; அப்படின்னா தமிழ் மீடியம்தான் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார், மாதவராவ்! அப்பா 25ரூ பார்க்காமல், இங்க்லீஷ் மீடியத்திலேயே போட்டுவிட்டார்!

சரி..சரி.. உங்களை ரொம்ப போர் அடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்! ப்ளஸ் 2 நினைவுகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா? வாழ்க்கையின் நிதர்சனங்களை எனக்கு உணர்த்திய அந்த அனுபவங்கள், விரைவில்!

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

2 comments:

ராமலக்ஷ்மி said...

அந்தந்த கால கட்டத்திற்கே உங்களோடு எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க, ராமலஷ்மி,

ஒரு வழியா, விடுமுறையிலிருந்து மீண்டு(ம்)வந்து விட்டேன்; அடுத்த பதிவும் போட்டாச்சு! ஒரு மாசத்து பழைய வலை கணக்கையும் இனிமேதான் தேடி படிக்கணும்! உங்க வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி, நன்றி!