January 12, 2010

சட்டையும், அசட்டையும்

சட்டையும், அசட்டையும்
தமாம் பாலா

காலையில் எழுந்து கைகளை உரசிக்கொண்டு உள்ளங்கையை பார்த்த போது, மோதிர விரலுக்கு நேர் கீழே கொஞ்சம் போல தோல் உரிந்தது போல தெரிந்தது; பாம்பு சட்டை உரித்தது போல..

இன்றைக்கு வியாழக்கிழமை பிள்ளைகளோட யூனிஃபார்ம் துணிகளை சலவைக்கு கொடுத்திடுங்க, இல்லைன்னா சனிக்கிழமை அவங்க ஸ்கூல் போக முடியாது-இது ராதிகா

சே.. இந்த அலி வேற ஊருக்கு போயிட்டான்; நாமளே லாண்டரிக்கு போக வேண்டியதாயிடுச்சு; பேசாமே பாம்பாவே பொறந்திருக்கலாம். புதுசு புதுசா சட்டை உரிச்சு கிட்டே இருக்கலாம். வாங்குறது, துவைக்கிறது, தேய்கிறது அப்படின்னு எந்த தொந்தரவும் இல்லை.

சட்டை.. சட்டை, அந்த ஒற்றை சொல்லில் சிறிது நேரம் மனம் சுற்றி வந்தது. ஆதிக்காலத்திலிருந்தே எழுத்துக்கள் மாறி வந்தது போல இலை தழைகளிலிருந்து, மிருக தோல் ஆடையிலிருந்து, மர உரியிலிருந்து சட்டைகள் புது புது ஃபேஷனாக மாறி மாறி வந்திருக்கின்றது.

ராஜ ராஜ சோழன் காலத்தில் மேலுக்கு ஒரு துண்டும் ஆபரணங்களும் இருந்திருக்கலாம்; சிலையில் உள்ளது போல. ஏ.பி.நாகராஜன் புராண படங்களில் பொது மக்கள் கயிறு வைத்து கட்டும் அங்கிகளை அணிந்து இருப்பார்கள்; ராஜா காலத்து எம்.ஜி.ஆர் படங்களில் அவர் கிட்டத்தட்ட ஒரு ஃப்ராக் போன்ற உடை அணிந்து சுழன்று சுழன்று கத்தி சண்டை போடுவார்.

இப்போது நாம் நினைத்தபடி சுதந்திரமாக இஷ்டப்படி சட்டை போடுகிறோம்; ஆனால் நூற்றாண்டு காலத்துக்குள் தென் மாவட்டங்களில் மேல் சட்டை போடுவதற்கே குறிப்பிட்ட இன மக்கள் போராட்டங்கள் நடத்தவும் வேண்டியிருந்திருக்கிறது. சுமார் 50-60 ஆண்டுக்கு முன் கூட மக்கள் மேல் கோட் போட்டு வேட்டி கட்டி நடமாடி இருக்கின்றனர்.

நம் ஊரில் டாக்டர், வக்கீல், போலீஸ், இராணுவம் என்று போட்டிருக்கும் சட்டையை உடையை பார்த்தே அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஸஃபாரி உடையை பார்த்தால் மினிஸ்டர் பி.ஏ என்று நேற்று சிசேரியனில் பிறந்த குழந்தை கூட சொல்லி விடும்.இது போன்ற துறைகளில் இல்லாத சாமான்ய மனிதர்கள் அணியும் சட்டைகள் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் நாட்களில் ஒரு சட்டைக்கும் இன்னொரு சட்டைக்கும் குறைந்த பட்சம் 365 நாள் இடைவெளி இருந்தது. (தீபாவளி தானுங்க :-) தஞ்சை ஆத்துப்பாலத்திற்கு அருகே எல்.ஐ.சி அலுவலகத்தை தொட்டாற் போல் ஒரு டைலர் கடை இருந்தது. பெயர் மறந்து விட்டது; ஜஸ்டின் டைலர் என்று நினைக்கிறேன். ஒரு சட்டை தைப்பதற்கு குறைந்தது மூன்று முறை அங்கு விஜயம் செய்ய வேண்டி இருக்கும்.

முதல் முறை, அளவு கொடுப்பதற்கு; மூன்றாம் முறை தைத்த துணியை வாங்குவதற்கு. அப்போ, இரண்டாம் முறை எதற்கு? அது ட்ரையல் பார்ப்பதற்கு! அப்போது தான் கட்டி முடிந்தும் முடியாமலும் இன்னும் உள்பூச்சு பூசாத வீடு போல, சட்டை கட்டிங் முடிந்து தையல் போடாமல், நூல் பிசிறோடு குண்டூசிகளால் இணைக்கப்பட்டிருக்கும். ட்ரையல் பார்த்தோமோ தப்பித்தோம்; இல்லையென்றால் காலமெல்லாம் தாத்தா சைஸ் சட்டையோடு ‘சோளக்கொல்லை பொம்மையாக’ நடமாட வேண்டியது தான்.

கல்லூரி நாட்களில் ப்ளேசருக்கு பணம் கட்டி அது வருவதற்குள் படிப்பே முடிந்துவிட்டது; வேலைக்கு மனு போட ‘கோட்டு போட்ட படம்’ வேண்டுமென காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள புகைப்பட கடைக்கு போன போது, பட்டனே இல்லாமல் அழுக்கு கோட்டு இலவசமாக வாடகைக்கு கிடைத்தது; நல்ல வேளையாக கருப்பு வெள்ளையில் எதுவும் தெரியவில்லை.

சாப்பாட்டு டேஸ்டிலிருந்து, சினிமா பாட்டு வரை புருஷன் பெண்டாட்டிக்கு நடுவே எதுவும் ஒத்து போவதில்லை; சட்டையும் அந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல. ஏன் சட்டை என்ற பெயரையே அவள் ஒத்துக்கொள்ளவில்லை! “சட்டையாம், சட்டை.. சொக்காயை போய் எப்படி சொல்கிறார்கள் பார் பாப்பா! சுத்த தஞ்சாவூர் வில்லேஜ் மேன்” என்றாள், அவள் என்னவோ லண்டனிலிருந்து வந்து இறங்கியவள் போல.

வெளிறிய, கோடு இல்லாத கட்டம் இல்லாத சட்டையை நான் எடுப்பேன்; போங்க நீங்களும் உங்க மோர் குழம்பு டேஸ்டும் என்பாள். அவள் எடுக்கும் வில்லன் சட்டைகளை போட என் பர்ஸனாலிட்டி(?!) ஒத்துக்கொள்ளாது. எப்போதாவது சட்டை தேர்ந்தெடுக்க குழப்பம் வரும் போது, அவளிடம் சாய்ஸ் கேட்பேன்.. சகிக்கலை.. என்று அவள் முகம் சுளித்து விட்டால், ஐ.எஸ்.ஐ முத்திரை கிடைத்தது போல அதையே எடுத்து விடுவேன்.

சவுதிக்கு வந்த பின்னால், எனது ‘சட்டை அறிவு’ இன்னும் வளர ஆரம்பித்து விட்டது. உடன் வேலை செய்யும் ஃபிலிபினோ நண்பர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு சட்டையே ‘பனியன்’ தான் வரும் போது கிட்டத்தட்ட ‘உள் பனியன்’ ‘ஹவாய் செருப்பு’ முதல் மாத சம்பளம் வந்ததும் காஸ்ட்லி டீ ஷர்ட் என்ன ஸ்போர்ட்ஸ் ஷூ என்ன என்று அமர்க்களப்படும். ஆனாலும் புலி பசித்தாலும் ஷர்ட் போடாது என என்றும் பனியன் தான். தப்பித் தவறி என்றவது பட்டன் வைத்த சட்டை போட்டால், துணிந்து.. “ஹேப்பி பர்த் டே பாரே” என்று வாழ்த்திவிடலாம்.

டார்க் ப்ரவுன் கலரிலோ அல்லது சாம்பல் கலரிலோ நம்ம ஊர் ஜிப்பா மாதிரி, ஆனால் வித்தியாசமாக காலர் வைத்து சட்டை போட்டுக்கொண்டு ஏழடி உயரத்தில் வருபவர்களை பார்த்திருக்கின்றீர்களா? 18 லிட்டர் மின்ரல் வாட்டர் முழு கேன்களை கைக்கு ஒன்றாக, காலி கேன் தூக்குவது போல அலட்சியமாக தூக்கி வருவார்கள் (நாம காப்பியடிக்க முயன்றால் முதுகு வலியும், ரூஃபினாக்கும் கியாரண்டி.. இன்ஸூரன்ஸ் புண்ணியத்தில்) இரண்டு பேர் தூக்க சிரமப்படும் சன்னல் ஏசியை அலட்சியமாக ஒத்தை கையால் தூக்கி நிறுத்துவார்கள். சரியாக கண்டுபிடித்து விட்டீர்களே, பாகிஸ்தானிய/ஆப்கானிஸ்தானிய ஆசாமிகளே அவர்கள்!

சவுதிகள் அணியும் அப்பழுக்கற்ற வெள்ளை அங்கிகள், கொளுத்தும் வெயிலிலே பளீர் என மின்னும்; தொழிற்சாலையில் மேல்சட்டையும்,கால்சட்டையும் சேர்ந்த ஆடையை பார்த்ததும் என் போன்ற வாழைப்பழ சோம்பேறியின் மூளை வேகமாக வேலை செய்தது (யோசிக்கிறது மட்டும் வேகமா, செயல் எல்லாம் ரொம்ப நிதானம்!)

லேஸ் கட்டின ஷூவிலே காலை நுழைச்சுகிற மாதிரி, முழங்கை வரைக்கும் மடிச்சு வச்ச சட்டையை ஏன் யாரும் கண்டு பிடிக்கலை? டை-யோட இணைந்த ரெடிமேட் சட்-டை எவ்வளவு வேலை மிச்சம்.. அப்படின்னு சோம்பலும், சோம்பலை சார்ந்த பகுதிகளுமா ஆறாம் திணையா கற்பனை ஓடிக்கிட்டிருக்கு.

பாதி நாளு ஆபீஸ் கிளம்பு போது பொத்தான் எல்லாம் போட்ட பிறகு தான் ஒரு பக்கம் இறங்கி, ஒரு பக்கம் ஏறி இருக்கும்; சரியா சட்டை போட்டுக்கிறது இருக்கே..அதுவே பெரிய குறுக்கெழுத்து போட்டி மாதிரி!

முடிவா யோசிச்சு பார்க்கும் போது, நம்ப உடம்பே நம்ம ஆத்மாவோட சட்டைதான்னு ஞானிகள் சொல்லி இருக்கிறது நினைவுக்கு வருது. நாம விரும்புகிற, விரும்பி உடுத்துகிற சட்டைகள் நம்ம எண்ணங்களோட பிரதிபலிப்பாகவே இருக்குது. உடுத்துற சட்டையை தவிர பாவனையா நாம மகன், கணவன், அப்பா, தாத்தா, மாணவன், ஆசிரியன், தொழிலாளி, முதலாளி அப்படின்னு வேற வேற சட்டைகளை போட்டபடியே இருக்கோம்.

ஒரு சட்டைக்கு மேலே இன்னோரு சட்டையை போட்டு பார்க்கிற போது சரியான அளவு கிடைக்கிறதில்லே; ஒன்றுக்கு பத்து சட்டையை ஒரே நேரத்திலே போட்டு எந்த பிரயோசனமும் இல்லே! இதிலேர்ந்து கதையோட நீதி என்ன? ஒரு சட்டையை கழற்றினால் தான் இன்னொரு சட்டையை போட முடியும் (ஆகா.. கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாய்ங்க)

இந்த சட்டை பதிவை கொஞ்சம் கூட சட்டை செய்யாம, உளுந்தூர் பேட்டையில் சாலை விபத்து, திருநெல்வேலியில் அரிவாள் வெட்டு, ஹாக்கி வீரர்கள் வேலை நிறுத்தம்-னு சன்ந்யூஸ் பார்த்து உச் கொட்டிட்டு, அசட்டையா, பக்கத்திலே இடி விழுந்தாலும் கலங்காத ஒட்டகமா நீங்க இருந்தா, நீங்க வளைகுடாவுக்கு வந்து 10 வருஷம் முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்!

அப்படி இல்லாமே, சட்டையிலே இங்கே தையல் பிரிஞ்சிருக்கு; அங்கே ஒரு ஓட்டைன்னு சொன்னா, நீங்க ஊரிலேர்ந்து ஃப்ரஷ்ஷா வந்திருக்கீங்கன்னு ஆகுது. உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். முதல்லே.. “யாரு தெச்ச சட்டை..அது தாத்தா தெச்ச சட்டை”ன்னு வேக வேகமா வாய் குளறாம 10 தடவை சொல்லி பாருங்க. சரியா சொல்லிட்டீங்கன்னா, பதிவை முதல்லேர்ந்து இன்னொரு முறை முழுக்க படிங்க, எதாவது கிடைக்கும்!

நான் கொஞ்சம் லாண்ட்ரி வரைக்கும் போகணும்..வரட்டா நண்பர்களே?

சட்டை கிழிந்தது!

January 5, 2010

க்வாட்ராங்களும் கால் டபரா காப்பியும் – ஒரு கொசுவர்த்தி சுருள்


க்வாட்ராங்களும் கால் டபரா காப்பியும் – ஒரு கொசுவர்த்தி சுருள்
தமாம் பாலா

போன மாதம், எங்கள் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது; யங் அலுமினி (அலுமினிய பாத்திரம் இல்லைங்க, சமீபத்தில் அந்த கல்லூரியில் படிப்பை முடித்தவங்க, பழைய மாணவர்கள் :)) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நடைபெறும் இடம் கல்லூரி வளாகத்தின் க்வாட்ராங்கிள் என தெரிவித்து.

கல்லூரி விட்டு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; இருந்தாலும் அவினாசி ரோட்டுக்கு இருபுறமும் விரிந்திருக்கும் கல்லூரி வளாகம், இன்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூட், வகுப்பு அறைகள், லேப்கள், விளையாட்டு மைதானங்கள், வட்ட வடிவ ஏ,பி,சி,டி ஹாஸ்டல் பிளாக்குகள், பெண்கள் ஹாஸ்டல்(!) மற்றும் முதல் வருட தங்கலான ஜி பிளாக் கொட்டடி எல்லாம் கண் முன்னால் வந்து போயின, ஒரே கணத்தில். ஆனால் க்வாட்ராங்கிள் மட்டும் சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.

கல்லூரி நண்பர்கள் யாஹூ குழுமத்தில், சக மாணவி சித்ரா கல்லூரியின் அட்மின் பில்டிங் பக்கத்து மேடையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இரும்பு கட்டிடம் தான் அது என மின்னஞ்சலில் அறிவுறுத்தினார். நாங்கள் படித்த காலத்தில் அந்த கட்டுமானம் இருந்ததாக நினைவு இல்லை; பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நாங்கள் படித்த காலத்து கல்லூரி வளாகத்தை மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்த போது கூடவே வேறு ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது.(அதான் உடனே கொசுவர்த்தி ஏத்திட்டேன்)

கல்லூரி காலத்தில் நான், ஆளும்கட்சி, எதிர்கட்சி என மாறிமாறி போகும் அரசியல்வாதி போல, கொஞ்சநாள் சித்தி வீட்டில், கொஞ்சநாள் கல்லூரி விடுதியில், பிறகு 2 வருடம் ஜிடிநாயுடு ஹாஸ்டலில் என மாறிக்கொண்டே இருந்தேன்.

கல்லூரிக்கு வெளியே தங்கிய காலங்களில், பெரும்பாலும் பஸ் பயணம் தான். நடுவே ஒரு மாறுதலுக்காக, தஞ்சாவூரிலிருந்து பெரியப்பாவிடம் கேட்டு ஒரு அட்லஸ் சைக்கிளை ரயில் மூலமாக இறக்குமதி செய்து கொண்டேன்; அப்போதைக்கு பென்ஸ் கார் வைத்திருப்பது போன்ற திருப்தியை தந்தது அந்த பழைய சைக்கிள்!

வழக்கம் போல கல்லூரிக்கு தாமதமாக சைக்கிளில் வந்து இறங்கி, ஹாஸ்டல் போகும் வழியில் உள்ள இரும்பு கட்டிடம் அருகே அதை நிறுத்தி விட்டு, வகுப்புக்குள் நுழையும் போது சொல்ல வேண்டிய சால்ஜாப்புடன் உள்ளே சென்றேன். மாலையில் சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்து பார்த்தபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது...

எப்பவும் வைத்த இடத்திலே சமர்த்தாக நின்றிருக்கும் அந்த அட்லஸ் சைக்கிள் காணாமல் போய் விட்டது! அதன் பூட்டு ஒரு சாதாரண பூட்டு; கொண்டை ஊசி போட்டால் கூட திறந்திருக்கும். சே.. ட்யூப் லாக் போட்டிருக்கலாம், முன் யோசனையே இல்லாமல் எப்பவுமே இப்படித்தான்... கையில் சைக்கிளின் சாவியை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் இருந்த இரும்பு கட்டிடமோ, யார் எடுத்தார் என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நான் சொல்லமாட்டேன் என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தது.

அப்போது என வகுப்புத் தோழிகள் சரசவாணியும்( எங்க ஊர்ஸ்) அவளது இணைபிரியா தோழி புஷ்பலதாவும் என்னை பார்த்தவாறே லேடீஸ் ஹாஸ்டல் நோக்கி சென்றார்கள். இருந்த மன குழப்பத்தில் அவர்களுக்கு ஒரு ஹலோ சொல்லக்க்கூட தோன்றவில்லை.

‘போலீஸ்-லே கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாக்க, வேறே ஒரு சைக்கிளாவது கிடைக்கும்; யாரோ ஒரு புண்ணியவான் அறிவுரை சொன்னார். சரி அதையும் தான் பார்த்துடலாம்னு, இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக.. ஸாரி.. வாழ்க்கையிலேயே முதல்முறையாக, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் காலேஜ் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆனேன்.

ஓங்கு தாங்காக முறுக்கு மீசையோடு இருந்த போலீஸ்காரர் அப்போதுதான் வந்த காபியை டபராவில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார். திக்கித்திணறி நான் சொல்லி முடிக்க அவர் எதுவும் பேசாமல், குடித்துக்கொண்டிருந்த காப்பியில் கொஞ்சம் போல டபராவில் ஊற்றி என்னிடம் நீட்டினார். நான் அதை குடித்து முடித்தவுடன், என்னிடம் க்ம்ப்ளெய்ண்ட் எழுதி வாங்கிக்கொண்டு, பார்க்கலாம் தம்பி என்று சொல்லி அனுப்பி விட்டார். அதன் பின் எந்த தகவலும் இல்லை; சைக்கிள் போனது போனது தான்.

ஏற்கனவே, மணி (நான் தாங்க!) ஏதோ படிக்கறானே தவிர அவனுக்கு சாமர்த்தியம் போதாது, பயந்தாங்கொள்ளி, போன்ற பட்டப்பெயர்களோடு ‘சைக்கிளை தொலைத்தவன்’ என்ற பெருமையும்(?!) சேர்ந்து விட்டது. காவலர் கொடுத்த கால் டபரா காப்பி மட்டுமே எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசு.

இத்தோடு இந்த கொசுவர்த்தி எரிந்து முடிகிறது. மீண்டும் வேறு ஒரு கொசுவர்த்தியோடு உங்களை சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் அன்பு நண்பன் தமாம் பாலா!

January 1, 2010

P.E.B Building அப்படின்னா என்னங்க? தொடர் 1

P.E.B Building அப்படின்னா என்னங்க? தொடர் 1
தமாம் பாலா


அன்பார்ந்த சக வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நாமளும் மார்ச் 2008லே வலைபதிவுலே குதிச்சு (அரசியல்லே குதிச்சு.. இல்லேங்க :-) விளையாட்டுப்போலே தட்டுதடுமாறி 60 பதிவுகள் போட்டாச்சு ; இன்னும் ஒருமுறை கூட துறை சார்ந்த பதிவுகள் எதுவும் போடலையேன்னு எனக்கே ஒரு குறை இருந்துச்சு. அந்த குறையை நிவர்த்தி செய்ய புத்தாண்டிலே நல்ல ஒரு தொடக்கமாத்தான்.. இந்த பதிவு!

கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டை கட்டிப்பார் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற தமிழ் பழமொழி. அன்னாடம் காய்ச்சி முதல், அம்பானி வரை, வாழ்க்கையிலே சொந்தமா ஒரு வீடாவது கட்டிடணும் என்பது தான் தலையாய கனவு. வீ.சேகர் லோ பட்ஜெட் குடும்ப படத்திலேர்ந்து, ஷங்கரின் பிரம்மாண்டமான பல கோடி பட்ஜெட் படம் வரைக்கும் இருக்கிற மாதிரி, வீடுகளின் அளவுகள், அடுக்குகள், அறைகள், அவற்றின் விலை மதிப்பீடுகளின் வித்தியாசம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

கடந்த 100 ஆண்டுகளிலே, இந்திய வீடுகளை பின்னோக்கி பார்க்கும் போது, ஓலை/கீற்று மண் குடிசை, ஓட்டு வீடு, காரை/செங்கல் சுவர் வீடு, மர உத்திரம் தாங்கிய மெட்ராஸ் டெரெஸ் எனும் ஒட்டு வீடு, மற்றும் தற்காலத்தைய கான்க்ரீட் சிலாப் உள்ள ஃப்ரேம் ஸ்ட்ரக்சர் எனும் கான்க்ரீட் தூண்கள் மற்றும் கான்க்ரீட் பீம்(உத்திரம்) உள்ள கட்டிடங்கள் என பலபல வகை பரிணாம வளர்ச்சிகள் தென்படுகின்றன.






மேற்கூறிய எல்லா வகை வீடுகளும், குடியிருப்பு மற்றும் அலுவலக உபயோகங்களுக்காகவே பெரும்பாலும் கட்டப்படுகின்றன. இந்த கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் கான்க்ரீட் ஆனது இன்ஸிட்டு (insitu) என்று சொல்லப்படும் வகையில், கட்டிடம் வளர வளர கலந்து, ஊற்றி, காய வைத்து கெட்டி படுத்தப்படுகிறது.

கான்க்ரீட் தூண்கள், உத்திரங்கள், சிலாபுகள், சுவர்கள் ஆகியவற்றை தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரித்து பின் கட்டிட ஸைட்டில் (site) கொண்டு வந்து சேர்த்து, கோர்த்து கட்டும் முறையானது ப்ரீ ஃபேப்ரிகேட்டட் ஸ்டரக்ட்சர் ( pre fabricated structure) எனப்படுகிறது. பெரும்பாலும், மனித வளம் குறைந்த, ஊதியம் அதிகமாக உள்ள மேலை நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. நமது நாட்டில், குறைந்த அளவில் சிப்போரக்ஸ் நிறுவனம் செய்யும் கட்டிட பொருள்கள் மற்றும் ரயில்வே கான்க்ரீட் ஸ்லீப்பர்கள் இந்த வகையில் உள்ளன (நான் பதினைந்து வருடங்களாக இந்தியாவுக்கு வெளியே வசிப்பதால், தற்போதைய நிலவரம் பற்றி, அறிய ஆவலாக உள்ளது, கட்டுமானதுறை சார்ந்த சகபதிவாளர்கள் இது பற்றி எழுதலாம்)

தொழிற்சாலை கட்டிடங்களைப்பற்றி பேசும் போது, இரும்பு கட்டிடங்களே அதிகம் எனத்தோன்றுகிறது. ஆங்கிலேயர் காலத்து இரும்பு கட்டிடங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பாலங்களில், ஹாட் ரோல்டு (Hot rolled) என்கிற இரும்பை உருக்கி வார்த்த தூண்கள்/உத்திரங்கள் கொண்டு ரிவெட் இணைப்புகளால் (Rivetted connection) கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மெல்ல மெல்ல, ரிவெட்டுகளுக்கு பதிலாக போல்ட்/நட் மற்றும் வெல்டிங் இணைப்புக்கு மாறிவிட்டோம் (bolted and welded connections). 70கள் வரை இது போன்ற கட்டிடங்களுக்கு அஸ்பெஸ்டாஸ் மற்றும் ஜி.ஐ தகடுகளின் கூரை போடப்பட்டது, ஜே போல்டுக்களால் உத்திரத்தோடு இணைத்து; காற்றடித்தால் பறந்து விடாமல். 80களின் இறுதி வருடங்களில், ஒரு புதுவடிவ கட்டுமானம் தொடங்கியது. இதை தற்காலத்து பி.இ.பி (P.E.B) வகை கட்டிடங்களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். ஆம், இந்தியாவில் டி.ஐ (முருகப்பா குழுமம்) மற்றும் நாகர்ஜுனா நிறுவனங்கள் ஸெட் (Z) பர்லின் அல்லது உத்திரம் ( நன்கு கவனிக்கவும், Z பாதுகாப்பு பிரிவு அல்ல :-) சந்தைக்கு வந்தது. இவை கோல்டு ஃபார்ம் (cold form elements) வகையை சேர்ந்தவை; இரும்பை உருக்கி ஊற்றுவதற்கு பதிலாய், மெல்லிய தகடுகளை வளைத்து செய்யப்படும் உத்திரங்கள் இவை!

தொழிற்சாலை கட்டிடங்களில் தூண்களை, உத்திரங்களை, கூரை ஆகியவற்றை சைட்டில் கிரேன் உதவி கொண்டு இணைத்து அடுக்கி, அவற்றை வெல்டிங் மற்றும் போல்டுகள் துணை கொண்டு கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்; அதுவும் சற்று கவனக்குறைவாய் இருந்து விட்டாலோ, தொழிலாளர் மேலே விழுந்து, காவும் வாங்கி விடும் :-( இதனை கட்டும் காலத்து விபத்துக்கள் என்பர் (erection time accidents/collapse)

பிள்ளைகள் விளையாடும் பில்டிங் செட் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? ஒரே மாதிரி உதிரிகளால், விதம் விதமான அழகான கட்டிடங்களை நொடியில் கண்ணை கவரும் விதமாக செய்யும் வண்ணம் வடிவமைக்க பட்டிருக்கும் அவை! இதே போல பெரிய கட்டிடங்களுக்கும் ஒரு பில்டிங் செட் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இருக்கிறது, அதுதான் பி.இ.பி (P.E.B) என செல்லமாக அல்லது சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரி இன்ஜினீயர்டு பில்டிங்! (pre engineered building )

ஒரே நாளில் பி.இ.பி பற்றிய மொத்த விவரங்களையும் பார்த்தால், போரடித்து, ஓவர் டோஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளதால், மேலும் பல விவரங்களை வரும் பதிவுகளில் தர நினைக்கிறேன். புத்தாண்டில் தொடர்ந்து சந்திப்போம், என்ன சரியா? :-))