May 26, 2018

யாரும் போகாத பாதை

யாரும் போகாத பாதை
(தமாம் பாலா)

மஞ்சள் பூத்த கானகத்தில்
மண் பாதைகள் பிரிந்தன
இரண்டாய் இடதா வலதா
இதில் எனது பாதையென

மரங்களுக்குள்ளே சென்று
மறையும் பாதைகள் ஊடே
பார்த்த போது இடது பாதை
பாதம் பல பட்ட தடத்துடனும்

வலது பாதை புல் மண்டியே
வசப்படாத இயற்கையோடு
புது வாசனை மாறாதிருக்க
புரிதல் எனக்குள் முளைக்க

எல்லோரும் போகும் பாதை
எழுதியெழுதி சலித்த கதை
யாரும் போகாத ஒரு பாதை
யான் தெரிவு செய்த பாதை

நல்லூர் சென்று சேர்க்குமோ
இல்லை முன் வைத்த காலை
பின் வைக்க நேருமோ என்ற
பிரச்சினை எதிர் கொள்ளும்

தீரம் தருமே வெற்றி உயர்வு
காலம் காலமாய் ஒரு தேர்வு
காட்டில் பிரிகின்ற இரு வழி
காட்டுவோம் நடந்து நம் வழி

(நன்றி: The Road Not Taken BY ROBERT FROST)

May 25, 2018

பருந்தின் உறக்கம்

பருந்தின் உறக்கம்
(தமாம் பாலா)

உயர்ந்த மரத்தின்  உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்
சிறிதும் ஆடாது அசையாது
கண்களை மூடியபடியே

எனது வளைந்த அலகுக்கும்
கூர் நகங்களுக்கும் நடுவில்
பொய்க் கனவுகள் இல்லை
தேர்ந்த வேட்டைக்கான ஒரு
தேடுதல் ஒத்திகை மட்டுமே

விருட்சத்தின் வசதி உயரம்
தாங்கிப் பிடிக்கும் காற்றும்
தழுவிச் செல்லும் கதிரொளி
இயற்கை தந்த நற்கொடை

என் கண்காணிப்பில் உள்ள
பூமியின் முகம் அது என்னை
அண்ணார்ந்து பார்த்திருக்க
காய்ந்த மரத்தின் கிளையை
இறுகக் கவ்விப் பிடித்த என்
முரட்டுக் கால்கள் இரண்டு

படைத்தல் முழுமை பெற்றது
எனது பாதம் இறகும் செய்து
அந்த படைத்தலையே இன்று
எனது காலடியில் வைத்தேன்

உயர உயர எழும்பிப் பறந்து
ஆர அமர காற்றில் சுழன்று
நின்று நிதானமாகச் சென்று
கொல்லுவதே என் விருப்பம்

இங்கு அனைத்தும் எனக்கு
சொந்தமானது என்பதனால்
பாசாங்குகள் எதுவுமில்லை
என்னுடைய உடல்மொழியில்

மண்டைகளைக் ஒரே குத்தில்
கிழித்தல் எனது எளிய பாணி
நேர்க்கோட்டில் அம்பாய் பறந்து
உயிர்களின் எலும்பைப் பிளந்து
மரணத்தை பரிசளிக்கும் எனது
உரிமைக்கு மறு பேச்சும் ஏது?

சூரியன் என்றும் என் பின் நிற்க
நான் தோன்றியது முதற்கொண்டு
எதிலும் எந்த மாற்றமும் கிடையாது
அதை என் கண்ணும் அனுமதியாது
சகலமும் இங்கு என் கைப்பிடியில்!

(நன்றி: Hawk Roosting by Ted Hughes)

May 13, 2018

வேலை

வேலை
(தமாம் பாலா)

உன் வேலை ஓயாமல் சுழன்றிடும்
உலகத்தின் வேகத்திற்கு இணை
அதன் ஆத்மாவுடன் ஒரு பிணை

சும்மா இருப்பது மாறி வரும் பருவ
கால சூழ்நிலைக்கு அன்னியமாகி
எல்லையில்லா பிரபஞ்சத்தை நாடி

பெருமிதத்துடன் பீடு நடைபோடும்
வாழ்க்கை பேரணியினை விட்டு
விலகிப்போகும் இழிநிலையாகும்

வேலையில் ஆழ்ந்திடும் வேளை
வேய்ங்குழலாய் நீ மாறி விட உன்
இதயத்தில் பிறக்கும் இன்னிசை

இல்லாவிடில் ஒரு பிண்டமாய்
பொல்லாத மௌனத்தில் நாம்
எல்லாரும் ஓய்ந்து விடுவோம்

வேலையே ஒரு சாபம் என்றும்
உழைப்பே துரதிஷ்டம் என்றும்
உரைத்தார் நம் மனம் கெடவே

மாற்றி யோசிப்போம் அதை
ஆற்றும் பணியில் நீ பூமியின்
நேற்றைய கனவு ஒன்றினை

நிறைவேற்றி உன் பிறவியின்
பயனை அடைகிறாய், வேலை
வாழ்க்கையின் மீது கொண்ட

காதல் அன்னியோனிய அன்பு
இரகசியம் அதை உணராமலே
சிலர் பிறந்ததே பாரம் என்றும்

தொழில் என் தலையெழுத்து
என்றெண்ணி வாடியிருக்க
மின்னும் வியர்வை வழிந்து

அழித்திடும் அந்த எழுத்தை
ஊழ்வினை நம் வாழ்வினை
பாழ் செய்யும் இருட்டென்றும்

உரையாடல் கேட்டிருந்தோம்
தேடல் இல்லா வாழ்வு இருள்
அறிவு இல்லா தேடல் இருள்

உழைப்பில்லா அறிவு இருள்
அன்பிலா வேலையும் இருள்
ஈடுபாடு மிகுந்த செயல்கள்

உன்னை உன்னுடனே சேர்த்து
உன்னுள் உறையும் இறையை
உணர வைக்கும் நற்கனிகள்

ஆத்மார்த்தமாய் அனுபவித்து
உற்சாகமாக செய்யும் கடமை
இதயத்தின் நூலிழை எடுத்து

நெய்த பட்டுத்துணி போன்றது
நேசிப்பவர் அணிந்து மகிழவும்
நேர்த்திபட கட்டும் வீடு அதுவே

உற்றாரின் உறைவிடம் ஆகும்
பிஞ்சு விதை பயிரிட்டு பின்னே
அறுவடை செய்வதிலே இன்பம்

அன்புக்கினியர் புசிக்கும் கனி
அகமகிழ்ந்து செய்யும் தொழில்
அனைத்திலும் உன் உயிர் மூச்சு

இணைந்திட வானகத்து வாழ்
முன்னோரும்ஆசி வழங்குவர்
பளிங்குக்கல்லை செதுக்கும்

பணியாளன் தனது ஆவியின்
பரிமாணத்தை கல்லில் காண
மண்ணை உழுவதை விடவும்

உயர்ந்தது அவன் கைத்திறன்
வான வில்லதனை வளைத்து
மானம் காக்கும் நூலாடையில்

பதிக்கும் நெசவாளி சிறந்தவன்
பாதம் காக்கும் செருப்பு தைக்க
பாடுபடும் மனிதனை விடவும்

என்றெல்லாம் உறக்கத்தினிலே
எவரோ சொல்லக் கேட்டதுண்டு
எழுச்சிமிக்க விழிப்பு நிலையில்

எடுத்துரைப்பேன் நானும் இன்று
அடுத்து வீசும் ஆடிமாத காற்றும்
நெடுநெடுவென உயர வளர்ந்த

மரத்திடம் பேசுவதை விட  அதன்
அடியில் காணும் புல்வெளியுடன்
அளவளாவுவதே அதிகம் என்று

காற்றின் குரலை இன்னிசையாய்
மாற்றுபவனே சிறந்த கலைஞன்
ஏற்றம் தரும் நல்லன்பின் வழியே

வேலை செயல் ஆதூரக் காதலின்
வெளிப்பாடே ஆகும் ஆர்வமில்லா
தொழிலில் ஈடுபட்டு கால விரயம்

செய்வதை விட ஆலய வாசலில்
அனுதினம் கையேந்தி அமர்ந்து
உழைப்பவனிடம் பிச்சை எடுத்து

உண்பது மேலானது வெறுப்பில்
சமைக்கும் உணவில் ருசியேது
பசியும் தணியாது வெஞ்சினம்

கொண்டவர் பிழிந்த திராட்சை
ரசமும் விஷமாக மாறி விடும்
தேன் குரலில் தேவதை போல்

பாடினாலும் விருப்பம் இல்லா
ராகம்  முழுவதும் மூடிய வாய்
முனகல் குரலாகவே கேட்கும்

(நன்றி, கலீல் ஜிப்ரான்)

May 12, 2018

குழந்தைகள்

குழந்தைகள்
(கலீல் கிப்ரான், தமிழில் தமாம் பாலா)

உங்கள் குழந்தைகள், அவர்கள்
உங்களது குழந்தைகளே அல்ல
வாழ்க்கை தனது சுயதேடலில்
விளைவித்த மகவுகள் இவர்கள்

உங்கள் மூலம் வந்தவர் ஆனால்
உங்களிடமிருந்து அல்ல, உங்கள்
உடன் வாழ்ந்தாலும் அவர் உமது
உடமையோ உரிமையோ அல்ல

அவர்களுக்கு உங்களது அன்பை
அளியுங்கள் அது மட்டும் போதும்
அவருக்கு உங்கள் சிந்தனைகள்
அவை தேவைப்படுவது இல்லை

ஏனெனில் அவருக்கென்று சுய
எண்ணங்கள் உண்டு, நீங்கள்
எழுப்பிய வீடுகள் குழந்தைகள்
எண்சாண் உடலுக்குக் கூடுகள்

அவர்தம் உயிர்ப்பு என்ற ஆத்மா
அது எதிர்காலத்தில் வாழ்கிறது
அதன் நிழலைக்கூட உங்களால்
அறிய இயலாது  உம் கனவிலும்

குழந்தைகள் போல வாழ்ந்திடவே
விழையுங்கள் தவறியும் அவரை
உங்களைப் போல மாற்றி விடும்
உத்திகள் வேண்டாம், வாழ்க்கை

என்கின்ற பயணம் பின்னோக்கி
என்றும் செல்வதில்லை, நேற்று
என்ற நாளில் தேங்கிடாமல் அடி
எடுத்து முன்னே செல்லும் பாதை

குழந்தைகள் உயிருள்ள அம்புகள்
இழுத்து நாண் ஏற்றிய வில்களே
நீங்கள், எல்லையில்லா தூரத்தில்
எங்கேயோ குறிவைத்து வில்லவன்

உங்களை வளைத்து விடும் பாணம்
உலகங்கள் பல தாண்டிப் பறக்கும்
உவகையுடன் உடல் வளைத்திடுவீர்
உயர்ந்த வில்லவன் பலத்தில் நீரே

அவன் அன்புடனேயே நேசிக்கிறான்
அற்புதமாய் விரைந்து செல்லுகின்ற
அம்பை மட்டுமல்ல அதை செலுத்தும்
அசையாத ஆடாத வில்லையும் கூட!

May 11, 2018

வரைந்து உயர்ந்தவன்

வரைந்து உயர்ந்தவன்
(தமாம் பாலா, திருத்திய பதிப்பு)

நிமிடத்தில் நூறு கோடு போடுவான்
இயந்திரங்களின் வட்ட சதுரங்களும்
வளைவுகளும் நெளிவுகளும் என்றும்
வரைவாளன் அவனுக்கு அத்துப்படி

பள்ளி முடித்ததும் தொழிலைத் தேடி
பட்டயம் பெற்று வென்றவன் இவன்
இவனே ஓவியத்தின் முதலெழுத்து
இன்றியமையாத நல்லுயிரெழுத்து

காகிதத்தில் கோடுகளை வரைந்து
வரைந்து அவன் செழிக்க, வாழ்க்கை
இவன் முகத்தில் பலகோடு வரைந்து
இசைக்கிறது ஒரு இனிய பாடலை

இரவும் பகலும், கண்சிமிட்டாமலும்
வரைவான் அவன், உறவும் பகையும்
உணராது அவனது தவ வலிமையும்
கல்லுடைக்கும் கடின உழைப்பினும்

வலியது, பெரியது கட்டிடத்தின் கீழே
அடித்தளமாய் நின்று அதன் கற்களை
சுவர்களை,கதவுகளை மனதில் தினம்
சுமக்கும் இவனது தவம் கர்ம யோகம்

உலக வரைபடத்தில் இல்லாத இடமும்
உடன் பெறும் முகவரி, இவன் கைப்பட
உருவாக்கிய கட்டுமானக் கவிதையால்
உண்டாகும் இவனுக்கும் ஒரு முகவரி

காகிதத்தில் அவன் போடும் புள்ளி, இலை
கோலங்கள் சிறிதளவும் பிசகுவதில்லை
புது இரத்தத்தை பாய்ச்சும் உற்சாக வேலை
புகழ் எனும் இளமை தரும் கறிவேப்பிலை

இருபதுக்கு முன் இவனது இரு கைகளில்
வருவது சில்லறையாய், இறுதி வரையில்
மிஞ்சுவது  உழைப்பின் ஆத்ம திருப்தியும்
நெஞ்சார்ந்த நேர்மையும் தன் வலிமையும்!