அன்னை யார் அவள்
மனிதப்பெண் தானா
அணில் கோழி ஆடு
மாடுகளிலும் அம்மா
கூடு விட்டுச் சென்று
பாடுபட்டு உணவை
தேடும் தந்தையார்
மீண்டு வரும் வரை
இல்லத்தில் மகவை
பாலூட்டி சீராட்டும்
தேவதை அன்னை
வலியை நோயை
வாய் மொழியால்
சேய் கூறும் முன்
தாய் மொழிக்கும்
முன்பே விழியால்
மொழி பேசுவாள்
அழுகைக்கும் கூட
அர்த்தம் அறிவாள்
அன்னை அவளும்
அன்னையை தேவி
அம்பிகை பராசக்தி
என வழிபடும் நமது
எழில்மிகு இந்தியா
கிரேக்க ரோமாபுரி
கிருத்தவம் தாண்டி
அமெரிக்க நாட்டின்
அன்னா ஜார்விஸ்
கடந்த நூற்றாண்டு
தொடக்கத்தில் தன்
தாய் மீது கொண்ட
தாளாத அன்பினால்
மே மாத இரண்டாம்
ஞாயிறு தினத்தை
அன்னையர் தினம்
என்று அறிவித்தார்
உன் வீட்டு அன்னை
தன்னை போற்றிடு
என்றே அன்னையர்
தினம் அல்ல அதன்
பெயர் அன்னையின்
தினம் என்று அவரும்
இனம் பிரித்த தினம்
இன்று இப்போது என்
அன்னைக்கு நானும்
நன்றி சொல்கிறேன்
நெஞ்சார நண்பரே
நீங்களும் செய்வீரே!