September 23, 2018

கதை

கதை
தமாம் பாலா

ஒரு ஊரில் ஒரு பாட்டியும்
கருகாமல் சுட்ட வடையை
கருங்காக்கை கொத்தியே
பெருமரத்தின் உச்சியிலே

பறந்து போய் உட்கார்ந்தது
ஆற அமர தின்னலாமென
மரத்தின் கீழே நின்றிருந்த
அரக்கு நிறக் குள்ளநரியும்

இதுதான் நல்ல சமயமென
புது நட்புடன் வந்து காகமே
மதுரம் உன் குரலில் கானம்
அதுவே எனக்கும் வேணும்

என்றிடவும் ஏமாளிக்காகம்
தன் வாயைத் திறந்திடவே
பொன்னிற வடை போனது
சொன்ன நரியின் வசமாய்

திருடும் காகமும் ஏமாற்றும்
குறுநரியும் எந்த வகையில்
தரும் நீதி போதனையென
வருங்காலத்தின் சந்தேகம்

உழைத்துப் பிழைப்பவரை
உரசிப் பிழைப்பது ஒட்டாது
உடம்பில் எத்திப் பெற்றதும்
உடன் எளிதில் மறையுமாம்

September 16, 2018

ஓட்டம்

ஓட்டம்
தமாம் பாலா

இட்ட அடி நிலத்தைத் தொட
எடுத்த அடியும் முன்னோட
நில்லாத ஓட்டம் நானோட

எதற்காக ஓடுகிறாய் எனும்
எளிய வினாவுக்கு பதிலாய்
எனக்கு முன்னும் பின்னும்

ஓடுபவரைக் கேளென்றேன்
ஓடி ஓடி உழைக்காதவரையே
ஓரம் கட்ட நினைக்கும் இந்த

அரங்கத்தில் ஓட்டம் உயிரின்
அடையாளம் நடப்பதென்பது
அவமானம் ஓரிடத்தில் கால்

நின்று விட்டால் அது ஆகும்
பெருங்குற்றம் எங்களூரின்
நாய்கூட தினம் நாலுமுறை

சந்தைவரை ஓடித் திரும்பும்
அதையே சாதனையென்று
கதைபேசும் தொழிலுலகும்

தலைமுதல் பாதம் வரையில்
தங்கு தடையில்லாமல் ஓடும்
செங்குருதியின் உயிரோட்டம்

தருகின்ற தொடர் ஓட்டத்தில்
தம் இறக்கைகளை விரித்துப்
பறக்கும் அதிசயப் பிறவிகள்

நாம் மேகத்தில் தலைவைத்து
நாற்காலி விமானங்கள் ஓட்டி
நாளும் கணினியில் செய்யும்

வெறும் கண்ணோட்டம் அதில்
பெறும் மகிழ்ச்சிக்குத் தேவை
பெருமுயற்சியாம் தேரோட்டம்

September 5, 2018

ஆசிரியப்பா

ஆசிரியப்பா
தமாம் பாலா

தரையில் தொடங்கி
தளத்தில் முடியும்படி
தன் முதுகில் சுமந்து
தரம் உயர்த்தும் ஏணி

மாதா பிதா குருவென
ஆதாம் ஏவாள் பெற்ற
மேதாவிப் பிள்ளையை
சூதானமாய் செதுக்கி

பட்டை தீட்டி வைரமாய்
பளபளவென மின்னச்
வைக்கும் சேவையால்
ஆசிரியர் ஆனாரப்பா

பத்து மாதம் சுமப்பாள்
தாய் பத்து முழு வருடம்
பள்ளியில் சுமந்தோர்
அள்ளி தந்த அறிவுக்கு

சொல்லிக் கொள்வோம்
சல்லியளவு நன்றியை
நேச நினைவில் நின்று
ஆசிரியர் தினம் இன்று