September 16, 2018

ஓட்டம்

ஓட்டம்
தமாம் பாலா

இட்ட அடி நிலத்தைத் தொட
எடுத்த அடியும் முன்னோட
நில்லாத ஓட்டம் நானோட

எதற்காக ஓடுகிறாய் எனும்
எளிய வினாவுக்கு பதிலாய்
எனக்கு முன்னும் பின்னும்

ஓடுபவரைக் கேளென்றேன்
ஓடி ஓடி உழைக்காதவரையே
ஓரம் கட்ட நினைக்கும் இந்த

அரங்கத்தில் ஓட்டம் உயிரின்
அடையாளம் நடப்பதென்பது
அவமானம் ஓரிடத்தில் கால்

நின்று விட்டால் அது ஆகும்
பெருங்குற்றம் எங்களூரின்
நாய்கூட தினம் நாலுமுறை

சந்தைவரை ஓடித் திரும்பும்
அதையே சாதனையென்று
கதைபேசும் தொழிலுலகும்

தலைமுதல் பாதம் வரையில்
தங்கு தடையில்லாமல் ஓடும்
செங்குருதியின் உயிரோட்டம்

தருகின்ற தொடர் ஓட்டத்தில்
தம் இறக்கைகளை விரித்துப்
பறக்கும் அதிசயப் பிறவிகள்

நாம் மேகத்தில் தலைவைத்து
நாற்காலி விமானங்கள் ஓட்டி
நாளும் கணினியில் செய்யும்

வெறும் கண்ணோட்டம் அதில்
பெறும் மகிழ்ச்சிக்குத் தேவை
பெருமுயற்சியாம் தேரோட்டம்

No comments: