October 30, 2018

வேதம்

வேதம்
தமாம் பாலா

ரிக் யஜூர் சாம அதர்வண
வேதங்கள் நான்மறையாம்
வடமொழியில் வடித்ததை
வடமணிந்தவரே அறிவார்

கிருத்துவத்தின் பைபிள்
இறுதிவேதமாம் குர்ஆன்
மறுபிறவி உண்டென்றும்
மறுமை நாளது நிச்சயம்

என்றும் மாறிமாறி கூறும்
எண்ணற்ற பலபல வேதம்
எழுதியது யார் எங்கேயோ
எப்படியோ தோன்றியவை

அறம் பொருள் இன்பமும்
அதனுடன் கூட வீடுபேறும்
அமைந்தது நான்மறையே
அது பிறந்தது மனமெனும்

பாற்கடலை அறிவெனும்
மத்தால் தேவ அசுர குண
எண்ணங்களால் கடைந்து
வெளிப்பட்ட மறைபொருள்

வானத்திலிருந்து வந்தது
வேதமென்பது நம்பிக்கை
நம்மைப் போல் ஒரு முனி
இம்மியும் அசையா தவம்

செய்து பெற்ற வேதங்கள்
அறிந்து உணர்ந்தவருக்கு
மருந்து அறியாதோருக்கு
விருந்துக்கு முன் கேட்கும்

பொருள் விளங்காத ஓசை
அருள் பெற வேதம் ஓதும்
உரிமை அந்தணர் கையில்
உண்டென்பது ஒரு வேதம்

மூத்தோர் சொல் சிலரிடம்
வேதவாக்கு இறைமறுப்பு
பகுத்தறிவும் இன்னொரு
பகுதியில் ஆனது வேதம்

ஒரு வேதத்தின் தெய்வம்
மறு வேதத்தின் சாத்தான்
நம்பிட புத்தகமும் வேதம்
வேதமும் புத்தகம் தானே

October 1, 2018

முறை

முறை
தமாம் பாலா

எதையும் செய்ய உண்டு
ஒருமுறை அதை நாமும்
பலமுறை யோசித்தோம்

இந்த முறையில் உலகில்
பிறந்து வளர்ந்தது பலபல
தலைமுறை ஆண்டாண்டு

நேர்க்கோடு வாழை முறை
நெளிவு சுளிவு நதி முறை
தெளிவான அணுகுமுறை

பெற வேண்டும் வழிமுறை
முறைசார்ந்த கல்வியுடன்
முறைசாரா கல்வியறிவும்

எத்தனையோ முறைகள்
மோதி வென்ற கதைகள்
சொல்லும் சரித்திரங்கள்

அண்ணன் தம்பி மேலே
உண்ண உடுத்த அருந்த
எண்ண எழுத தொழுதிட

தன்முறையைத் திணிக்கும்
தன்மையானதும் புதுமுறை
வன்முறையென அறிவீரே