September 19, 2019

குரு

குரு
தமாம் பாலா

மாதா பிதா குரு
குருகுலம் அன்று
பள்ளி கல்லூரி
தந்த குரு நேற்று

கூகுள் வந்தபின்
கூவிஅழைக்கும்
குருவினர் பலர்
குழுவினர் பலர்

அரசியல் குருவா
ஆன்மீக குருவா
தொழில் குருவா
தோழமை குருவா

எல்லா குருவுக்கும்
ஏகப்பட்ட தேவை
அகக்கண் திறக்க
அத்தனை குருவும்

மொத்தமாய் கூடி
சத்தமிட்டால் கூட
சித்தத்தின் உள்
புத்தியின் வித்து

முளைக்கும் வரை
முழுமையில்லை
முதலும் முடிவும்
முயற்சியும் குரு

September 13, 2019

பயம்

பயம்
(தமாம் பாலா)

கடலில் கலக்குமுன்
கலங்கியது நதியும்
கடந்து வந்த பாதை
கண்ணில் தெரிய

சிற்றாறாய் மலை
சிகரங்களில் ஊறி
நகரங்கள் தாண்டி
நடுவில் வளைந்து

வந்த நதி முன்னே
பரந்து விரிந்ததாய்
பெருங்கடல் அதில்
சிறு துளியாகிடும்

பயம் கொண்ட நதி
சுயம் தொலைக்க
தயங்கியே நின்றது
இயலாமை மிகுந்து

நதிக்கு மட்டுமல்ல
நமக்கும் இருப்பது
திரும்பிட முடியாத
ஒரு வழி மட்டுமே

அழியாத நதிகள்
கழிமுகம் சேரும்
கடலுடன் கலக்கும்
கடலாகவே மாறும்

(நன்றி: கலீல் கிப்ரன்)

சுழி

சுழி
தமாம் பாலா

ஆற்று நீரில் கண்ட சுழி
விரலின் ரேகையில் சுழி
தலைவகிட்டில் வந்த சுழி

ஏட்டின் தொடக்கமும் சுழி
என்றார் கோட்டுடன் சுழி
சேர்ந்த உகரம் முதல் சுழி

ஏன் எழுத வேண்டும் சுழி
எதற்கு தோன்றியது சுழி
எப்படி வந்திருக்கும் சுழி

தும்பிக்கையும் ஒரு சுழி
துதிப்பாடலும் கூட சுழி
துணையாம் இந்த சுழி

எண்ணின் முதலும் சுழி
எழுத்தின் வடிவமும் சுழி
எல்லைகள் கடந்த சுழி

எப்போதும் போலவே சுழி
மறந்து எழுதிய பின் சுழி
சேர்த்தேன் மேலாக சுழி