நான் ஏன் பிறந்தேன்
தமாம் பாலா
நான் பிறந்திருந்தேன் அன்றொரு
நாள் ஒரு தொட்டிலிலே
கிடந்தே
நல்லதொரு தாலாட்டும் கேட்டு
நல்லபடி உடல் வளர்த்திருந்தேன்
ஒருக்களித்து குப்புற விழுந்து பின்
தவழ்ந்து எழுந்து நடைவண்டி கை
பிடித்து நடந்து ஓடி பட்டாம்பூச்சி
தட்டான்களைத் துரத்தி விளையாடி
சிட்டாய் பறந்த வாழ்வில் சிலநேரம்
கரப்பான் பூச்சி வண்டு பல்லி பாம்பு
தேளும் கூட கண்டதுண்டு என்னுலகம்
அவற்றின் உலகத்துடன் உரசிய போது
நான் படித்திருந்தேன் பள்ளிகளில் கூட
நான்கெழுத்து பல காலம் வகுப்புகள்
மாற வயதும் ஏற பெயருக்குப் பின்னால்
மாட்டி கொண்ட பட்டங்கள் பலவிதமாய்
சேரவும் எனக்கு எல்லாம் தெரியும் என்று
தூரத்துக் கனவுகளை துரத்தியிருந்தேன்
நேரத்தே பணி செய்து கை நிறையவே
பொருள் சேர்த்து காலப் பெட்டகத்தில்
நிரப்பிடும் ஆர்வத்தில் ஓடி உழைத்தேன்
நான் அமர்ந்திருந்தேன் வெவ்வேறு வித
நாற்காலிகளில் அறையின் வெளியில்
நானாவித பெயர் பலகைகள் மாறிடவே
இரவில் நான் படுத்திருந்தேன் பாயில்
தரையில் கட்டிலில் பஞ்சுமெத்தையில்
தஞ்சையில் கோவையில் சென்னையில்
தமாமில் ஹனாயில் ஹோசிமின்னில்
உலகம் என்னைச் சுற்றியே சுழன்றது
சகலம் நான் நடத்துவதே என்ற சர்வ
அதிகார கர்வமும் ரகசியமாக எனது
அடிமனதில் மெல்ல நுழைந்திட அதை
வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திட
வெட்கத்துடன் முயன்றேன் நானும்
சட்டென்று வந்தது உலகுக்கு கிருமி
பட்டென்று பலர் கதையை முடித்தது
ஏழை பணக்காரர் வித்தியாசங்கள்
ஏதும் இல்லாமல் எல்லோர் மூக்கிலும்
எளிதாய் நுழைந்து நுரையீரலுக்குள்
எட்டிப் பார்க்கும் கோரோனாவினால்
கொஞ்சமாய் ஞானம் பெற்றேன் நான்
நம்மால் நடப்பதல்ல வாழ்வென்பது
நமக்கு நடப்பதே நம் வாழ்வென்பது
வாழும் காலம் வரை ரசித்திருப்போம்