November 21, 2010

September 19, 2010

சிட்டுக்குருவியும் சந்தேகமும்

சிட்டுக்குருவியும் சந்தேகமும்
த‌மாம் பாலா

சிட்டுக்குருவியே..
சட்டென்று கிளை
விட்டுக்கிளை பறக்கிறாய்

சற்றே நில்..அப்படியே
சந்தேகங்கள் சில
வந்தது உன்னைப்பார்த்து

எங்கள் பகுதியில் நீயும்
எல்லா நேரமும் தடையின்றி
எவர் அனுமதியுடன் பறக்கிறாய்

என்ன படித்திருக்கிறாய்
எத்தனை வருட அனுபவம்
எதோ ஒரு தொழிலில் உனக்கு

ஓட்டுச்சீட்டோ, ரேஷன்
கடவுச்சீட்டோ அல்லது
வங்கிக்கணக்கோ உன் பேரில்

சொத்தோ சுகமோ
சொந்தமாக வீடோ உண்டா
சொல்லு மொபைல் எண்ணை

இவற்றில் ஒன்றாவது
இருந்தால் தானே உன்னை
மதிப்போம் நாங்கள், நீ ஒரு
மனிதனாய் இருந்தால் கூட!

(ந‌ன்றி: கீற்று.காம், http://www.keetru.com/)

செய்வன..திரும்பச்செய்..

செய்வன..திரும்பச்செய்..
த‌மாம் பாலா

சன்னலுக்கு வெளியே
சத்தமில்லாமல்
தோன்றி மறையும்
இரவு,பகல்கள்

முதலும் முடிவும்
இல்லாத காலவெளியின்
குழல் விளக்குப்பகலாக
அலுவல்களின் வரிசை

அவசரமென்ற சொல்லும்
அர்த்தமற்றுப் போகும்படி
ஓடி மூச்சிரைக்கும் பலபல
கடிகாரமற்ற தொழில்கள்

அடுத்த இருக்கையில்
மனித இயந்திரம்..உறவாட
கணினிகள் மட்டுமே என
கறைபட்ட சிந்தனைகள்

அதே இடம்,அதே செயல்..
சக தொழிலாளி சத்தமாய்
கேட்கிறான் வழக்கம் போல
இன்று என்ன தேதி ??

அபூர்வமான புன்முறுவலில்
எனது பதில்...நேற்றும்..
நாளையும் இருந்த அதே
தேதிதான் இன்றும் என

வழித்துணை ஒன்று
கிடைத்த திருப்தியில்
அரைத்த மாவை அவனும்
அரைக்கிறான்..திரும்ப,திரும்ப!!

(ந‌ன்றி: கீற்று.காம், http://www.keetru.com/)

தெரிந்தேன்..தெளிந்தேன்

தெரிந்தேன்..தெளிந்தேன்

த‌மாம் பாலா


அன்றொரு நாள் கண்ட கனவொன்று
அறியாமலே வளர்ந்து எழுந்து நின்று
அழகாய் என் கண்முன் நடனம் ஆடும்
அதிசயம் கண்டு மகிழ்ந்தேன் நானும்

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பங்கள்
காலத்தில் ஒளிந்திருக்கும் நிகழ்வுகள்
சொல்லுக்குள் நிறைந்த வண்ணங்கள்
நல்லுணர்வாய் நதியாய் எண்ணங்கள்

சில விதைகள் பயிராகி பலன் தரும்
பல விதைகள் ஆழத்தில் புதைந்திடும்
நிலத்தில் விதைத்திட்டவன் மறந்தும்
கோலத்தின் நெளிவுகளாய் ஆதியும்

அந்தமும் இல்லாத கால வெளியின்
சந்தத்தில் முளைக்கின்ற சங்கீதத்தின்
நாதங்கள் இன்று ஒலிக்க, வாழ்வின்
வினோதம் தெரிந்தேன்,தெளிந்தேன்!

(ந‌ன்றி: கீற்று.காம், http://www.keetru.com/)

துணை

துணை
த‌மாம் பாலா

கடல்கடந்து வந்த இடத்திலும்
கண்ணுக்கு எட்டிய தூரத்திலும்
மனிதத் துணையில்லாத நேரம்
மனம் விட்டு பேசி, பழகிடவும்

எந்த நாட்டவன் கிடைத்தாலும்
எனக்கு மகிழ்ச்சிதான்,அதிலும்
சொந்த நாட்டானாக இருக்கவும்
சொர்க்கம் கண்ணில் தெரியும்

தென்னிந்தியனாய் அமைந்திட
தெளிவு பிறக்கும் பிறரைவிட
தமிழனாக நண்பன் கிடைத்திட
தடையிலா இன்பம் அளித்திட

தப்பித்தவறி அந்த நண்பன்
தஞ்சாவூர்காரனாகவும்,ஏன்
தெற்குவீதியை சேர்ந்தவன்
தூரத்து உறவு,சொந்தக்காரன்

என்று பலவிதமான நட்புகள்
இன்று பாலையின் நடப்புகள்
என்ன ஒரே குறை,உறவுகள்
எதுவும் உடன்பிறந்த தம்பிகள்

போல ஒருபோதும் வராது,அது
பாகப் பிரிவினை, பஞ்சாயத்து
பெற்ற தாய்க்கும் செலவழித்து
செய்த செலவை பங்குபிரித்து!
 
(ந‌ன்றி: கீற்று.காம், http://www.keetru.com/)

September 7, 2010

பிடி

பிடி                                                                                  Pidi, For Audio Please Click Here

தமாம் பாலா

அது ஒரு மாலை நேரம். பறவைகள் கூட்டுக்கு திரும்புவது போல மக்கள் கூட்டம் கூட்டமாக வீடு திரும்பும் நேரம்; சூரியன் உள்பட விதிவிலக்கு இல்லாமல். வருட விடுமுறையில், நங்கநல்லூர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.


பிடிங்க அவன.. ஓடறாம் பாரு என்று ஒரு கூச்சல் கேட்டது. எனக்கு எதிர்புறத்திலிருந்து பக்கமாக வந்து ஒரு பையன் ஓடிச்சென்றான். பின்னால் திபு திபுவென நான்கைந்து பேர்! கொஞ்ச தொலைவில் ஒரு நடுத்தர வயது பெண்மணி, நின்று கொண்டிருந்தார். ‘என்னாச்சு மாமி? பர்ஸை பிடுங்கிட்டு ஓடறான் சார்’


பர்ஸை தொலைத்தவரும், தட்டிப்பறித்து ஓடியவனும், துரத்தியவர்களும் சென்ற பின்னரும் என் காதில், ‘பிடி, பிடி’ என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன, அவ்வப்போது; இன்று இந்த கட்டுரையை எழுதும் வரையிலும்.


‘பேனாவை சரியா பிடிக்கணும்; எழுதும் போது, மூடியை கழற்றி வைக்கணும் அப்போதான் தேர்வு எழுதும் போது வேகமா எழுத முடியும்’ ஆசிரியர் ஒருவர் சொன்னது இன்றும் நினைவுக்கு வந்தது. எழுதி எழுதி வாழ்க்கைப் பாடத்தில் ஜெயித்த அந்த பள்ளி நாட்களில். கைரேகை ஆளுக்கு ஆள் மாறுவது போல, கையெழுத்தும் மாறுகிறது.


ஒவ்வொருத்தனும் பேனாவை பிடிக்கும் விதமும், தனி வகை. கட்டைவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடிப்பது பொதுவானது. குமார் அண்ணா போல சிலர் கட்டை விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் கூட பேனா பிடிப்பதுண்டு; இங்க் கறை பட்ட விரல்கள் சாட்சியாக.


கிரிக்கெட் மட்டை பிடிப்பதில் கூட, சின்ன மாறுதல் செய்தால் பெரும் வெற்றி கிடைக்கும், அதற்கு நம்ம ஊரு அசாரூதின் உதாரணம் என்றும் பாக்கிஸ்தான் வீரர் ஸாகீர் அப்பாஸ் சொல்லிக் கொடுத்தார் என்றும் எங்கோ படித்த ஞாபகம்!

எதிராளியை அடக்க இரும்பு பிடி, நண்டு பிடி, கிடுக்கி பிடி, குரங்கு பிடி, உடும்பு பிடி எது வேண்டுமானாலும் போடலாம். அரசாங்கம், நினைத்தால் எதையும் அதிகாரத்தின் பிடியால் சாதிக்கலாம். ஆனால் வீடுகளில் பெரும்பாலும் செல்லுபடியாவது, அன்புப் பிடி தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தம் பிடியில் வைத்திருப்பது இப்படித்தான்; அவனுக்கு என்று ஒரு பெண் வந்து, அவனை தன் கைப்பிடிக்குள் கொண்டு வரும் வரையில்.


புராணங்கள் படித்திருக்கிறீர்களா? தாடி மீசையோடு முனிவர் வருவார். ராத்திரி பகலாய் உடலை வருத்தி, தவம் செய்து வரம் வாங்குவார். யாரவது அவரது கோபத்தை கிளறி விட்டால், ‘பிடி சாபம்’ என்று பொங்கி விடுவார். சாதாரணமாக 2 நாள் வரும் நோக்கியா கைபேசியின் பேட்டரி, 3G, மீடியா ப்ளேயர், ப்ளூடூத் என்று 1/2மணிக்குள் சார்ஜ் தீர்ந்து விடுவது போல தவ வலிமை, சுழியம் (நன்றி, மக்கள் தொலைக்காட்சி) ஆகிவிடும்


‘வாழ்க்கையிலே முன்னுக்கு வரணும்னா, எப்போவும் நமக்கு பிடிச்சதையே செய்யணும் என்று’ சில தத்துவவாதிகள் கூறுகின்றனர். வேறு சிலரோ, ‘பிடிச்ச வாழ்க்கை கிடைக்க லைன்னா, கிடைச்ச வாழ்க்கையை பிடிச்சுக்கணும்’ என்றும் யதார்த்த வாதம் பேசுகின்றனர். பாதி நேரம் நமக்கு எது பிடிக்கும் என்று நமக்கே புரிபடுவதில்லை. உணவு விடுதிக்கு போய், பக்கத்து ஆள் சாப்பிடும் ஐட்டத்தை ஆர்டர் செய்து விடுவதைப் போல!


ஆங்கிலத்தில் ஆக்ஸி மோரான் என்பது போல, தமிழில் நல்ல பாம்பு என்பது போல இந்த ‘புகை பிடிப்பது’ என்ற சொல்லாடல். சிகரெட் பிடிப்பதை விட்டு விடு என்றால், அது கீழே விழுந்து விடுமே என்பது ஒரு கடி ஜோக். உண்மையில் நான் புகை(யை) பிடிப்பதே இல்லை, அதைத்தான் வெளியே விட்டு விடுகிறேனே என்கிறான், என் சங்கிலி புகை நண்பன் ஒருவன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கின்ற இது போன்றவர்களை, நாம் நினைத்தாலும் திருத்தவா முடியும்?


அறிவியல், சூரியன் பூமியையும், பூமி சந்திரனையும் கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையால் பிடித்து வைத்திருக்கிறது என்கிறது. கடல் கூட, காற்றில் மிதக்கும் பூச்சியை பிடிக்க முயல்வது போல அலை கரங்களை வீசித் தோற்கிறது. மன ஆறுதலுக்கு நான் படிக்கும் ராசி பலன் கூட, குரு உங்களுக்கு சாதகமாக வந்தும், ஏழரை சனியின் பிடியில் சிக்கியதால் பயன் படவில்லை என்றும், ராகு கேதுவின் பிடிக்குள் சூரிய சந்திரர் சிக்கியதால் கால சர்ப்ப தோஷம் என்றும் பலவிதமாக மிரட்டுகிறது.


பிடி என்பது வினைச்சொல் மட்டுமல்லபெயர் சொல் கூட. ;கத்திக்கும், கோடாலிக்கும் மரமே கைப்பிடியாக வரும் போது! கத்திக்கு மட்டுமா, கைப்பிடி, வீட்டு ப்ரஷர் குக்கருக்கும் அது உண்டு. எங்கள் வீட்டு குக்கரை நான் சரி செய்ய முயன்று, கைப்பிடி உடைந்து, எனது (இல்லாத) ப்ரஸ்டீஜை அழித்து விட்டது. நான் கடையில் கொடுத்து சரி செய்ய நினைத்தும், ராதிகா.. பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள். அப்போது தானே, அதன் சாக்கில் என்னை அவ்வப்போது நன்றாக ‘ஒரு பிடி பிடிக்க முடியும்?’


இப்போதெல்லாம், வைத்தியரிடம் போனால், ஸ்டெத் வைத்து பர்ஸ் பார்த்து, மெடிக்கல் டெஸ்டுகளை மொத்தமாக எடுக்கச் சொல்கிறார்கள். அந்த காலத்து அனுபவ வைத்தியர்கள், நாடியை பிடித்து பார்த்தே வியாதியை சொல்லி விடுவார்களாம்.

அடுத்தவர் மனதை ஆழம் பார்க்கும் உரையாடலை கூட ‘நாடி பிடித்து பார்ப்பது’ என்பார்கள். பல இடங்களில், வேலை பார்த்து, பல இடங்களிலிருந்து அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கி காட்டி, ப்ரமோஷன் வாங்கும் என் நண்பன் ஒருவன் சொல்லுவான்.. ‘கையை பிடிச்சு முறுக்கணும், ஆனா உடைக்க கூடாது’ என்று. நானும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன், இன்றும் கூட!


மாட்டை கொம்பிலும், முயலை காதிலும், வாத்தை கழுத்திலும் பிடிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அதில், மனிதனை பணத்திலும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். சிக்கலான நூல்கண்டின் முடிச்சை பிடிப்பது போல, ஒரு பிரச்சினையின் மூலத்தை அறிவதை, தெரிவதை நம் மலையாளி நண்பர்கள்.. ‘பிடி கிட்டியோ’ என்பார்கள். சரிதானே, பிடி கிட்டிவிட்டால், தூக்குவதில், கையாள்வதில் ஏது சிரமம்?


கற்றது கைப்பிடி அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். நாம் ஒவ்வொருத்தரும், செல்வத்தை, சௌந்தர்யத்தை, கல்வியை, கேள்வியை கைப்பிடிக்குள் கொண்டு வர இரவு பகலாய் உழைக்கிறோம்; காற்றினை கையில் பிடிக்கும் இந்த கடின முயற்சியில்,
எளிதில் உடைந்து விடக்கூடிய கனவுக்குமிழிகளில், கற்பனை கயிறு கட்டி மிதந்து, கால வெளியில் பிடி சாம்பல் ஆகும் வரை.. இலக்கின்றி பறக்கிறோம் நாம் என்றே தோன்றுகிறது எனக்கு!

காரணம் இல்லாமல் கடைத் தெருவுக்கு சென்று வருவது போல, எந்த பிடிமானமும் இன்றி, பிடியை சுற்றி வந்த என் இந்த சிந்தனையை படிக்க உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. பிடித்தால் விட்டு விடுங்கள்; பிடிக்கவே இல்லை என்றால், எப்படி உங்களால் அதை விட முடியும் என்ற அதிபுத்திசாலித்தனமான(?!) கேள்வியுடன், உங்கள் கவனத்திலிருந்து..என் பிடியை மெல்ல நழுவ விடுகிறேன், நண்பர்களே!!

August 20, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட்நாம் பயணத்தொடர் 8

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட் நாம் பயணத்தொடர் 8
தமாம் பாலா                                  For Audio Please Click Here


ஆர்ப்பாட்டமாக பூஜை போட்டு ஆரம்பித்த தமிழ் படம், ஆற அமர 2 வருடம் கழித்து வருவது போல, நம்ப ஸா பா தொடரும் ஒரு மாத தொய்வுக்கு பிறகு ரீலீஸ் ஆகிறது. ம்ம்.. எங்கே விட்டோம்?? ஆமா, எதனிக் வில்லேஜ் பக்கத்துலே வந்து.. ஞாபகம் வந்துடுச்சு!

அந்த காட்டாற்று பாலத்தை தாண்டி ஊருக்குள்ளே நுழைந்தோம். ஆற்றங்கரையில் இருந்த ஒரு உணவு விடுதிக்குள் எங்களை அழைத்துச் சென்றாள், எங்கள் கைடு ஜிங். உடன் வந்த ஒட்டுப்புல் தோழிகள் வெளியே நின்று கொண்டார்கள். வெயிலுக்கு இதமாக அவரவர் இஷ்டம் போல குளிர்பானம்/ பீர் என்று ஆளுக்கு ஆள் வாங்கிக் கொண்டோம்.

அந்த உணவு விடுதியை நடத்தும் மனிதரை பார்த்ததும் மிகவும் வியப்பை அடைந்தோம். ஆம், அவர் வியட்னாமியர் அல்ல, அவர் ஒரு நியூஸிலாந்து நாட்டுக்காரர் ; சந்தேகம் இருந்தால், புகைப்படத்தில் பார்த்துக் கொள்ளலாம். நியூஸிலாந்து நாட்டில் பால் வியாபாரத்தொழிலில் இருந்த அந்த ஸ்காட்லாந்துகாரர், விடுமுறைக்கு ஸா பா வந்து விட்டு, அதன் அழகில், அமைதியில் கவரப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டது அவருடன் பேசி நான் கறந்த தகவல்!


அவரும் ஜிங்கும் சகஜமாக கலாய்த்து ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொண்டார்கள், பேச்சிலே.

“இந்த வயசான கிழவனை கல்யாணம் செய்து கொள்வாயா? மண்டையை போட்டு விட்டால்,கல்லறைக்கு வந்து அள்ளி போட்டு திட்டுவாயா?” -அவர்

“இல்லை கல்லறையில் பூ போட்டு பாராட்டுவேன்” - இது ஜிங்.

பெரியவரே, போற பேச்சு இப்போ எதுக்கு, நல்லாவே இருங்க என்று சொல்லி விடைபெற்றேன் நான்.


வெளியே வந்து பார்த்தால், என் இலவச இணைப்புப் பெண் இன்னமும் அங்கேயே நின்று கொண்டு, என்னை பார்த்ததும் வந்து கௌரவமான இடைவெளி விட்டு நின்று கொண்டாள். என்னடா இது, எப்படி இவளிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான், அவளது தோள் பை கண்ணில் பட்டது. வாட் யூ ஹேவ் என்றவுடன், அவளது நடமாடும் கடையிலிருந்து, துணி வேலைப்பாடுகளை வெளியே எடுத்து விலை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு வழியாக, அவளிடமிருந்து ஸா பா போஸ்ட் கார்டு புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் ஒன்றை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தேன். 40,000 வியட்நாம் டாங், வெறும் 2 அமெரிக்க டாலருக்காக, மணிக்கணக்காக உடன் நடந்து வந்த அந்த கிராமத்து பெண்ணை நினைக்கையில், கொஞ்சம் மனசு கனக்கவே செய்தது!

ரொம்ப தூரம் நடந்து, நாங்கள் தங்க வேண்டிய வீட்டுக்கு வந்து விட்டோம் ஒரு மேட்டுப்பகுதியில். ஆற்றில் குளிக்கலாம் என்று வழியில் சல்லிசு விலையில் ஷார்ட்ஸ் வாங்கிக் கொண்டோம். ஆற்றில், பாறைகள் நிறைந்த பகுதியில் நாங்கள் தண்ணீரில் இறங்க, ஜிங் கரையில் உட்கார்ந்து கொண்டாள். முன்னே பின்னே முழங்கால் அளவு தண்ணீரில் இறங்காத நான், நண்பர்கள் கொடுத்த தைரியத்தில் ஓடும் ஜில்லு தண்ணியில் இறங்கி ஆட்டம் போட்டு விட்டேன். நான்கு பேர் உடன் இருந்தால், துணிந்து அரசியலில் கூட குதிக்கலாம் என்று தோன்றியது அப்போது.


நாங்கள் தங்கிய அந்த மர வீட்டின் புகைப்படங்களை பாருங்கள், அங்கு தங்கிய அனுபவத்தைப் பற்றி, அடுத்த பதிவில் பேசுவோம், சரியா?

ஸா பா தொடரும்.








July 18, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட்நாம் பயணத்தொடர் 7

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட் நாம் பயணத்தொடர் 7

தமாம் பாலா                                                                                           For Audio, Please click here
 
"இன்னும் கொஞ்ச‌ம் க்ளிக்கி‍ இருக்க‌லாமோ பாலா?" ‍ என்ற‌ அது ஒரு க‌னாக்கால‌ம் சுந்த‌ர‌ ராம‌ன் அவ‌ர்க‌ள் வேண்டுகோளை முன்னிட்டு, இந்த‌ வார‌ தொட‌ரில் முழுக்க‌ முழுக்க‌ ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே! (என‌க்கும் வேலை சுல‌ப‌மாகி விட்ட‌து :‍)))
 
ஸாபா தொடரும்.

July 12, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட்நாம் பயணத்தொடர் 6

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட் நாம் பயணத்தொடர் 6
தமாம் பாலா                                                                                           For Audio, Please click here



    sapa valley view

தொடர் 5ஐ எழுதி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் ஓடிவிட்டன. இதற்கு மேலும் இடைவெளி விட்டால், இருக்கும் சொற்ப வாசகர்களையும் இழந்துவிடும் அபாயம் இருப்பதால், இன்று திங்கள் இரவு நேரத்தில், விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்.

ஸாபா ஸம்மிட்டிலிருந்து, அன்று மதிய உணவுக்குப்பின், எதனிக் வில்லேஜ் என்று சொல்லக்கூடிய பழங்குடிகள் வசிக்கும் பள்ளத்தாக்கு கிராமத்துக்கு புறப்பட்டோம். கொஞ்ச தூரம் வேனில் பயணம் செய்து, அதன் பின் சில கிலோமீட்டர்கள் மலைச்சரிவில் நடந்து சென்று, மாலை/இரவு நேரம் அங்கேயே வீட்டுத்தங்கல் செய்ய ஏதுவாக துணிமணிகள் எடுத்துக்கொண்டோம்.


இதற்குள்ளாக மணி அய்யாவின் புராதன பெருமை வாய்ந்த பிட்டீஸ் ஷூ வாய் பிளந்து விட்டது. நாங்கள் வண்டியிலே காத்திருக்க, அவரும், ஜிங் மற்றும் ராம்கியும் செருப்பு கடையில் நுழைந்தார்கள். சிறிது நேரத்துக்குப்பின், மணி முன் பக்கத்தில் ஷூ போலவும், பின் பக்கத்தில் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போலவும் உள்ள பழுப்பு நிற காலணிகளுடன் வேனில் நுழைந்தார். என்ன இது என்றேன் நான்; கொஞ்சம் அசந்துட்டேன், ராம்கி என்னை ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல ஆக்கிட்டான் என்றார் அவர், பரிதாபமாக.



இப்போது எங்கள் வண்டியை வழியில் நிறுத்தி, ஜிங்கின் ஒன்று விட்ட தங்கை போல இருந்த இன்னொரு மங்கு பெண் வந்து ஏறிக்கொண்டாள். அவளது பீட்டர் ரவுசும் தாங்கவே முடியவில்லை. வேனின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவள் உருட்டி விட்ட லிச்சி பழங்களை நாங்கள் வழி மறித்து ஸ்வாகா செய்தோம்.

கரடு முரடான பழங்கள், உள்ளே நுங்கு போலே சதைப்பற்றான பழம். ஆசையுடன் கடித்தால் அங்கு தான் ஆபத்து ஆரம்பம், பெரிய அளவு கொட்டை, சும்மா பேருக்குத்தான் பழம். இதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது!


கல்லும் மண்ணும் கலந்த பாதை, மலைச்சரிவில் வளைந்து வளைந்து கீழே இறங்க ஆரம்பித்தது. ஜிங்கின் தோழிகள் சொல்லி வைத்தார் போல் எங்கள் ஒவ்வொருவருக்கும் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்கள்; நாங்கள் நின்றால் அவர்களும் அதே. நடந்தால்.. அவர்களும்.. என் கூடவே ஒருத்தி வந்தாள். என்னடா இது தர்மசங்கடமாக இருக்கிறதே என்று நினைக்கும் போதே அவள் ஆங்கிலத்தில் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.



நான் அவளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டே கண்ணைப் பறிக்கும் மலை/பள்ளத்தாக்கு காட்சிகளை என் ஃப்யூஜி டிஜிட்டல் காமெராவில் ரொப்பிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர நடை பயணத்துக்குப் பிறகு ஒரு காட்டாற்றுப் பாலத்தை அடைந்தோம். பழங்குடிகள் கிராமத்தை சமீபித்து விட்டது தெரிந்தது. உடன் வந்த பழங்குடி பெண்ணிடமிருந்து தப்பித்த மற்றும் வீட்டுத்தங்கல் விவரங்கள் விரைவில் கணினித்திரையில் காண்க :))


ஸாபா தொடரும்.

June 27, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5
தமாம் பாலா                                                                              For Sa Pa 5 Audio, Please click here

    Sapa Church near Market
போன தொடரிலே, லவ்வர்ஸ் மார்கெட் பற்றி குறிப்பிட்டேன் அல்லவா? அது பற்றி அரசல் புரசலாக இணையத்திலும், வியட்நாம் நண்பர் மூலமாகவும் கேள்விப்பட்டிருந்தோம். ஒவ்வொரு வாரமும், சனி இரவு லவ்வர்ஸ் மார்கெட்டில் ஒரு குட்டி சுயம்வரமே நடக்கும் என்றும், பெண்கள் இருட்டில் அமர்ந்திருப்பார், ஆண் பாடிக்கொண்டே செல்ல, பாடல் பிடித்துவிட்டால் பெண்ணும் முதலில் பாடலிலும் பின் நிரந்தரமாக வாழ்க்கையிலும் இணைந்து கொள்வாள் என்று பல பல கதைகள். இதை கேள்விப்பட்ட நம் தமிழ் நண்பர்கள, முன்னேற்பாடாக சங்கீத சாதகத்தை மானசீகமாக தொடங்கி விட்டார்கள்!

அது வெள்ளி காலை தான், நண்பர்கள் அனைவரும் ஸம்மிடிலிருந்து கால்நடையாக மார்கெட் உலா புறப்பட்டோம் ; ஜிங் மற்றும் தோழிகள் புடை சூழ. அந்த பெண்கள் ஒவ்வொருத்தியும் இங்லீஷில் சும்மா பொளந்து கட்டுகிறார்கள். (பொதுவாக வியட்னாமிகள் ஆங்கிலத்தில் பேசுவது கொஞ்சம் தான், ஹனாயில் ; ஆனால் ஸாபாவில் சின்ன பெண் கூட நன்றாக ஆங்கிலம் பேசுவதை கவனித்தேன், எல்லாம் சுற்றுலா தொழில் செய்யும் மாயம்!)

    Sapa local market

முதலில் வந்தவுடன் ‘ஆர் யு இண்டியன்? வாட் இஸ் யுர் நேம்?” என்று கேட்டாள். நண்பர்கள் சொல்லி வைத்தார் போல பேரை மாற்றி மாற்றி சொல்லிவிட்டனர். ரவி, ராம்கி ஆகி, சுரேஷ் ரவி ஆகி ஒரே பெயர் குழப்பம் ஆகிவிட்டது! நான் பொய் சொல்வதில் கொஞ்சம் சோம்பேறி, ஆகவே என் பெயர் ‘சுப்ரா’ என்று சொல்லிவிட்டேன்.

தண்ணி இல்லாத காலத்து நம் ஊர் கபாலீஸ்வரர் கோயில் குளம் போல மார்கெட் படிக்கட்டுகளுடன் பள்ளத்தில் இருந்தது. வழக்கம் போல எல்லா பொருட்களும், அத்தியாவசம் இல்லாத அதே சமயம், ஸாபாவிலே வாங்கினேன் என்று சொல்லிக் கொள்ள கூடிய ‘ஸவொனிர்’ பொருட்கள். வழக்கமாக வாங்கி குவித்து விட்டு பின் ராதிகாவிடம் ‘வாங்கி கட்டி கொள்ளும்’ அபாயம் கருதி நான் பர்ஸை தொடாமல் விரதம் காத்தேன். பொருள் விலையை மட்டும் நான் கேட்டுவிட்டு பேரம் பேசாமல் போவதால் ஸாபா வியாபாரிகள் சற்று குழம்பித்தான் போய்விட்டார்கள். மணி அய்யா, ஒரு சுத்தியலுடன் இணைந்த ஸ்பானர் போன்ற ஒரு விசித்திரமான ஒன்றை வாங்கினார். ரவி களத்தில் இறங்கி, பேரம் பேசி அங்கே ஒரு ‘அறிவிக்கப்படாத ஆடித்தள்ளுபடியையே உருவாக்கி விட்டார். கடைசியில் நானும் குறைந்த விலையில் சில கீ-செயின் பொம்மைகளை வாங்கி விட்டேன்.

    Scorpion wine(?!)

மதிய உணவு வேளை வந்துவிட, ஸம்மிட் திரும்பி, தரை தளத்து உணவு விடுதியில் சூடாக அரிசி சாதம் மட்டும் வாங்கிக் கொண்டு, ஹனாயிலிருந்து கொண்டு வந்திருந்த சபாத்தி (உபயம் ராம்கி), காரகுழம்பு, மிளகு குழம்பு மற்றும் புளிக்காய்ச்சலுடன் பசி தீர்ந்தது!

    Sa Pa Doom Doom Sa Pa Doom Doom!

சின்ன ஓய்வுக்கு பிறகு, மலையடிவாரத்து கிராமத்துக்கு போகிறோம் என்றும், பாதி தூரம் பஸ் மூலம் மீதி 2/3 கி.மீ நடந்தும் என்றும் முடிவானது. அந்த பயணம், புகைப்படங்கள் மற்றும் வீட்டுத்தங்கல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...



ஸாபா தொடரும்.

June 20, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 4.
தமாம் பாலா                                                                                  For audio please click here


டப்பா வாலா தெரியுமா உங்களுக்கு?? பம்பாய்காரர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். வீட்டில் கட்டிய டிபன் கேரியரை, ஆள் மாற்றி மாற்றி, சரியாக அலுவலகம் சேர்த்து, மாலையில் பழையபடி வீட்டில் சேர்ப்பவர்கள் தான் இந்த டப்பா வாலாக்கள். பி.பி.சியில் இவர்களைப்பற்றி சிறப்பு செய்தி வந்தது என்றும் இளவரசர்(இன்னும் எத்தனை வருசத்துக்கு சாமி ?!?) சார்லஸ் இவர்களை பாராட்டி உடன் படம் எடுத்துக்கொண்டார் என்றும் கேள்வி!

இப்போது, ஏன் டப்பா வாலா பற்றி நாம் பேசவேண்டும் என்ற விஷயத்துக்கு வருவோமா? சுற்றுலாவில் பொதுவாக ரெண்டு வகை. தனி பஸ் எடுத்து, வீட்டிலிருந்து கைதட்டிக்கொண்டே ஊர் ஊராக போய் வருவது முதல் வகை. இல்லை, பொது ரயிலிலும் பஸ்ஸிலும் போய், குழுவாக சென்று வருவது இரண்டாவது வகை; இது பெரும்பாலும் தொலைதூரத்துக்கு பொருந்தும்.



ஸாபாவுக்கு நாங்கள் வந்தது இரண்டாவது வகையில்! ஹனாயில் ஏற்றிவிட்டதோடு ஏஜண்ட் குயன் வேலை முடிந்தது. லோகாய் ஸ்டேஷனிலிருந்து ஸாபா வரைக்கும் இன்னொருத்தர். ஸாபாவில், எல்லாம் ஹோட்டல் ஸம்மிட் பொறுப்பு. இங்கே தான் வில்லங்கம் ஆரம்பித்தது. காலங்காத்தாலே, விடுதியில் நுழைந்து சடுதியில் நம் காரியங்களை முடித்து கிளம்பலாம் என்ற நினைப்புக்கு ஆப்பு(!) வைத்து விட்டார் ஏஜண்டு(கள்)

உங்கள் பொருட்களை ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு, பொதுவாக குளித்து, காலை சிற்றுண்டி முடித்து கிளம்பலாம்; மாலைக்கு மலையடிவார கிராமத்தில் வீட்டுத்தங்கல் (ஹோம் ஸ்டே) என்று ஸப்பா ஸம்மிட் ரிசப்ஷனில் ஒரு ஸ்டே ஆர்டர் போட்டு விட்டனர். அண்ணன் மணி டென்ஷன் ஆகி, ஹனாய் ஏஜண்டுக்கு மொபைல் கால் போட்டால், அவனது காலை தூக்கத்தில் அது மிஸ்டு காலா(வதி ஆ)கிவிட்டது.

ஒரு வழியாக போராடி எல்லோருக்குமாய் 2 மணி நேரத்துக்கு ஒரு ரூமை பிடித்தோம் ஸம்மிட்.டிலேயே. குளித்து முடித்து, ரவீந்திரர் கைவண்ணத்தில் ரெடிமேட் 3 இன் 1 காபியும், அடியேன் முயற்சியில் ப்ரெட் டோஸ்டுமாய் களை கட்டியது காலை உணவு.  அறையிலிருந்து வெளியே பார்த்த போது, ஆகாயத்திலிருந்து மழைக்கு பதிலாக பசுமையை தூவியது போல அக்கம்பக்கம் செடிகொடிகளும் மலர்களுமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாக தென்பட்டது.

முன்பே சொன்னது போல், திட்டமிட்ட சுற்றுலாவில் அவ்வப்போது நடைபெறும் தப்புக்களுக்கு நடுவே, சில சரியான விஷயங்களும் நடந்துவிடுவது உண்டு. எங்களுக்காக நியமிக்கப்பட்ட பழங்குடி சுற்றுலா வழிகாட்டிப் பெண் அதில் ஒன்று. (அப்பாடி, கஷ்டப்பட்டு எதனிக் டூரிஸ்ட் கைட்-ஐ மொழி “பெயர்த்து” விட்டேன் :))

நாங்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில், ஸம்மிட்டுக்கு வெளியே வந்தபோது, வெளியே கண்ணை பறிக்கும் ஊதா நிறத்தில் ஒரே மாதிரி உடை அணிந்த பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் வியட்னாமியர் போல வெண்ணை வெள்ளை நிறத்தில் இல்லாமல், பழுப்பேறிய சிவப்பு நிறத்தில், கொஞ்சம் செவ்விந்தியர் போல, முகத்தில் லேசான கிராமத்துக்களையுடன் தென்பட்டனர். அந்த கும்பலிலேயே சற்று தெளிவாகவும், பிரகாசமாகவும் தென்பட்ட ஜிங் என்ற பெண்தான் எங்களுக்காக ஸம்மிட் நியமித்த வழிகாட்டி!


ஜிங் வழிகாட்டுதலில் நாங்கள் பார்த்த லவ்வர்ஸ் மார்க்கெட், மற்றும் அன்று மாலை நாங்கள் செய்த ஹோம் ஸ்டே, இன்னும் பல விஷயங்களை புகைப்பட சான்றுகளோடு வரும் பதிவுகளில் பார்ப்போம் நண்பர்களே; அது வரை நன்றி, வணக்கம்!


 ஸா..பா.. தொடரும்

June 14, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 3.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 3.
தமாம் பாலா                                                                        For Audio Please Click Here


சமவெளிகளும், மலைப்பிரதேசங்களும், வெவ்வேறு உலகங்கள்; இந்த உலகங்களை இணைக்கும் மலைப்பாதைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றின் இலக்கணங்களும் அமைப்பும் பொதுவானவை. ஸா பா செல்லும் பாதையும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. வளைந்து, உயர்ந்து, சுற்றி முனை தாண்டி என்ன இருக்கிறது எந்த வண்டி வருகிறது என்பதே தெரியாத உத்தேசமான ஒரு பயணம்; சற்றே அகன்ற, ஓரளவு சௌகரியமான கொண்டை ஊசி வளைவுகள்!


மேலே போக போக, வெயில் தெரியாமல், லேசாக சிலுசிலுவென்ற காற்றோடு மழைத்தூரலுடன் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. இதற்கு அழகு சேர்ப்பது போல, கைபேசியில், எஸ்.பி.பாலுவின் இழைக்கும் குரலில், ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளியை’ (ரோசாப்பூ ரவிக்கைகாரி) தட்டி விட்டேன். தமிழ் நண்பர்களுடன், வேன் ஓட்டுனர், மற்றும் உடன் அமர்ந்திருந்த இன்னொரு வியட்னாமியும் தமிழ் இன்னிசை கேட்டு மகிழும் பேறு பெற்று, ஜென்ம சாபல்யம் அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

மலையின் ஒவ்வொரு அங்குலமும் குளிருக்கு அடக்கமாக, கனமான பச்சை கம்பளி போர்த்தியிருக்க, பசுமைப் படிக்கட்டுகளில் விவசாயம் நடப்பதும், திரை போட்டு மூடித்திறக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் மேகங்களும், அருவிகளும் மும்மரமாக ஈடுபட்டிருப்பதும் அங்கங்கே தெரிந்தது.



நடுவில் ஒரு இடத்தில் சாலைப்பணி நடைபெறுவதால், தாற்காலிகமான சேறும் சகதியுமான மண்பாதையிலும் கொஞ்ச நேரம் பயணித்தோம். மலைப்பாதையின் இறுதியில் ஊருக்குள் நுழைந்த போது, ஒரு அழகான ஏரியும், அன்ன படகுகளும் அதன் கரையில் அழகிய கட்டிடங்களும் தென்பட்ட போது, ஸா பாவில் நுழைந்து விட்டோம் என்று தெரிந்தது. அதன் பின் சற்றே சரிவான கடைத்தெருவைத் தாண்டி, அடுத்த அடுக்கில் உள்ள ஸா பா ஸம்மிட் விடுதியை அடைந்தோம்.

அந்த கட்டிடத்தைப் பார்த்தவுடன் எனக்கு தெருவின் ஒரு பக்கத்தில் தரைத் தளமாகவும், கட்டிடத்தின் பின்புறத்து தெருவில் முதல் மாடியாகவும் இருக்கும் பெங்களூரு வீடுகள் நினைவுக்கு வந்தன. ஆம்; ஸம்மிட் நுழைவாயில் இருந்தது, மூன்றாம் மாடியில். அதற்கு மேலே 3 மாடிகளும், கீழே 3 மாடிகளும் இருந்தன. மலைச்சரிவை சரியாக பயன்படுத்தி அங்கே உள்ள அனைத்து கட்டிடங்களும் கட்டபட்டிருப்பது தெரிந்தது.



உள்ளே போன போது, வரவேற்பறையில், வெளிநாட்டினர் முக்கியமாக ஐரோப்பியர்/அமெரிக்கர் போல பலர் கண்ணில் பட்டனர். பயணக்களைப்பில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கொஞ்சம் இளைப்பாறி, குளித்து முடித்து ஒரு கோப்பை காபியையும் சுவைக்கலாம் என்று தானே நீங்களும் என்னைப் போலவே நினைப்பீர்கள்? நானும் அப்படித்தான் நினைத்தேன்; ஆனால் நடந்தது வேறு!

ஸா..பா.. தொடரும்

June 10, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 2.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 2.
தமாம் பாலா                                                                   For Audio Please Click Here



லோ காய் ஸ்டேஷன்லே இறங்கறதுக்கு முன்னே கொஞ்சம் வியட்நாம் மேப் பத்தி கொஞ்சம் பார்ப்போம். உலக வரை படத்திலே இந்தியா எங்கே இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்; இல்லையா ?  இந்தியாவுக்கு கொஞ்சம் கிழக்கே வந்திங்கன்னா, பங்க்ளாதேஷ், பர்மா(மியன்மார் இப்போ), தாய்லாந்து, லாவோஸ் அப்புறமா, வியட்னாம்!

வியட்னாம், ஒரு கடல் குதிரை மாதிரி, ஒரு கை கால் இல்லாத ட்ராகன் மாதிரி, இந்தியா பக்கம் பாக்குது; லாவோஸும், கம்போடியாவும் சேர்ந்த வாத்து, இங்க்லீஷ் படம் மாதிரி, வியட்னாமோட உதட்டு முத்தம் கொடுத்துக்கிட்டிருக்குது! (பாலா, கண்ட்ரோல்/சென்சார் தேவை, பெண்களும் உன் பதிவை படிக்கிறாங்கப்பா :-)

வியட்னாம் ட்ராகனோட தலையிலே, கண் போல இருப்பது தான் தலைநகர்(?!) ஹனாய். மூக்குக்கு மேலெ, முன் நெற்றியிலே, லோ காய் ஸ்டேஷன் இருக்குது. இப்போ நேரடியா விஷயத்துக்கு வருவோம். லோ காய் நம்ப மேட்டு பாளையம் மாதிரி, ஸா-பா நம்ப ஊட்டி மாதிரி(தான்). லோ காய் ஸ்டேஷன்லேர்ந்து, 1 கி.மீ தூரத்திலே, சீனாவோட எல்லை வந்துடுது; அதை நாம ஸா-பாவிலேந்து திரும்பி வரும்போது பார்ப்போம், என்ன சரியா?


ஹனாய்லேர்ந்து 8 மணி பிரயாணம் முடிஞ்சு, காலை 5 மணிக்கு லோ காய் ரயில்நிலையம் வந்து சேர்ந்தோம். மலை பிரதேசத்துக்கே உரித்தான பசுமையோட அங்கங்கே ஆறு குளமும் தென்படுது, ரயில் பாதைக்கு ரெண்டு புறமும். வண்டியை விட்டு இறங்கும் போதே, சின்னதும் இல்லாமே, பெரிசும் இல்லாமே மழை! ப்ளாட்பாரத்திலேயே குடை வியாபாரமும் இருந்தது. ஒரு குடை விலை 50,000 வியட்னாம் ரூபாய்!! (மயக்கம் போட்டுடாதீங்க, இரண்டரை அமெரிக்க டாலர் தான்; இந்திய ரூபாய் கணக்கு போடறதை உங்களுக்கே விட்டிடறேன்)

பேரம் பேசாமல் ஒரு பொண்ணு(!) கிட்டே கருப்பு குடை ஒண்ணு வாங்கினேன்; பிரிச்சு பார்த்தா, டேமேஜ் பீஸ்; திருப்பி கொடுத்திட்டு, அவள் வெச்சிருந்த வெள்ளை குடையை வாங்கிட்டேன். எல்லோரும் 3 நாளைக்கான 100 கிலோ கட்டு சாத மூட்டையோடே (மானமுள்ள மறத்தமிழன், இங்கே தான் நிக்கிறான், தலை நிமிர்ந்து!) தட்டு தடுமாறி, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம். ஏஜண்ட், எங்களை ஈஸியா கண்டுபிடிச்சு, எங்களை ஸா-பாவுக்கு கூட்டிப்போக காத்திருந்த ப்ரத்தியேக வேனில் எங்களை ஏற்றி விட்டான்!

ஒரு மணி நேர மலைப்பாதை பயணத்தைப்பத்தியும், ஸா-பா ஸம்மிட் ஹோட்டல் தங்கல் பத்தியும் தொடர்ந்து பேசலாமா, நண்பர்களே?






ஸா..பா.. தொடரும்...

June 7, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.
தமாம் பாலா                                                                                For Audio Please Click Here



“தலைவரே! வர்ற வெள்ளிக்கிழமை நாம எல்லாரும் ஸா..பா.. போறோம். துணிமணிய பேக் பண்ணிடுங்க; சைனா பாடர் வரைக்கும் போகவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கேன்”- அண்ணன் மணி அவர்கள் சொன்னதை கேட்ட போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது!
சுற்றுலா சொர்க்க பூமியான வியட் நாமுக்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகுது; இன்னமும் ஆபீஸ்/வீடுன்னு இருக்கோமேன்னு நினைச்சப்போ, ஸா..பா.. பயணம் வந்துடுச்சு. அது என்ன ஸா...பா..?? நம்ப மக ஆஷிகா பாட்டு கத்துக்கிட்ட சரளி வரிசை மாதிரி இருக்கேன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஆசையாகவும், ஆர்வமாகவும் வெள்ளி வரைக்கும் ஓட்டிடலாம்னு இருந்த போது, புதன் கிழமை திடீர்னு, எதோ ஒரு உணவு ஒவ்வாமை ஆகி (அது என்னவோ, ஃபுட் பாய்ஸனாமே) ஆபிசுக்கு மட்டம் போட்டாச்சு. தட்டு தடுமாறி, ஃபாமிலி மெடிக்கல் போய், டாக்டரை பார்த்தேன். அவர் ஒரு இஸ்ரேலியர். வெள்ளை கோட் போடாமல், எம்.ஜி.யார் பாணி சிகப்பு சட்டையில் பழம் மாதிரி இருந்தார். மருந்து வாங்கிட்டு, “ஸா பா போகலாமா ஐயா?”ன்னேன். “அது நாளைக்கு, உன் உடம்பு உள்ள நிலையை பொறுத்த்துன்னாரு அவரு. அதுவும் சரிதான், அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.

மருந்து புண்ணியத்திலே, வெள்ளி மாலை பெட்டி படுக்கையோடே நண்பர்கள் கூட்டமா கிளம்பிட்டோம். ஒரு பெரிய டொயட்டா இன்னோவா டாக்ஸியை பிடிச்சுட்டோம்; ரயில் நிலையம் போயிடலாம்னுதான் தோணிச்சு. ஆனா வியட் நாமி ஓட்டுனர், பாஷை பிரச்சினையாலே மக்கர் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஆளுக்கு ஆளு புரிய வைக்க முயற்சி செய்ய, நானும் “கூஊஊ...சிக்கு சிக்குன்னு” அதிரடியா இறங்கியும் ஒண்ணும் பலிக்கலே!


ஒரு வழியா ‘டூர் ஏஜண்டுக்கு மொபைல் போட்டு, டாக்ஸி ட்ரைவர் காதிலே வச்சு, ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தள்ளிட்டு போய்ட்டோம். கா- ஹனாய், அசப்பிலே நம்ம ஊர் ஸ்டேஷன் மாதிரியே இருந்தது. ப்ளாட்ஃபார்ம் தான் தரையோடு தரையா, கம்பார்ட்மெண்ட் உள்ளே போக ஏணி வச்சமாதிரி ஏற வேண்டியிருந்தது. ஸ்டேஷன் பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தாலும், வண்டியும் கோச்சும் வீடு மாதிரி, நல்லாவே இருந்தது.



சரியா இரவு 9:10 மணிக்கு ரயில் புறப்பாடு; நாங்க தான் கடைசி பெட்டி. பெரிசுங்க மணி, ரவி தவிர இளசுங்க ராம்கி, சுரேஷ் மற்றும் ரெண்டுங்கெட்டானா, அரவிந்தும் நானும்; ஆக மொத்தம் ஆறு பேரும் அரட்டை கச்சேரியை தொடங்கிட்டோம். பேச்சு சுத்தி சுத்தி ஆபீஸ் வேலை பத்தியே இருந்தது, அதுக்கு வெளியே வரும் போது, தூக்கம் கண்ணை சுத்த, அடுக்கு படுக்கையிலே நுழைஞ்சுக்கிட்டோம். மீட்டர் கேஜ் ரயில் தாலாட்டுற மாதிரி இல்லாமே, தாறுமாறா அலைபாய்ஞ்சு, வயித்தை கலக்கிட்டு ஓடிக்கிட்டிருந்துச்சு, காலை 5:00 மணிக்கு, லோ-காய் ஸ்டேஷன் வர்ற வரைக்கும்!




ஸா..பா.. தொடரும்...