June 3, 2018

காதல்

காதல்
(தமாம் பாலா)

காதல் சமிஞ்சை கண்டு செல்வீர்
காதலின் பாதை கடினமான உயர்
செங்குத்தான மலையே ஆயினும்

காதலின் இறக்கைகள் உங்களை
ஆதரவுடன் தழுவினால் இணங்கி
விடுவீர் அவற்றினூடே மறைந்து

இருக்கும் வாள் உங்கள் சதையை
அறுத்திடும் அபாயம் இருப்பினும்
காதலின் பேச்சை நீர் நம்பிடுவீர்

அதன் குரல் உங்கள் கனவுகளை
அடித்து நொறுக்கி தூளாக்கினும்
ஆடிக்காற்றில் சாயும் வாழையாய்

தலையில் மகுடம் வைத்து காதல்
சிலுவையில் அறைந்து முடிக்கும்
வளர்ப்பதும் வெட்டுவதும் காதல்

கானகத்து மரமாய் வானளாவியே
வளர்ந்து நிற்கும் உமது கிளைகள்
வெயிலில் அசைந்தாட அவற்றை

மெல்லத் தடவி முத்தமிடும் காதல்
சல்லி வேர் ஆணி வேரையும் கூட
ஆட்டி அசைத்துப் பார்க்கும் காதல்

சோளத்தின் கதிராய் கட்டும் காதல்
போரடித்து தோலுரிப்பதுவும் காதல்
சலித்து உமி விலக்கும் மாவையும்

பிரித்தெடுக்கும் காதல் தொடர்ந்து
பிசையும் பதமாய் பந்தாய் உருட்டி
வேள்வித் தீயில் ஆகுதி செய்திடும்

இதெல்லாம் காதலின் சித்து மாயம்
இதயத்தின் ரகசியங்கள் புலப்படும்
வாழ்வின் இதயத்தின் துண்டாகும்

காதலில் மன அமைதியும் இன்பமும்
மட்டுமே தேடும் கோழைத்தனம் தன்
நிர்வாணம் மூடி களத்து மேடு விட்டு

காத தூரம் செல்லட்டும் பருவ காலம்
காணாத வறண்ட பாலை தேடி அங்கு
வாய்விட்டு சிரித்திடவோ மனம்விட்டு

அழுது தீர்த்திடவோ இயலாது அறிவீர்
சூன்யத்தில் தோன்றும் சூன்யத்தில்
முடியும் காதல் எதற்கும் வசப்படாதது

வசப்படுத்தவும் முயலாது காதலுக்கு 
காதல் மட்டுமே போதுமானது வேறு  
விதமான தேவைகளும் கிடையாது 

காதலிக்கும் போது கடவுள்  உங்கள் 
இதயத்தில் இருக்கிறார் என்று  நீர் 
உரைத்தலாகாது அவர் இதயத்தில்

காதலர் வீற்றிருக்கின்றீர் என்பதே
சத்தியம் காதலை வழி நடத்திடும் 
உத்தேசமே வேண்டாம் ஏனெனில்

காதல் உங்களது  மதிப்பைக் கூட்டி  
பாதை காட்டி வழி நடத்தும் காதல் 
தன்னிறைவு தவிர்த்த ஆசாபாசம்

அற்றது அதையும் தாண்டி நீங்கள் 
ஆசைப்பட்டால் மெழுகாய் உருகி 
இரவின் கானம் பாடும் நீரோடை

போலாகிடுவீர் வரம்புகள் கடந்த 
மென்மையில் காதலின் வலியை 
உணர்ந்தும் காதலின்  புரிதலில்

காயப்பட்டும் களித்து ரத்தம் சிந்தி  
சிறகுகள் முளைத்த இதயத்துடன் 
காலையில் கண் விழித்து காதல்

நிறைந்த நாளுக்கு நன்றி சொல்லி 
நண்பகலில் காதலின் தியானத்தில் 
ஆழ்ந்திருந்து இரவில் வீடு சேர்ந்து

இனியவருக்கான இறை வாழ்த்தை
இதயத்தில் இருத்திடுவீர்  இறைவன் 
புகழை உதடுகள் உச்சரித்திருக்கவே.

(நன்றி: கலீல் கிப்ரானின் காதல்)