July 29, 2008

சாதனையாளர் டாக்டர் பாலாஜி


பலித்தது என் வாழ்நாள் கனவு!
(நன்றி- ஆனந்த விகடன்)
''நான் சின்ன வயசுல இருந்தே பெரிய டாக்டர் ஆகணும். மருத்துவத் துறையின் மிக உயரிய விருதான பி.சி.ராய் விருதை வாங்கணும்னு கனவோட இருந்தேன். என்னோட கனவு மெய்ப்பட்டிருச்சு!''-விருது வாங்கிய சந்தோஷம்பொங்கப் பேசுகிறார் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி. பல் மற்றும் முகச்சீரமைப்பு நிபுணர். பல் மருத்துவத் துறையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பி.சி.ராய் விருது பெற்றிருக்கும் தமிழர்.

சென்னையில் உதடு, அண்ணப்பிளவு இம்ப்ளான்ட் மையத்தை நடத்திவரும் பாலாஜி, மொரீஷியஸ், அந்தமான், செஷல்ஸ், மாலத்தீவுகள், இலங்கை ஆகிய நாடுகளிலும் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
''பி.சி.ராய் விருது என் வாழ்நாள் கனவு! அதைவிட சந்தோஷம், விருதைக் கொடுக்கும்போது நம்ம ஜனாதிபதி என்கிட்டே மட்டும்தான் பேசினாங்க. விழா மேடையில நான் விருது வாங்குறதுக்கு முன்னாடி என்னோட பயோடேட்டாவை வாசிச்சாங்க. அதுல நான் அந்தமான் தீவுகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருக்கிறதைப் பத்தி சொல்ல... ஜனாதிபதி முகத்தில் சட்டுனு ஒரு மகிழ்ச்சி. 'நீங்க அந்தமானில் வேலை பார்த்திருக்கீங்களா? நானும் அங்கே இருந்திருக்கேன், தெரியுமா?'ன்னு என்கிட்ட ஆர்வமா கேட்டாங்க. என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி அது.
இதுவரை எனக்கு எத்தனையோ விருதுகள், பதக்கங்கள் கிடைச்சிருக்கு. இதுக்கெல்லாம் ஒரே காரணம் ஓயாத உழைப்பு. அறுவை சிகிச்சையில் புதுசு புதுசாக ஏதாவது கண்டுபிடித்துக்கொண்டிருந்தால்தான் உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும். சமீபத்தில் நான் எழுதின, 'டெக்ஸ்ட் புக் ஆஃப் ஓரல் மேக்ஸில் ஃபேஷியல் சர்ஜரி' புத்தகம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுஇருக்கிறது. லண்டனின் புகழ்பெற்ற பதிப்பகமான 'எல்சிவியர்' அந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. ஒரு தமிழன் இந்த சாதனை செய்திருப்பது பெரிய விஷயம் என மொரீஷியஸ் தமிழர்கள் என்னிடம் சொன்னார்கள். சின்னச் சின்ன பாராட்டுக்கள்தான் பெரிய சாதனைக்கு அடிப்படை!

உதடு பிளவு பாதிப்புகள் பற்றி இங்கே விழிப்பு உணர்வு மிகக் குறைவு. அமெரிக்காவில் மட்டுமே இருந்த பி.எம்.பி. அதாவது 'எலும்பு உருவாக்கும் புரதம்' சிகிச்சை முறையை முதன் முறையாக இந்தியாவுக்குக் கொண்டு வந்தேன். விபத்தில் அடிபட்டு எலும்புகள் உடைந்தால்கூட இந்த சிகிச்சை முறையில் எலும்புகளை வளரவைக்க முடியும். இந்த விருது இன்னும் எனக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மேலும், நிறைய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கடமையும் வந்திருக்கிறது. இந்தத் துறையில் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்!''- கண்கள் மின்னச் சிரிக்கிறார் எஸ்.எம்.பாலாஜி!

July 25, 2008

கண்ணீரை.. உலகமயமாக்கு..


கண்ணீரை.. உலகமயமாக்கு..
பாலசுப்ரமணியன்

காட்டில் குருதியைக் குடிக்கும்
அட்டையை சுட்டுகொளுத்துவோம்
நாட்டில் நம் ரத்தத்தை உறிஞ்சும்
குட்டிகொசுவையும் கொல்லுவோம்

அடுத்தவன் நாட்டில், பெருவல்லரசும்
அதிரடியாய் புகுந்து, அதற்கும் நியாயம்
உலகுக்கு கற்பித்து, எரிஎண்ணெயையும்
உயிரையும் குடிக்கும் கொடுமையையும்

ஜனநாயம் பேசும், பணநாயகம் பாடும்
இனப்படுகொலை தினம் பல செய்யும்
மனசாட்சி அற்றவரைக் கண்டிப்போம்
என காத்தரினா, ரீட்டா, வில்மா மட்டும்

நூறுகோடி மக்கள் நாம் இருந்தும்
போறாத நிலத்தடி நீர்வளத்தையும்
கூறு போட்டு உறிஞ்சுபவரையும்
யாரு தட்டிக்கேட்பது என்போம்

நதியை இணைக்க சும்மா பேசுவோம்
வறுமையை தாராள மயமாக்குவோம்
தண்ணீரை தனியார் வசமாக்குவோம்
கண்ணீரை உலக மயமாக்குவோம்!
(நன்றி: கீற்று.காம்)

July 20, 2008

கூழ் அடுக்கு

கூழ் அடுக்கு
(by தமாம் பாலா)

ஆ.. அதுதான் அவன் பெயர்.

இரவு, 12 மணி. அமாவாசை நிலவு, பளிச்சென்று துடைத்து வைத்தது போல பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இன்னும் 20 செகண்டுகளில் சிகப்பு நிறம் வந்துவிடும்.

அதற்குள் வீட்டுக்குள் சென்று விடவேண்டும். தினம் என்ன பொழப்புடா சாமி(?!), 5000 கீமீ ஷட்டில் பயணம், என அலுத்துக்கொண்டு தனது 1025 மாடி கட்டிடத்தில் நுழைந்தான்.

நியூக்ளியர் பவர் எலிவேட்டர் வழுக்கி, 526ம் மாடியில் நின்றது. வெளியே வந்தான், தன் அப்பார்ட்மெண்ட் முன்பு நின்றான். கதவின் முன் நின்று சன்னமாக.. ஆ..ஆ..ஆ.. என்று சொல்ல, கதவின் ப்ளாஸ்மா டிஸ்ப்ளேயில்.. ரால்(RAL) 1001,1002.. என்று ஓடி ரால் 3014ல் நின்று.. கதவு..திறந்தது!

சொல்ல மறந்து விட்டேனே.. ஆ..வின் முழு பெயர்.. ஆத்மா!
நூறு தலைமுறைக்கு முன் ஆத்மராம ஆதிநாராயண ராமகிருஷ்ணன் என்ற பெயரை.. நாளாக,நாளாக பெயர் குறைப்பு செய்து.. கிபி 5035ல், இன்று.. ஆ.. என்று சுருக்கிவிட்டது உலக அரசாங்கம்!

ஆ..விலே எந்த ஆ..? என்ற பெயர் குழப்பம் வரக்கூடாதென.. ரால் கலர் !!!


********

வீட்டுக்குள்ளே.. வீடு என்ன.. இருப்பதே.. ஒரே அறைதானே..
ஜெபம் செய்வது போல விரல் நுனியை தொட்டால், ஹால்,பெட்ரூம்,கிச்சன் அல்லது பாத்ரூமாகி விடுகிறது...

உள்ளே.. ஜைரோஸ்கோபிக் நாற்காலியில்.. நி.. (நித்யா!! :))
ஓ.. இப்போது ஹால் மோடில் வைத்திருக்கிறாள்.

பின்னால் திரும்பாமலேயே, வந்துடுங்க.. ஆ.. என்றாள்.
அவள் கைகள் டைனிங் டேபிள் கம் மானிடரில்..

என்ன இது.. டேபிளின் திரையில்.. பச்சை நிறமாக..??
மெலிதான மாங்காயின் புளிப்பு வாசனை.. காற்றில்..மூக்கில்..

நி.. ட்ராயரிலிருந்த ஸெலுலோஸ் கவரை எடுத்து கிழித்தாள்..
அதை எடுத்து மெல்ல.. கடிக்க ஆரம்பித்தாள். கிழித்து போட்ட கவரில்.. சிந்தடிக் மேங்கோ பைட்.. நேச்சுரல் மேங்கோ ப்ளேவர்!!

ஆ.. கண்கள், மின்ன, அவளை.. பின்னாலிருந்து.. அணைத்துக் கொண்டான். அடி..க..சொ..இ..?? (அடி கள்ளி, சொல்லவே இல்லையே !!!) அவர்கள் பேசிக்கொள்வதே எண்ணி, சில வார்த்தைகள் தான்.
எனர்ஜி லெவெல் குறையக்கூடாதென, உ.அ வில் (உலக அரசில்) பேச்சுக்கு ரேஷன்!! என்றாவது உணர்ச்சி வசப்பட்டு.. சில டெசிபல் மீறி விட்டால்.. அவ்வளவு தான்! ஒரு வாரம் மௌன தண்டனை.. வீட்டின் சுவர்களுக்கெல்லாம், கண்..காது..மூக்கு!!!!!!!

உலகம் தனி,தனி நாடாக இருந்தபோது.. இந்தியா என்ற தேசத்தில், டாக் ரேஷனை ஒருவர் கண்டுபிடித்தாராம்.. அவர் பெயர் கூட.. ஏதோ.. ம..ர.. என்று வருமே.. (ஓ.. மணி ரத்னம் ?!!!)

நி.. முகத்தில், தோன்றிய சந்தோஷம், திரையில் மறைந்த மாங்காவோடு, மங்கி.. இருண்டது.. “ஆ.. சொல்லு.. இந்த முறை ஓகே ஆகிவிடும் தானே.. அவள் குரல் கம்மி, கண்ணில் நீர் !!

“ஆண்டவன் அருளால் எல்லாம்”.. ஆ.. முடிக்கும் முன்.. நி.. அவன் வாயை பொத்தினாள். ஆ, உ.அ.வின் கட்டளையை மீற நினைக்காதே! கடவுள் என்பது பொய் என்று 3000 வருடம் முன்னேயே ப்ரூவ் ஆகிவிட்டதல்லவா?? நல்லவேளை நீ சொன்னது.. 10 டெசிபலை தாண்டவில்லை.. பிழைத்தாய்... அவனை.. இறுக அணைத்தாள்!
விரல் நுனி.. அறையின் மேசை மறைந்து.. அந்த இடத்தில்.. படுக்கை!

********

நி..நி..நி.. டாக்டர் அறையிலிருந்து.. குரல் கேட்டது. நித்யா உள்ளே சென்றாள். டாக்டர் ரூம், ஒரு மினி ஸ்பேஸ் ஸ்டேஷன் போல, ஒரு குட்டி லாபரெட்ரி போல.. சீக்கிரம், வந்து உட்காரு.. 21ம் நூற்றாண்டு மாதிரி எனக்கென்ன உதவிக்கு நர்ஸா இருக்கா? இன்னும் 425 பேஷண்ட் பார்க்கணும்.. அலுத்துக்கொண்டாள்.. அந்த பெண் டா..!!

என்ன.. மறுபடியும்.. ஸ்கேனா?? உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.. என்ற படி ஹோலோகிராபிக் ஸ்கேனரை இயக்கினாள், டா..

திரையில்..

குழந்தை..
ஆண் குழந்தை..
எடை 500 கிராம்
மூளை 46 கிராம்
இஞ்சினியரிங் அறிவு 60%,
கவிதை 5%,
காமம் 24%
பாஸ்கெட் பால் கைகள்,
ப்யானோ விரல்கள்..
...
....
என்று.. பல ஆயிரம்..வரிகள்..

ஓடி.. ஓடி..
மெல்ல..
இறுதியில்..
ஒரு வரி..
சிகப்பு நிறத்தில்..
...கூழ்.. அடுக்கு !!!!
அபாயம்.. அனுமதி மறுக்கப்படுகிறது!!!!!!!!!!!!!!!!!

டா.. மீட்டியோர் தாக்கியது போல்.. அதிர்ந்தாள், கொதித்தாள். அவள் முகத்தில் சினேக பாவம் மறைந்து, ஒரு முறைப்பும்.. விறைப்பும்..

உங்களுக்கெல்லாம் எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா??
ஒரு காலத்துல,உக்காந்து சாப்பிட்டீங்க..
சமுதாய,சமூக பொதுநீதி அடிப்படையிலே.. வேலையிலே ஒதுக்கினோம்.. பிறகு கல்லூரியிலே.. +2 விலே.. பிறகு 1000 வருஷம் போராடி.. எல் கேஜி வரை வடிகட்டினோம்.. இத்தனை வருஷம் முயற்சியிலே இப்போதான், வயித்து புள்ளை அளவுக்கு.. முன்னேறியிருக்கோம்..

வேண்டாம், எச்சரிக்கைன்னு சொன்னா .. மறுபடியும்.. அதே தப்பு..

நி.. சட்டென்று.. டா.. வின் காலில் விழுந்தாள்.. உங்களை என் தெய்வமா.. நினைக்கிறேன்.. இந்த ஒரு தடவை மட்டும்..

தப்பு மேல தப்பு பண்ணாதே.. நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கே..உன்ன நேரா அஸைலமுக்கு அனுப்பலாம்.. ஆனாலும் என்னைப் போல பெண்ணாச்சேன்னு பாக்கறேன்..

அப்ப.. என் கொழந்த...???
அது எல்லாம் கூழ்.. அடுக்கு ன்னு வந்த போதே.. ஆடோமெடிக்கா.. ந்யூக்ளியர் டெஸ்ட்ராயர் மூலம் க்ளீன் பண்ணியாச்சு.. நீ.. போகலாம்..!!!!

நித்யா.. மெதுவாக ஹாஸ்பிடலின் காரிடாரில் நடந்தாள். வயிறு கொஞ்சம்.. லேசானது போல, மனசு கனமானது போல.. ஒரே குழப்பமான.. ஒரு.. அமைதி.. மயான அமைதியோ?!???

எலிவேட்டரில்.. போகும் போது, நி.. எதோ அசந்தர்ப்பமாக.. உணர்த்தாள்.. வயிற்றில் ஏதோ சங்கடம்.. ஒரு மெல்லிய பூவால் வருடுவது போல.. கொஞ்சம் கிச்சு, கிச்சு போல..

5 டெசிபலில்..
மிக,மிக மென்மையாக...
களுக்கென்று.. சிரித்தபடி..
அவள் வயிற்றுக்குள்..
‘சக்’ என்று உதைத்தான்...
ஆ..!!!!
(ஆத்மா இல்லை.... ஆண்டவன்!!!!!!!!!! :))))))))))

******

July 14, 2008

இருக்கு ஆனா இல்ல..

கொட்டையில்லா திராட்சை
தமாம் பாலா

ஈரமில்லா நெஞ்சங்களும்
நேரமில்லா வாழ்வுகளும்
கனவில்லா தூக்கங்களும்
நினைவில்லா விழிப்புகளும்

உணர்ச்சியில்லா உயிர்களும்
உயிரில்லா உணர்ச்சிகளும்
விருப்பமில்லா அழைப்புகளும்
நெருக்கமில்லா நட்புகளும்

சோகமில்லா இழப்புகளும்
சுகமில்லா அணைப்புகளும்
முத்தமில்லா காதல்களும்
யுத்தமில்லா காயங்களும்

வியர்வையில்லா உழைப்புகளும்
உயர்வுகளில்லா ஊதியங்களும்
பொறுப்பில்லா நுகர்ச்சிகளும்
மறுப்புகளில்லா புகழ்ச்சிகளும்

வண்ணமில்லா ஓவியங்களும்
வாசமில்லா வண்ணமலர்களும்
விருந்தில்லா விழாக்களும்
மருந்தில்லா வியாதிகளும்

கலவியில்லா கர்ப்பங்களும்
கஷ்டமில்லா பிரசவங்களும்
புத்தியில்லா சக்திகளும்
சக்தியில்லா சமூகங்களும்

கொட்டையில்லா திராட்சையும்
கொள்கையில்லா மனிதர்களும்
சங்க கால சரித்திரம் இல்லை
சம கால சாதனையின் எல்லை!