May 11, 2018

வரைந்து உயர்ந்தவன்

வரைந்து உயர்ந்தவன்
(தமாம் பாலா, திருத்திய பதிப்பு)

நிமிடத்தில் நூறு கோடு போடுவான்
இயந்திரங்களின் வட்ட சதுரங்களும்
வளைவுகளும் நெளிவுகளும் என்றும்
வரைவாளன் அவனுக்கு அத்துப்படி

பள்ளி முடித்ததும் தொழிலைத் தேடி
பட்டயம் பெற்று வென்றவன் இவன்
இவனே ஓவியத்தின் முதலெழுத்து
இன்றியமையாத நல்லுயிரெழுத்து

காகிதத்தில் கோடுகளை வரைந்து
வரைந்து அவன் செழிக்க, வாழ்க்கை
இவன் முகத்தில் பலகோடு வரைந்து
இசைக்கிறது ஒரு இனிய பாடலை

இரவும் பகலும், கண்சிமிட்டாமலும்
வரைவான் அவன், உறவும் பகையும்
உணராது அவனது தவ வலிமையும்
கல்லுடைக்கும் கடின உழைப்பினும்

வலியது, பெரியது கட்டிடத்தின் கீழே
அடித்தளமாய் நின்று அதன் கற்களை
சுவர்களை,கதவுகளை மனதில் தினம்
சுமக்கும் இவனது தவம் கர்ம யோகம்

உலக வரைபடத்தில் இல்லாத இடமும்
உடன் பெறும் முகவரி, இவன் கைப்பட
உருவாக்கிய கட்டுமானக் கவிதையால்
உண்டாகும் இவனுக்கும் ஒரு முகவரி

காகிதத்தில் அவன் போடும் புள்ளி, இலை
கோலங்கள் சிறிதளவும் பிசகுவதில்லை
புது இரத்தத்தை பாய்ச்சும் உற்சாக வேலை
புகழ் எனும் இளமை தரும் கறிவேப்பிலை

இருபதுக்கு முன் இவனது இரு கைகளில்
வருவது சில்லறையாய், இறுதி வரையில்
மிஞ்சுவது  உழைப்பின் ஆத்ம திருப்தியும்
நெஞ்சார்ந்த நேர்மையும் தன் வலிமையும்!

No comments: