May 13, 2018

வேலை

வேலை
(தமாம் பாலா)

உன் வேலை ஓயாமல் சுழன்றிடும்
உலகத்தின் வேகத்திற்கு இணை
அதன் ஆத்மாவுடன் ஒரு பிணை

சும்மா இருப்பது மாறி வரும் பருவ
கால சூழ்நிலைக்கு அன்னியமாகி
எல்லையில்லா பிரபஞ்சத்தை நாடி

பெருமிதத்துடன் பீடு நடைபோடும்
வாழ்க்கை பேரணியினை விட்டு
விலகிப்போகும் இழிநிலையாகும்

வேலையில் ஆழ்ந்திடும் வேளை
வேய்ங்குழலாய் நீ மாறி விட உன்
இதயத்தில் பிறக்கும் இன்னிசை

இல்லாவிடில் ஒரு பிண்டமாய்
பொல்லாத மௌனத்தில் நாம்
எல்லாரும் ஓய்ந்து விடுவோம்

வேலையே ஒரு சாபம் என்றும்
உழைப்பே துரதிஷ்டம் என்றும்
உரைத்தார் நம் மனம் கெடவே

மாற்றி யோசிப்போம் அதை
ஆற்றும் பணியில் நீ பூமியின்
நேற்றைய கனவு ஒன்றினை

நிறைவேற்றி உன் பிறவியின்
பயனை அடைகிறாய், வேலை
வாழ்க்கையின் மீது கொண்ட

காதல் அன்னியோனிய அன்பு
இரகசியம் அதை உணராமலே
சிலர் பிறந்ததே பாரம் என்றும்

தொழில் என் தலையெழுத்து
என்றெண்ணி வாடியிருக்க
மின்னும் வியர்வை வழிந்து

அழித்திடும் அந்த எழுத்தை
ஊழ்வினை நம் வாழ்வினை
பாழ் செய்யும் இருட்டென்றும்

உரையாடல் கேட்டிருந்தோம்
தேடல் இல்லா வாழ்வு இருள்
அறிவு இல்லா தேடல் இருள்

உழைப்பில்லா அறிவு இருள்
அன்பிலா வேலையும் இருள்
ஈடுபாடு மிகுந்த செயல்கள்

உன்னை உன்னுடனே சேர்த்து
உன்னுள் உறையும் இறையை
உணர வைக்கும் நற்கனிகள்

ஆத்மார்த்தமாய் அனுபவித்து
உற்சாகமாக செய்யும் கடமை
இதயத்தின் நூலிழை எடுத்து

நெய்த பட்டுத்துணி போன்றது
நேசிப்பவர் அணிந்து மகிழவும்
நேர்த்திபட கட்டும் வீடு அதுவே

உற்றாரின் உறைவிடம் ஆகும்
பிஞ்சு விதை பயிரிட்டு பின்னே
அறுவடை செய்வதிலே இன்பம்

அன்புக்கினியர் புசிக்கும் கனி
அகமகிழ்ந்து செய்யும் தொழில்
அனைத்திலும் உன் உயிர் மூச்சு

இணைந்திட வானகத்து வாழ்
முன்னோரும்ஆசி வழங்குவர்
பளிங்குக்கல்லை செதுக்கும்

பணியாளன் தனது ஆவியின்
பரிமாணத்தை கல்லில் காண
மண்ணை உழுவதை விடவும்

உயர்ந்தது அவன் கைத்திறன்
வான வில்லதனை வளைத்து
மானம் காக்கும் நூலாடையில்

பதிக்கும் நெசவாளி சிறந்தவன்
பாதம் காக்கும் செருப்பு தைக்க
பாடுபடும் மனிதனை விடவும்

என்றெல்லாம் உறக்கத்தினிலே
எவரோ சொல்லக் கேட்டதுண்டு
எழுச்சிமிக்க விழிப்பு நிலையில்

எடுத்துரைப்பேன் நானும் இன்று
அடுத்து வீசும் ஆடிமாத காற்றும்
நெடுநெடுவென உயர வளர்ந்த

மரத்திடம் பேசுவதை விட  அதன்
அடியில் காணும் புல்வெளியுடன்
அளவளாவுவதே அதிகம் என்று

காற்றின் குரலை இன்னிசையாய்
மாற்றுபவனே சிறந்த கலைஞன்
ஏற்றம் தரும் நல்லன்பின் வழியே

வேலை செயல் ஆதூரக் காதலின்
வெளிப்பாடே ஆகும் ஆர்வமில்லா
தொழிலில் ஈடுபட்டு கால விரயம்

செய்வதை விட ஆலய வாசலில்
அனுதினம் கையேந்தி அமர்ந்து
உழைப்பவனிடம் பிச்சை எடுத்து

உண்பது மேலானது வெறுப்பில்
சமைக்கும் உணவில் ருசியேது
பசியும் தணியாது வெஞ்சினம்

கொண்டவர் பிழிந்த திராட்சை
ரசமும் விஷமாக மாறி விடும்
தேன் குரலில் தேவதை போல்

பாடினாலும் விருப்பம் இல்லா
ராகம்  முழுவதும் மூடிய வாய்
முனகல் குரலாகவே கேட்கும்

(நன்றி, கலீல் ஜிப்ரான்)

No comments: