May 12, 2018

குழந்தைகள்

குழந்தைகள்
(கலீல் கிப்ரான், தமிழில் தமாம் பாலா)

உங்கள் குழந்தைகள், அவர்கள்
உங்களது குழந்தைகளே அல்ல
வாழ்க்கை தனது சுயதேடலில்
விளைவித்த மகவுகள் இவர்கள்

உங்கள் மூலம் வந்தவர் ஆனால்
உங்களிடமிருந்து அல்ல, உங்கள்
உடன் வாழ்ந்தாலும் அவர் உமது
உடமையோ உரிமையோ அல்ல

அவர்களுக்கு உங்களது அன்பை
அளியுங்கள் அது மட்டும் போதும்
அவருக்கு உங்கள் சிந்தனைகள்
அவை தேவைப்படுவது இல்லை

ஏனெனில் அவருக்கென்று சுய
எண்ணங்கள் உண்டு, நீங்கள்
எழுப்பிய வீடுகள் குழந்தைகள்
எண்சாண் உடலுக்குக் கூடுகள்

அவர்தம் உயிர்ப்பு என்ற ஆத்மா
அது எதிர்காலத்தில் வாழ்கிறது
அதன் நிழலைக்கூட உங்களால்
அறிய இயலாது  உம் கனவிலும்

குழந்தைகள் போல வாழ்ந்திடவே
விழையுங்கள் தவறியும் அவரை
உங்களைப் போல மாற்றி விடும்
உத்திகள் வேண்டாம், வாழ்க்கை

என்கின்ற பயணம் பின்னோக்கி
என்றும் செல்வதில்லை, நேற்று
என்ற நாளில் தேங்கிடாமல் அடி
எடுத்து முன்னே செல்லும் பாதை

குழந்தைகள் உயிருள்ள அம்புகள்
இழுத்து நாண் ஏற்றிய வில்களே
நீங்கள், எல்லையில்லா தூரத்தில்
எங்கேயோ குறிவைத்து வில்லவன்

உங்களை வளைத்து விடும் பாணம்
உலகங்கள் பல தாண்டிப் பறக்கும்
உவகையுடன் உடல் வளைத்திடுவீர்
உயர்ந்த வில்லவன் பலத்தில் நீரே

அவன் அன்புடனேயே நேசிக்கிறான்
அற்புதமாய் விரைந்து செல்லுகின்ற
அம்பை மட்டுமல்ல அதை செலுத்தும்
அசையாத ஆடாத வில்லையும் கூட!

No comments: