January 12, 2010

சட்டையும், அசட்டையும்

சட்டையும், அசட்டையும்
தமாம் பாலா

காலையில் எழுந்து கைகளை உரசிக்கொண்டு உள்ளங்கையை பார்த்த போது, மோதிர விரலுக்கு நேர் கீழே கொஞ்சம் போல தோல் உரிந்தது போல தெரிந்தது; பாம்பு சட்டை உரித்தது போல..

இன்றைக்கு வியாழக்கிழமை பிள்ளைகளோட யூனிஃபார்ம் துணிகளை சலவைக்கு கொடுத்திடுங்க, இல்லைன்னா சனிக்கிழமை அவங்க ஸ்கூல் போக முடியாது-இது ராதிகா

சே.. இந்த அலி வேற ஊருக்கு போயிட்டான்; நாமளே லாண்டரிக்கு போக வேண்டியதாயிடுச்சு; பேசாமே பாம்பாவே பொறந்திருக்கலாம். புதுசு புதுசா சட்டை உரிச்சு கிட்டே இருக்கலாம். வாங்குறது, துவைக்கிறது, தேய்கிறது அப்படின்னு எந்த தொந்தரவும் இல்லை.

சட்டை.. சட்டை, அந்த ஒற்றை சொல்லில் சிறிது நேரம் மனம் சுற்றி வந்தது. ஆதிக்காலத்திலிருந்தே எழுத்துக்கள் மாறி வந்தது போல இலை தழைகளிலிருந்து, மிருக தோல் ஆடையிலிருந்து, மர உரியிலிருந்து சட்டைகள் புது புது ஃபேஷனாக மாறி மாறி வந்திருக்கின்றது.

ராஜ ராஜ சோழன் காலத்தில் மேலுக்கு ஒரு துண்டும் ஆபரணங்களும் இருந்திருக்கலாம்; சிலையில் உள்ளது போல. ஏ.பி.நாகராஜன் புராண படங்களில் பொது மக்கள் கயிறு வைத்து கட்டும் அங்கிகளை அணிந்து இருப்பார்கள்; ராஜா காலத்து எம்.ஜி.ஆர் படங்களில் அவர் கிட்டத்தட்ட ஒரு ஃப்ராக் போன்ற உடை அணிந்து சுழன்று சுழன்று கத்தி சண்டை போடுவார்.

இப்போது நாம் நினைத்தபடி சுதந்திரமாக இஷ்டப்படி சட்டை போடுகிறோம்; ஆனால் நூற்றாண்டு காலத்துக்குள் தென் மாவட்டங்களில் மேல் சட்டை போடுவதற்கே குறிப்பிட்ட இன மக்கள் போராட்டங்கள் நடத்தவும் வேண்டியிருந்திருக்கிறது. சுமார் 50-60 ஆண்டுக்கு முன் கூட மக்கள் மேல் கோட் போட்டு வேட்டி கட்டி நடமாடி இருக்கின்றனர்.

நம் ஊரில் டாக்டர், வக்கீல், போலீஸ், இராணுவம் என்று போட்டிருக்கும் சட்டையை உடையை பார்த்தே அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஸஃபாரி உடையை பார்த்தால் மினிஸ்டர் பி.ஏ என்று நேற்று சிசேரியனில் பிறந்த குழந்தை கூட சொல்லி விடும்.இது போன்ற துறைகளில் இல்லாத சாமான்ய மனிதர்கள் அணியும் சட்டைகள் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் நாட்களில் ஒரு சட்டைக்கும் இன்னொரு சட்டைக்கும் குறைந்த பட்சம் 365 நாள் இடைவெளி இருந்தது. (தீபாவளி தானுங்க :-) தஞ்சை ஆத்துப்பாலத்திற்கு அருகே எல்.ஐ.சி அலுவலகத்தை தொட்டாற் போல் ஒரு டைலர் கடை இருந்தது. பெயர் மறந்து விட்டது; ஜஸ்டின் டைலர் என்று நினைக்கிறேன். ஒரு சட்டை தைப்பதற்கு குறைந்தது மூன்று முறை அங்கு விஜயம் செய்ய வேண்டி இருக்கும்.

முதல் முறை, அளவு கொடுப்பதற்கு; மூன்றாம் முறை தைத்த துணியை வாங்குவதற்கு. அப்போ, இரண்டாம் முறை எதற்கு? அது ட்ரையல் பார்ப்பதற்கு! அப்போது தான் கட்டி முடிந்தும் முடியாமலும் இன்னும் உள்பூச்சு பூசாத வீடு போல, சட்டை கட்டிங் முடிந்து தையல் போடாமல், நூல் பிசிறோடு குண்டூசிகளால் இணைக்கப்பட்டிருக்கும். ட்ரையல் பார்த்தோமோ தப்பித்தோம்; இல்லையென்றால் காலமெல்லாம் தாத்தா சைஸ் சட்டையோடு ‘சோளக்கொல்லை பொம்மையாக’ நடமாட வேண்டியது தான்.

கல்லூரி நாட்களில் ப்ளேசருக்கு பணம் கட்டி அது வருவதற்குள் படிப்பே முடிந்துவிட்டது; வேலைக்கு மனு போட ‘கோட்டு போட்ட படம்’ வேண்டுமென காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள புகைப்பட கடைக்கு போன போது, பட்டனே இல்லாமல் அழுக்கு கோட்டு இலவசமாக வாடகைக்கு கிடைத்தது; நல்ல வேளையாக கருப்பு வெள்ளையில் எதுவும் தெரியவில்லை.

சாப்பாட்டு டேஸ்டிலிருந்து, சினிமா பாட்டு வரை புருஷன் பெண்டாட்டிக்கு நடுவே எதுவும் ஒத்து போவதில்லை; சட்டையும் அந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல. ஏன் சட்டை என்ற பெயரையே அவள் ஒத்துக்கொள்ளவில்லை! “சட்டையாம், சட்டை.. சொக்காயை போய் எப்படி சொல்கிறார்கள் பார் பாப்பா! சுத்த தஞ்சாவூர் வில்லேஜ் மேன்” என்றாள், அவள் என்னவோ லண்டனிலிருந்து வந்து இறங்கியவள் போல.

வெளிறிய, கோடு இல்லாத கட்டம் இல்லாத சட்டையை நான் எடுப்பேன்; போங்க நீங்களும் உங்க மோர் குழம்பு டேஸ்டும் என்பாள். அவள் எடுக்கும் வில்லன் சட்டைகளை போட என் பர்ஸனாலிட்டி(?!) ஒத்துக்கொள்ளாது. எப்போதாவது சட்டை தேர்ந்தெடுக்க குழப்பம் வரும் போது, அவளிடம் சாய்ஸ் கேட்பேன்.. சகிக்கலை.. என்று அவள் முகம் சுளித்து விட்டால், ஐ.எஸ்.ஐ முத்திரை கிடைத்தது போல அதையே எடுத்து விடுவேன்.

சவுதிக்கு வந்த பின்னால், எனது ‘சட்டை அறிவு’ இன்னும் வளர ஆரம்பித்து விட்டது. உடன் வேலை செய்யும் ஃபிலிபினோ நண்பர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு சட்டையே ‘பனியன்’ தான் வரும் போது கிட்டத்தட்ட ‘உள் பனியன்’ ‘ஹவாய் செருப்பு’ முதல் மாத சம்பளம் வந்ததும் காஸ்ட்லி டீ ஷர்ட் என்ன ஸ்போர்ட்ஸ் ஷூ என்ன என்று அமர்க்களப்படும். ஆனாலும் புலி பசித்தாலும் ஷர்ட் போடாது என என்றும் பனியன் தான். தப்பித் தவறி என்றவது பட்டன் வைத்த சட்டை போட்டால், துணிந்து.. “ஹேப்பி பர்த் டே பாரே” என்று வாழ்த்திவிடலாம்.

டார்க் ப்ரவுன் கலரிலோ அல்லது சாம்பல் கலரிலோ நம்ம ஊர் ஜிப்பா மாதிரி, ஆனால் வித்தியாசமாக காலர் வைத்து சட்டை போட்டுக்கொண்டு ஏழடி உயரத்தில் வருபவர்களை பார்த்திருக்கின்றீர்களா? 18 லிட்டர் மின்ரல் வாட்டர் முழு கேன்களை கைக்கு ஒன்றாக, காலி கேன் தூக்குவது போல அலட்சியமாக தூக்கி வருவார்கள் (நாம காப்பியடிக்க முயன்றால் முதுகு வலியும், ரூஃபினாக்கும் கியாரண்டி.. இன்ஸூரன்ஸ் புண்ணியத்தில்) இரண்டு பேர் தூக்க சிரமப்படும் சன்னல் ஏசியை அலட்சியமாக ஒத்தை கையால் தூக்கி நிறுத்துவார்கள். சரியாக கண்டுபிடித்து விட்டீர்களே, பாகிஸ்தானிய/ஆப்கானிஸ்தானிய ஆசாமிகளே அவர்கள்!

சவுதிகள் அணியும் அப்பழுக்கற்ற வெள்ளை அங்கிகள், கொளுத்தும் வெயிலிலே பளீர் என மின்னும்; தொழிற்சாலையில் மேல்சட்டையும்,கால்சட்டையும் சேர்ந்த ஆடையை பார்த்ததும் என் போன்ற வாழைப்பழ சோம்பேறியின் மூளை வேகமாக வேலை செய்தது (யோசிக்கிறது மட்டும் வேகமா, செயல் எல்லாம் ரொம்ப நிதானம்!)

லேஸ் கட்டின ஷூவிலே காலை நுழைச்சுகிற மாதிரி, முழங்கை வரைக்கும் மடிச்சு வச்ச சட்டையை ஏன் யாரும் கண்டு பிடிக்கலை? டை-யோட இணைந்த ரெடிமேட் சட்-டை எவ்வளவு வேலை மிச்சம்.. அப்படின்னு சோம்பலும், சோம்பலை சார்ந்த பகுதிகளுமா ஆறாம் திணையா கற்பனை ஓடிக்கிட்டிருக்கு.

பாதி நாளு ஆபீஸ் கிளம்பு போது பொத்தான் எல்லாம் போட்ட பிறகு தான் ஒரு பக்கம் இறங்கி, ஒரு பக்கம் ஏறி இருக்கும்; சரியா சட்டை போட்டுக்கிறது இருக்கே..அதுவே பெரிய குறுக்கெழுத்து போட்டி மாதிரி!

முடிவா யோசிச்சு பார்க்கும் போது, நம்ப உடம்பே நம்ம ஆத்மாவோட சட்டைதான்னு ஞானிகள் சொல்லி இருக்கிறது நினைவுக்கு வருது. நாம விரும்புகிற, விரும்பி உடுத்துகிற சட்டைகள் நம்ம எண்ணங்களோட பிரதிபலிப்பாகவே இருக்குது. உடுத்துற சட்டையை தவிர பாவனையா நாம மகன், கணவன், அப்பா, தாத்தா, மாணவன், ஆசிரியன், தொழிலாளி, முதலாளி அப்படின்னு வேற வேற சட்டைகளை போட்டபடியே இருக்கோம்.

ஒரு சட்டைக்கு மேலே இன்னோரு சட்டையை போட்டு பார்க்கிற போது சரியான அளவு கிடைக்கிறதில்லே; ஒன்றுக்கு பத்து சட்டையை ஒரே நேரத்திலே போட்டு எந்த பிரயோசனமும் இல்லே! இதிலேர்ந்து கதையோட நீதி என்ன? ஒரு சட்டையை கழற்றினால் தான் இன்னொரு சட்டையை போட முடியும் (ஆகா.. கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாய்ங்க)

இந்த சட்டை பதிவை கொஞ்சம் கூட சட்டை செய்யாம, உளுந்தூர் பேட்டையில் சாலை விபத்து, திருநெல்வேலியில் அரிவாள் வெட்டு, ஹாக்கி வீரர்கள் வேலை நிறுத்தம்-னு சன்ந்யூஸ் பார்த்து உச் கொட்டிட்டு, அசட்டையா, பக்கத்திலே இடி விழுந்தாலும் கலங்காத ஒட்டகமா நீங்க இருந்தா, நீங்க வளைகுடாவுக்கு வந்து 10 வருஷம் முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்!

அப்படி இல்லாமே, சட்டையிலே இங்கே தையல் பிரிஞ்சிருக்கு; அங்கே ஒரு ஓட்டைன்னு சொன்னா, நீங்க ஊரிலேர்ந்து ஃப்ரஷ்ஷா வந்திருக்கீங்கன்னு ஆகுது. உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். முதல்லே.. “யாரு தெச்ச சட்டை..அது தாத்தா தெச்ச சட்டை”ன்னு வேக வேகமா வாய் குளறாம 10 தடவை சொல்லி பாருங்க. சரியா சொல்லிட்டீங்கன்னா, பதிவை முதல்லேர்ந்து இன்னொரு முறை முழுக்க படிங்க, எதாவது கிடைக்கும்!

நான் கொஞ்சம் லாண்ட்ரி வரைக்கும் போகணும்..வரட்டா நண்பர்களே?

சட்டை கிழிந்தது!

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in