September 9, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 6)

தமாம் பாலா
6. வெங்காயம் போட்ட வெண்டைக்காய் கறி

தஞ்சாவூரில்..மேல,கீழ,தெற்கு,வடக்கு வீதிகள் ஓரளவு அகலமானவை; பஸ் போகும் அளவுக்கு. இந்த நாலு வீதிகளின் சதுரத்துக்குள்ளே உள்ள மற்ற தெருக்கள் குறுகலானவை தான். மேல வீதியின் நடுவிலிருந்து சதுரத்தின் உள் நோக்கி செல்வது சகாநாயக்கன் வீதி. அதில் ஒரு பர்லாங் தூரத்தில் இருப்பது கே.ஹெச்.எஸ் எனும் கல்யாணசுந்தரம் மேனிலைப்பள்ளியின் பெண்கள் பிரிவு. அந்த இடத்திலிருந்து குறுக்காக செல்லும் தெருவில் எதிரெதிராக, கல்யாணசுந்தரம் நடுநிலைப்பள்ளியும், மெயின் ஸ்கூலும். மெயின் ஸ்கூலில், ஆண்கள் மேனிலைப்பள்ளியும், இங்க்லீஷ் மீடியம் கோ-எஜுகேஷன் க்ளாஸ்களும். அது ஒரு பிரம்மாண்டமான கட்டிடம், ப்ரிடிஷ் கால கட்டிடம் போல இருக்கும்; மேலும் விவரங்களை பள்ளிக்கான ஒரு தனிப்பதிவில் காண்போம்.

இந்த இரண்டு பள்ளிகளுக்கு இடையில் போகும் தெரு, முடியும் இடத்தில் ஒரு பெரிய கேட். அந்த கேட்டுக்கு அந்தப்புறத்தில், கடல் போன்ற.. பெரி..ய்ய்..ய விளையாட்டு மைதானம். அந்த சிறிய தெருக்களுக்கு நடுவில் அவ்வளவு பெரிய பள்ளியும், மைதானமும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று!

அந்த மைதானத்தின் உட்புற மதிலை ஒட்டியும் சில வகுப்புகள் உண்டு; வலது கோடியில் ஒரு பழைய கட்டிடம், ஆர்ச் எல்லாம் வைத்து கட்டியிருக்கும்; அதுதான், பிடி ரூம், பேட்,பால் எல்லாம் வைத்திருந்து, அட்டெண்டர் கேட்பவருக்கு மட்டும் தருவார். அன்று, 1975 டிசம்பர் 20, சனிக்கிழமை.. பள்ளியில் அன்று விடுமுறையாக இருந்தாலும், திங்கள் கிழமை டைம் டேபிள் வைத்திருந்தனர். மாலை வேளை, ப்ளே ஃபார் ஆல், என்ற கட்டாய உடற்பயிற்சி வகுப்பில் இருந்தோம்; எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், பிடியில் மட்டும் ஜஸ்ட் பாஸ் செய்யும் நான் உள்பட.

எல்லா நாளும், விடியும் போது நன்றாகத்தான் விடிகிறது; ஆனால் முடியும் போதுதான் சிலசமயம் இடியும்,மின்னலும்,புயல் மழையுமாக. அன்றும் அப்படித்தான் போலிருக்கிறது!

“மணி, உன்னை எங்கே எல்லாம் தேடறது? உன் தம்பி, ராதாவை.. மாடு துரத்தி.. அகழிலே விழுந்து.. மயக்கமா இருக்கானாம்” சுந்தர், என்னை விட ஒருவயது பெரியவன் கொங்கணேஸ்வரா மீரா டீச்சர் பையன்.. ஓடி வந்து சொன்னான். பகீரென்றது; நானும் உடனேயே, வீட்டுக்கு ஓடினேன்.. மல்லிகை காம்பவுண்டுக்குள், ஒரே கும்பல்; இதுவரை பார்த்திருக்காத மனிதர்களின் நடமாட்டம்!

என்னை காம்பவுண்டுக்கு உள்ளேயே விடவில்லை; பக்கத்தில் இருந்த பாகவதர் வீட்டு திண்ணையில் உட்கார வைத்து விட்டனர்; மாமி, வந்து.. “இங்கேயே ஒக்காந்து கோடா கண்ணா, அப்புறம் வந்து உன்னை கூப்பிடுவா” என்றார்; அவர் முகம் கூட அழுதாற்போல இருந்தது. வெளியே பார்த்த போது, அப்பா.. சர்ரென்று.. சைக்கிளில், பெடலில் கால் வைத்து வந்து இறங்கினார்; அவர் கண்கள் இரண்டும் கோவை பழம் போன்ற, இரத்த சிவப்பில் இருந்தன.

காம்பவுண்டுக்குள் சென்றேன்; வீட்டில் உள்ளே.. ராதா.. படுத்திருந்தான்; இல்லை படுக்க வைக்கப்பட்டிருந்தான். எல்லாமே முடிந்து போயிருந்தது! அதை புரிந்து கொள்வதற்கு பதினோரு வயது விவரம் போதுமே.. நாங்கள் எதற்காக பயந்து கொண்டிருந்தோமோ, அது நடந்தே விட்டது!!
அவ்வளவு நாட்களாக, அத்தனை சமத்தாக இருந்த பையன், அன்று மட்டும்.. அத்தாச்சி வீட்டு நாற்காலியின் பின் மறைந்து ஆட்டம் காட்டி விட்டு.. தெருக்கோடியில் இருந்த அகழி வரையில் போய் விட்டானாம்; கூட கோவிந்தராஜன் ட்ராயிங் மாஸ்டரின் கிறுக்கு பையன் வேறு! அவர்கள் பந்து விளையாடினார்களோ, என்ன இழவோ.. ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. பார்த்த ஒரே சாட்சியான அந்த பையனுக்கும் தெளிவாக சொல்ல தெரியவில்லை;அவன் சாட்சியோ, குற்றவாளியோ.. அது முக்கியமில்லை, இப்போது.. முக்கியமானது, எங்கள் அன்பு ராதா, அகழியின் ஆரம்ப பகுதியில், ஜஸ்ட் கால்கள் முங்கும்.. அளவு நீரில், மூழ்கி உயிரை விட்டு விட்டான்!! :-((((((

மிகவும், பிரகாசமாக வந்திருக்க வேண்டிய ஒரு மொட்டு, மொட்டாகவே, கருகி..மறைந்துவிட்டது! பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்த்த அம்மாவுக்கு, தீரா பழியாய், ஒரு பத்து நிமிட நேரத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது! அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் ராதா செல்ல பிள்ளை; அவனது மூன்றாம் வகுப்பு வாத்தியார் கூட ரொம்ப அழுதாராம்..

அம்மாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. எங்கள் பெரியம்மா, டாக்டர் மாமாவிடம், ‘ஏதாவது பண்ணி, காப்பாத்திட முடியாதா,மாமா’ என்று கேட்டார்; அவரும் இயலாமையுடன் தலையை இல்லையென்று, ஆட்டினார். எங்கள் வாழ்வின் சந்தோஷம் நிரந்தரமாய், தொலைந்து போனது போலிருந்தது; இனி எந்த ஒரு சந்தோஷமும் எங்களுக்கு பெரிதாக இருக்கமுடியாது என்பது போன்ற ஒரு நிலையற்ற தன்மையும், அவநம்பிக்கையும் முதல்முறையாக என் மனதில் வந்தன.

போலீஸுக்கெல்லாம் போகவேண்டாம்; அறுத்து விடுவார்கள்; சக்கரை போட்டால் சீக்கிரம் எரிந்து விடும் என யார் யாரோ ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள்; நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நமக்கு ஆலோசனை தேவைப்படுகிறதே :-(((((

அப்பாவின், துக்கம்.. ஆண்களுக்கே உரித்தானதாக.. அடக்கி வைத்ததாய், அவரையே உருக்குவதாக அமைந்து விட்டது; அதன் பிறகு, சைக்கிள் விடக்கூட அவருக்கு, தைரியம் குறைந்து விட்டது; அதன் பிறகு, அவர் மறையும் வரை நடைதான்!

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

பின்குறிப்பு:
அன்பு நண்பர்களே, இன்றைய பதிவு, ஒரு சந்தோஷ அனுபவமாக இல்லாமல், உங்கள் ஜாலி மூடை கெடுத்திருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன். இது 33 மூன்று ஆண்டுகள் முன்பு என் பத்து வயதில் எங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக நினைவு! இன்று நினைத்து பார்க்கும் போது, அந்த துரதிஷ்ட சம்பவமும், அந்த சமயத்தில் வெளியில் இருந்து வாங்கி வந்த சாப்பாட்டில் இருந்த ‘வெங்காயம் போட்ட வெண்டைக்காய் கறியும்’ நினைவுக்கு வருகின்றன; அதற்கு முன் எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததுமில்லை; வெண்டைக்காய் கறியிலும், வெங்காயம் போட்டதாகவும் நினைவுமில்லை. அன்பாய், ஆசையாய் இருந்த உறவுகள் மறைந்து போனாலும், இருப்பவருக்கு அடுத்த வேளை சாப்பாடு தானே வாழ்க்கையின் கொடூரமான யதார்த்தம்?!! :-((((((

6 comments:

இலவசக்கொத்தனார் said...

:((

போன பகுதியிலேயே நினைத்தேன் இப்படி எதாவது நடக்கப் போகிறது என்று!!

ராமலக்ஷ்மி said...

இழப்புகள் இதயத்தில் இட்டுச் செல்லும் வடுக்கள் காலத்தாலும் ஆற்ற முடியாதவை. எல்லாம் தாண்டி யதார்த்தமும் என்ன என்பதைக் கூறி முடித்திருக்கிறீர்கள்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க கொத்ஸ்!

துளசி மேடம் பதிவுலே உங்க
நகைச்சுவையான பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன்; என்னுடைய பதிவு உங்களை பாதித்திருந்தால் ஸாரி. நான் அந்த காலத்திலிருந்தே நண்பர்களிடம் மனம் விட்டு பேசாமல்/எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாமலேயே இருந்து விட்டேன். இப்போது சில வருடங்களாகத்தான் 'ஷெல்லுக்கு வெளியே' வரும் முயற்சியில் வெற்றியும் கொஞ்சம் நிம்மதியும்!

உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க, ராமலஷ்மி,

தீயினால் சுட்டபுண்ணும்
நாவினால் சுட்டபுண்ணும்
காலத்தினால் ஆறினாலும்
உறவின் மறைவினால் வரும்
வடுக்கள் ஆறுவதே இல்லை!

சரியாக சொன்னீர்கள் தோழி,
உங்கள் பின்னூட்டத்துக்கும்
ஆறுதல் மொழிகளுக்கும்
ஆயிரம் ஆயிரம் நன்றிகள்!

Anonymous said...

LIFE IS SOME THING DIFFERENT. .....IT SHOULD FLOW IN ITS OWN WAY IS IT?..

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க வள்ளிதேவி,

நீங்களும் உங்கள் எண்ணங்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! :))