September 6, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 4)

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 4)
தமாம் பாலா

4. மணி அம்மா, யாரு தெரியுமா?

நீங்க தஞ்சாவூரா? நீங்க 70கள், 80களில் அங்கே வசிச்சவரா? உங்க அப்பாவுக்கு ஒரு சில கேள்விகள்.. நீங்களே அவர் சார்பா ஆன்ஸர் செய்யலாம்.

1. இவ்வளவு நாளா, தொசாம் புசாம்னு ட்ரெஸ் செய்த உங்க மனைவி/மகள், இப்போ கொஞ்ச நாளா, சிக்குன்னு, கச்சிதமா அந்த காலத்து சினிமா நடிகைகள் போல ஜாக்கெட் போடறாங்களா?
2. சாயந்தரம் நீங்க ஆபீஸ் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது, வீடு முழுக்க வயர் கூடை பின்னும் ஒயர்கள் இறைஞ்சு கிடக்க, தாண்டி.. சர்க்கஸ் பண்ணி உள்ளே போகும் அனுபவம் உண்டா?
3. உங்க வீட்டு பெண்கள், மாச சாமான் லிஸ்டிலே, புதுசா.. வெங்கடாஜலபதி போடணும், துளசி மடம் போடணும், அதுக்கு ப்ளாஸ்டிக் மணி போடணும்னு 5ரூபா 10ரூபான்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா?

மேலே சொன்ன கேள்வியிலே எதாவது ரெண்டாவது ‘யெஸ்’ அப்படின்னா.. கைய குடுங்க. நீங்களும் எங்க ஏரியாதான்! இதுக்கெல்லாம் காரணம், ஒருத்தர், அவங்க பேரு.. மணி அம்மா! மணி அம்மா யாருன்னு தெரியணும்னா, முதலில்.. மணி யாருன்னு தெரியணும் இல்லையா? நான்தான்,மணி!! :))
அதனாலே எல்லோரும் அவங்களை கூப்பிடுறது, மணி அம்மான்னு!!

24 மணி நேரம் கூட பத்தாதுன்னு, வீடு,சமையல்,தையல்,கைவேலை அது இதுன்னு ரொம்ப பிசியா இருப்பாங்க. அவங்களுக்கு 17 வயசிலேயே நான் பொறந்துட்டேனாம்; அதனாலே என் பள்ளி வயசிலே அவங்கதான் இளமையான அம்மா! மூணாவது/நாலாவதா பொறந்ததுகள், அக்கா மாதிரி இருக்கிற, என் அம்மாவோட நான் வெளியிலே போகும்போது.. கொஞ்சம் பொறாமையா பார்க்கும் :))

தனியா அம்மா யார் வீட்டுக்காவது போனால், குழந்தை ஸ்கூல் விட்டு வந்துவிடுவான், போகணும் என்றால், “எல்கேஜியா, யூகேஜியா” என்பார்கள். “இல்லை டென்த்” என்றால் ஆச்சரியப்படுவார்கள்.
அம்மாவை பற்றி நினைக்கும் போது, அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், வாழ்க்கையில் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களும், எதிர்நீச்சலும் நினைவுக்கு வருகின்றன!

அம்மா, பிறந்த நாள்.. யாரும் எளிதில் மறக்க முடியாத ஒரு நாள்! காலையில் அம்மா, பிறந்திட மாலையில், ஒரு மாபெரும் மனிதரை, ஒரு மகாத்மாவை.. போட்டு தள்ளி விட்டார்கள்! நீங்க கெஸ் பண்ணியது கரெக்ட் தான். அந்த நாள் ஜனவரி 30, 1948; மகாத்மா காந்தி மறைந்த தினம்!

இளம்வயதிலேயே, அம்மாவின் அம்மா காலமாகி விட்டது, பின்னர் 8ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டது, பதினாறு வயசிலேயே கல்யாணமும் ஆகிவிட்டது; கிட்டதட்ட ஒரு சைல்ட் மேரேஜ்தான்!

அப்பா இரண்டாம் கல்யாணம் செய்த சின்னமாவின், சகோதரருக்கே வாழ்க்கைப்பட்டு, வசதிகள் குறைவோ, அதிகமோ.. நிறைவான, நிம்மதியான ஒரு வாழ்க்கை. 65ல் நான் பிறந்தேன்; 67ல் தம்பி பிறந்தான்.

அவன் பிறக்கும் போது, அம்மாவின் வாழ்வில் விதி மீண்டும் சதி செய்து விட்டது! குழந்தை வயிற்றில் இருந்த போது, டாக்டர் கொடுத்த தவறான மருந்தால், குழந்தைக்கு.. வயிற்றிலேயே.. கால் வளைந்து விட்டது! :-((( அம்மாவுக்கும், அப்போது வயது/விவரம் தெரியவில்லை, அப்போது ஏது ஸ்கேனும் வேறு வசதிகளும்?!!



அம்மா பள்ளி படிப்பில், கல்லூரி படிப்பில் சேர கொடுத்து வைக்கவில்லையே தவிர, வாழ்க்கை படிப்பை நிறுத்தவே இல்லை. தமிழில் வார சஞ்சிகைகளிலிருந்து, பொன்னியின் செல்வன், பிலோ இருதயநாத்தின் காட்டு அனுபவங்கள், அது இது என்று எதையாவது படித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய்வு ஒழிச்சல் இல்லாத தையல் வேலைகளால், அப்பாவுக்கும் ஒரு இன்விஸிபிள் சப்போர்ட்!

சின்ன வயதில், அம்மா என்றால் கொஞ்சம் டெரர்தான்! அச்சு பிச்சு என்று எதையாவது பேசி, செய்து அவ்வப்போது அடி வாங்கி இருக்கிறேன். இப்போது வயது ஆகிவிட்ட பின்னும் என்னிடம் பெரிய மாற்றம் எதுவுமில்லை; கண்டிக்கிற ஆள்தான் மாறிவிட்டது.. கை பிடித்தவளாக! :-)))

பள்ளி நாட்களில், அம்மாவுக்கு ஹாபி பர்சேஸ் அஸிஸ்டண்ட், நான்தான்! பொடிநடையாக போய், மல்லிகா ஃபேன்ஸியில் ஸ்பேட் நூல்கண்டு, ஊசி, மணி, நரம்பு (ஒயர்) வாங்கி வந்தால் 10 பைசாவிலிருந்து 25 பைசா வரை கமிஷன் கிடைக்கும்; அந்த காலத்தில் பெரிய தொகை அது! :)))

அம்மாவின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும்.. தம்பியின் கால்வளைந்ததை சரிசெய்ய ஆப்பரேஷனுக்கு, நாகப்பட்டினத்திலிருந்து தஞ்சைக்கு அலைந்ததில் நான் அறிந்திருக்கிறேன். அதனாலேயே நாங்கள் 1970 வாக்கில் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தோம். 80களின் இறுதியில் அப்பாவுக்கு உடல்நலம் கெட்ட போதும், அம்மாவின் எண்ட்யூரன்ஸை பார்த்து, வருத்த்த்தோடு வியந்திருக்கிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன், 75ரூபாய் கொடுத்து அம்மா, ஒரு கம்பெனியின் ஷேரில் இன்வெஸ்ட் செய்தார்கள். அந்த ஷேர்தான், இப்போது அவர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது என்ன கம்பெனி, என்று இந்த பதிவின் இறுதியில் சொல்கின்றேன்!

அம்மாவின் பொறுமை, யாரும் தவறாக புரிந்து கொண்டு, வம்புக்கு வந்தாலும் பதிலுக்கு சண்டை போடாமல் இருக்கும் குணம் கொஞ்சம் கர்வம் போலவும், கோழைத்தனம் போல தோன்றினாலும், காலப்போக்கில் அவர் நல்ல குணத்தை புரிந்து கொண்டு நண்பர்கள் ஆகிவிடுவர்.

அம்மாவின் வாசிப்பு, எனக்கு சின்னவயதிலேயே படிக்கும் வழக்கத்தை தந்தது. அவரது எப்பொழுதும் கண்ணியமாக உடை உடுத்தும் பாங்கு, அனைவரையும் கவர்ந்த ஒன்று. வெயில் காலத்தில் இராத்திரி பகலாய் உழைக்கும் அம்மா, குளிர்காலத்தில், ஆஸ்துமா வந்து துவண்டுவிடுவார்; இரவெல்லாம், மூச்சு திணறலும், டெஸ்க் மேல் சாய்ந்து கொண்டும் போகும்..

அம்மா படிக்காத்தெல்லாம், நான் படிக்க வேண்டும் என கனவு கண்டார்; அது ஓரளவு நிறைவேறியும் விட்டது என்றே சொல்ல வேண்டும். அதிலும், நான் பள்ளி இறுதி முடித்ததும், கல்லூரி படிப்பு விஷயத்தில், அப்பாவே சற்று மிரண்டு விட்ட போதிலும், அம்மா.. மன உறுதியுடன் போராடி, எனக்காக வாதாடி, என் தாய் வழித்தாத்தாவிடம் (அவர் பற்றி கூட ஒரு பதிவு போட்டிருக்கிறேன்) உதவி பெற்று நான் மேலே படிக்க வழி செய்தார்; அந்த படிப்பை நான் முடிக்கும் முன் வந்த சோதனைகளை தனி ஒரு மனுஷியாக முறியடித்தார்.


17 வருடம் அம்மாவுடன் வாசம், கல்லூரி படிப்புக்காக வந்த பின் 7 வருடம் பிரிவு, பின் 7 வருடம் சேர்ந்து இருந்தபின், இப்போது 13 வருடத்துக்கு மேல் சவுதியில் வசிப்பதால், அம்மாவுடன் வருடத்துக்கு ஒரு முறைதான் சந்திப்பு. அம்மாவும், 60 வயதை அடைந்து.. மகனுக்கான கடமைகளை முடித்த் திருப்தியில் சென்னையில் வசிக்கிறார்; நாங்கள் எல்லோரும் வேலை,வேலை என்று அலையும் இந்த காலத்தில், அம்மாவுக்கு துணை.. புத்தகங்களும், அவரது மருந்துகளும் தான்!


பதிவை முடிக்கும் முன், நான் வாக்குறுதி கொடுத்தபடி, அம்மா.. 25 வருடம் முன்பு. ரூ 75 கொடுத்து இன்வெஸ்ட் செய்த ஷேர்.. அடியேன் தான்!! :-))) அவர் வாங்கி கொடுத்தது, எனது காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம்!

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...

2 comments:

ராமலக்ஷ்மி said...

ஆசானாகப் பார்த்த தந்தையைப் பற்றி போன பதிவில் சொல்லி முடித்து, அண்ணாந்து பார்த்த அன்னையைப் பற்றிய நினைவுகளையும் அருமையாய் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் பாலா.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க, ராமலஷ்மி!

அன்னை, தாய்மை என்பதே
சாதாரண மனிதர்களின் அசாதாரணமான
அன்பும்,அக்கறையும் தானே.. :))

என் அப்பா,அம்மாவுக்கு இருந்த
வசதி வாய்ப்புக்கு, எனக்கு அவர்கள்
அளித்திட்ட கவனிப்பு அபாரம், அதனால் எப்பொழுதும் அண்ணாந்து பார்க்கிறேன், நீங்கள் சொன்னபடி!