September 8, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 5)

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 5)
தமாம் பாலா

5. ராதாகிருஷ்ணனும், நானும்..


நீரும், நெருப்பும் பார்த்திருக்கின்றீர்களா? அதில், இரண்டு எம்.ஜி.ஆர்கள் வருவார்கள்; ஒருவர் கருப்பு, ஒருவர் சிவப்பு என்று. அதே போல, ஒரே வயிற்றில் பிறந்தும் வெவ்வேறு தோற்றம், குணாதிசயம் எனக்கும் அவனுக்கும்!

நான், பாலசுப்ரமணியன்.. கொஞ்சம் (அம்)மாநிறம், நீண்ட முகம், லாரி போகும் அளவு அகலமான நெத்தி, ஜாடிக்காதுகள், நோஞ்சான், தொடைநடுங்கி, தொட்டால் சிணுங்கி, பயந்தாங்குளி என்று சகல அடைமொழிகளுக்கும் சொந்தக்காரன். ஒல்லியாக, எலும்புக்கூடு போல இருப்பேன். ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்து மாதக்கணக்கில் விஜயலஷ்மி டாக்டரிடம் ஊசி போட்டுக்கொண்டு, சாக்லேட்/வாழைப்பழம் வாங்கியவன், நான்! ஊசி போட்டால் அழுவதில்லை என்பதே என் அதிகபட்ச தைரியம்! :)))

எனக்கு இரண்டு வயது இளையவன், என் தம்பி ராதாகிருஷ்ணன். பெயருக்கேற்ற அழகன்; குறும்புக்காரன். அ(ப்ப)ப்பா என சொல்லும் நிறம்;சிரித்த முகமாய், வசீகரமாய் இருப்பான். யார் வந்தாலும், போய் பேசுவான், கலகலப்பாய் விஷமங்கள் செய்வான். அவன் செய்யும் குறும்புகளில், ஸாம்பிளுக்கு ஒன்று.. தீப்பெட்டியை திறந்து, ஒரே ஒரு குச்சியை எடுத்து பற்ற வைத்து, அதை தீப்பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு, அது எரிவதை பார்த்து ரசிப்பான். சின்ன சின்னதாய் சண்டைகள் போட்டிருக்கிறோம், நாங்கள்.

பெண்பிள்ளை இல்லையென்று, தம்பிக்கு பெண்குழந்தை போல அலங்காரம் செய்து, ஃப்ராக் எல்லாம் போடு, அவனோடு ஒரு ப்ளாக் அண்ட் வொய்ட் படம் எடுத்தார்கள், என்னுடன் சேர்த்து. ஊர் மாறி போனதால், எங்கே இருக்கிறது என்று தேடவேண்டும்;கிடைத்தால், பதிவில் இணைக்கிறேன்.

நான் ஐந்தாவது படிக்கும் போது, கொங்கணேஸ்வராவில்.. கொடைக்கானல் சுற்றுலா அழைத்துச்சென்றார்கள்; எங்கள் குடும்ப நண்பரும், பள்ளி ஆசிரியையான மீரா டீச்சர் வந்ததால், நம்பி அனுப்பி வைத்தார்கள். டூர் முடிந்து, வீடு திரும்பும் போது முருகன் ஆசிரமம்/காளி கோயில் எதிரே, ராதா வந்தான்.. ஆசையாக என் கையில் இருந்த மஞ்சள் பையை வாங்கிக்கொண்டான். தம்பியுடையான் படைக்கஞ்சான், என்ற தமிழ் பழமொழி அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை; இருந்தாலும் ஒரு வித சந்தோஷம் தோன்றியது!


1974ல், அம்மாவின் தங்கை ரமணி சித்திக்கும், நாராயணன் சித்தப்பாவுக்கும் கும்பகோணத்தில் திருமணம் நடந்தது; அம்மா வழி தாத்தாவுக்கு, அஞ்சு பெண்கள் என்பதால் மத்திய பிரதேசம் போபாலிருந்து, அவ்வப்போது தமிழகம் வந்து பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, அவருக்கும் எங்களுக்கும் நல்ல பொழுது போக்கு! :))))

அதன்பிறகு, நாராயணன் சித்தப்பா ஒருமுறை தஞ்சாவூரில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நானும் ராதாவும் வீட்டில் பொழுது போகாமல், அட்டை பெட்டிகளை நறுக்கி, க்ரிகெட் க்ரவுண்டு, ப்ளேயர்ஸ், மற்றும் எல்.ஐ.சி கட்டிடம் எரிவது போல உள்ளே ஊதுபத்தி செட் செய்திருந்தோம் (அப்போதைய செய்தி :-)) அதுதானே எங்களுக்கு, அந்த காலத்தில் டீவி/வீடியோ கேம்/ கம்ப்யூட்டர் எல்லாம்!


சித்தப்பா, கண்ணாடியில் செய்த ஒரு தாஜ்மகால் பொம்மை கொண்டு வந்திருந்தார்; ஒரு டோம் ஷேப்பில், ஜிகினா நீர் நிரம்பிய, மின் விளக்குடன் கூடிய அழகான ஷோ பீஸ் அது. ராதா அது நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடன், அதை அவனுக்கே கொடுத்துவிட்டார், சித்தப்பா!

அப்போதெல்லாம், உறவினர் யார் வந்தாலும் அவர்களிடம் மிகவும் ஆசையாக இருப்போம்; அவர்களுடன் சிவகங்கை பார்க், பெரிய கோயில், அரண்மனை, கலைக்கூடம்/சரஸ்வதி மகால் லைப்ரரி, திமிங்கல எலும்புக்க்கூடு, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் என்று சுற்றுவோம். தாத்தா வரும் போது, காதலிக்க நேரமில்லை, உலகம் சுற்றும் வாலிபன் என்று.. பார்த்த படங்களையே திரும்ப திரும்ப பார்ப்பதும் உண்டு; படமா முக்கியம், மனதுக்கு பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து பொழுதை கழிப்பதுதானே முக்கியம்? :)))

அப்பா,அம்மா தீபாவளிக்கு எனக்கும் தம்பிக்கும் ஒரே டிசைனில் டெர்லின் சட்டை எடுத்து கொடுப்பார்கள். பட்டாசு வெடிக்கும் ஜோரில் அதில் பொத்தல்கள் விழுந்துவிடும்! வீட்டில் வாங்கிய வெடிகள் போதாதென்று, தெருவில் வெடிக்காத அணுகுண்டுகள், வெடிகளை பிரித்து உடைத்து போட்டு, ‘புஸ்’ கொளுத்துவோம்.

ராதாவுக்கு ஒரே திருஷ்டியாக இருந்த வளைந்த காலையும், அம்மா நல்ல டாக்டரை பார்த்து அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விட்டார்கள்; நாமிருவர் நமக்கிருவர் என்று திட்டமிட்ட குடும்பமாய் சந்தோஷமாய் வாழ்ந்த காலம் அது!

அம்மாவின் தம்பி, சுந்தர் மாமா விடுமுறைக்கு வந்து போவார். அண்ணாமலை யுனிவர்ஸிடியில் படித்த போது, போலிஸ் தடியடியில் கிடைத்த தழும்பை காட்டினார்; என்னை சிவகங்கா பார்க்கிற்கு அழைத்து சென்று.. அங்கு இருந்த பாரில்(டாஸ் மாஸ் அல்ல!) எக்ஸர்சைஸ் செய்வார். அவரது தோள்கள் புடைத்து, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

எம்.டெக் படிப்பதற்காக கான்பூர் ஐ.ஐ.டி சென்றார். அங்கு ஏதோ ஒரு காரணத்துக்காக, அவர் தற்கொலை செய்து கொண்ட்தாக, ஒரு நாள் தந்தி வந்தது!!!!!! :-((( அம்மா பாவம், சுந்தர்,சுந்தர் என்று இரண்டு, மூன்று நாட்களுக்கு அழுது கொண்டே இருந்தாள். என்ன காரணம் என்று கேட்க தெரியவில்லை அன்றும்/இன்றும்!


அந்த காலத்தில் தொலைபேசி வசதி அதிகம் இல்லை; மெஜாரிட்டி தந்திதான் (டெலகிராம்) முக்கால்வாசி தந்திகள், உற்றார்/உறவினர் மறைந்த துயர செய்தியை தாங்கிதான் வரும். தந்தியை பிரிக்கும் முன்பே, அடிவயிறு கலங்கி, வீட்டில் உள்ள பெண்கள்.. அழத்தயாராகிவிடுவார்கள்!

தோளுக்கு மிஞ்சிய மகன், படித்து முடித்து விடுவான்.. குடும்ப பாரத்தை கூட சுமந்து எளிதாக்கி விடுவான் என்று நினைத்திருந்த போபால் தாத்தா மிகவும் இடிந்து போய்விட்டார் என்று சொன்னார்கள்.

மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கின்ற வாழ்க்கை, நெருங்கிய உறவினர் மரணத்தில் தடம்மாறி விடுகிறது; அதன் பிறகு கொஞ்ச காலம் வெளிப்படையான சோகம் கவ்விக்கொள்கிறது. காலப்போக்கில், அது முகத்திலிருந்து மறைந்து விட்டாலும், மனதின் ஆழத்தில் பதுங்கி கொள்கிறது; யாரும் உடன் இல்லாத தனிமையில் பழைய சோகங்கள், மனிதர் மனக்கூண்டிலிருந்து வெளிப்பட்டு, அவனை கடித்து குதறியும் விடுகின்றன!


எனக்கும் அப்போது கிட்ட்தட்ட பத்து வயது என்பதால், கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் இருந்தது.
அந்த சமயத்து நினைவுகளை இன்னும் அசை போடும் போது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளின் எச்சங்கள் மட்டும் இருக்கின்றன.

எங்கள் காம்பவுண்டுக்குள், பக்கத்து வீட்டுக்கு, ஒரு மனநோயாளி ஒருத்தரை கூட்டி வந்திருந்தனர்.(தஞ்சையில் ட்ரீட்மெண்டுக்கு என நினைக்கிறேன்) அவருக்கு, ஈ.எஸ்.பி இருந்த்து என்று நினைக்கிறேன். திடீரென, அந்த துணி தெக்கிற அம்மாவ.. கவனமாக இருக்க சொல்லுங்க.. அவங்க பையன், கிணத்துலே விழுந்து சாகப்போறான்’ அப்படின்னு கத்தினார். எங்களுக்கெல்லாம் ரொம்பவும் பயமாகி போய்விட்டது!

இன்னொரு நாள், ராதா.. நடு இரவில் கதவை திறந்து கொண்டு, நிலா வெளிச்சத்தில் தூக்கத்திலேயே எழுந்து போய்விட்டான். நாங்கள் எழுந்து அவனை தேடிப்போனபோது, மாமா கூப்பிட்டது போல இருந்தது, என சொன்னதாக ஞாபகம்!

எனக்கும் ஒரு நாள், அவன் நீர் சூழ்ந்த இடத்தில் இருந்தது போல, கனவு வந்தது. பார்த்துடா, ராதா.. பத்திரம், என்றேன். “அதெல்லாம் பயமே இல்லே.. நான் நீஞ்சி வந்துடுவேன்” என்றான் சவடாலாய் ராதா. எங்கள் இருவருக்குமே, நீச்சல் தெரியாது; அதை கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிட்டவில்லை!

எங்கள் காம்பவுண்டில் மனிதர்கள், குடிவந்த வண்ணமும், போன வண்ணமுமாய் இருப்பார்கள்; இந்த முறை, எங்கள் கே.ஹெ.ஸ் ஸ்கூலின் ட்ராயிங் வாத்தியார் கோவிந்த ராஜன் எங்கள் காம்பவுண்டுக்கே குடிமாறி வந்துவிட்டார். எனக்கு ஆறாம் வகுப்பில் ட்ராயிங் க்ளாஸில் பார்த்ததால் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் பாவம் ரொம்ப நல்லவர்; மனைவி ஒரு டைப் என்று நினைக்கிறேன். அவர் மகன், அவன் தான் கொஞ்சம் பைத்தியம்/கிறுக்கு மாதிரி!

கமல், தசாவதாரத்தில் ‘கெயாஸ் தியரி’ பற்றி சொல்லுவார்; பட்டாம் பூச்சியின் படபடப்பு, உலகத்தை சுற்றி புயலாக வருமென்று. அது போன்ற நிகழ்வு, எங்கள் வாழ்விலும் நடந்த்து; ஏன் நாங்கள் நாகையிலிருந்து.. தஞ்சை வந்தோம், ஆனந்தி அம்மா வீட்டின் பாம்புகளுக்கு தப்பித்து, மேல அலங்கம் மல்லிகை கொடி காம்பவுண்டுக்கு; ட்ராயிங் மாஸ்டர் குடும்பமும் ஏன் அங்கே வந்து சேர்ந்தது என்றெல்லாம் எண்ணி எண்ணி வேதனை படவைக்க, விதி 1975 டிசம்பர் மாதத்திற்காக காத்திருந்தது! :((((

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்..

1 comment:

ராமலக்ஷ்மி said...

அடுத்த பதிவையும் படித்து விட்டதால் இதில் சொல்ல வந்தவை மனதை இன்னும் கனக்கச் செய்து விட்டன.