August 16, 2021

இன்றே செய்

நான் மறைந்த பின் வழியும்
உன் கண்ணீர் ஆனாலதை
என்னால் உணர இயலாது
இன்றே அழுதிடு என்னோடு

மலர் வளையம் அனுப்புவாய்
பலர் அறிய என்னைத் தவிர
சில பூக்களை கொடுத்தனுப்பு
நலமாய் நானிருக்கும் போதே

வாழ்த்தி என்னை பேசிடுவாய்
வாழ்ந்த என் செவிக்கெட்டாது
வாழ்த்திடு இன்றே இப்போது
தாழ்த்திடாமல் காலத்தையும்

என் தவறுகளை மன்னித்திடும்
உன் பெருந்தன்மை என்றாலும்
அதன் பயன் எனக்கும் எட்டாதே
இன்றே நீ மன்னிப்பாய் என்னை

உன்னுடன் நானில்லை என்று நீ
உணரும் வேளையில் அப்போது
தொடுவானம் தாண்டியிருப்பேன்
சடுதியில் வா சந்தித்திடு என்னை

என்னோடு இன்னும் சிலகாலம்
அன்னியோனியமாய் செலவிட்டு
இருக்கலாமோ என குறைபடாது
இன்றே இணைந்திடு என்னோடு

நான் போனபின் இறுதி மரியாதை
தான் செய்ய என் வீடு தேடி வரும்
உன் கால்கள் ஆண்டாண்டுகளாய்
அன்பு வார்த்தை சொல்ல மறந்த

உன் உதடுகள் இன்று பேசட்டும்
நன்றே செய் அதை இன்றே செய்
மென்மையுடன் செவிமடுத்து நம்
தன்மையுடன் நாம் நடந்திடுவோம்

உறவுக்கு நட்புக்கு முக்கியத்துவம்
இறந்தகாலத்தில் தருவதை விட
நிகழ்காலத்தில் தருவதே சிறப்பு
நிரந்தரமாக இழக்கும் முன்னரே

தனியாக நான் சொல் கூறலாம் 
இனிய துணையுடன் பேசலாம்
தனியாக இன்பம் துய்ப்பதற்கு
பனியாக உருகி கொண்டாடும்

துணை கிடைப்பதே ஆனந்தம் 
இணையாத போது புன்முறுவல்
இணைந்தாலோ பெருஞ்சிரிப்பு
அணை கடந்த அன்பு வெள்ளம்

நன்றி: இரவீந்தர நாத் தாகூர்

No comments: