August 30, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 1)

தஞ்சையிலிருந்து தமாம் வரை...
(தமாம் பாலா)

1. ராணி வாய்க்கால் ஸ்கூல் நினைவுகள்..
சேரனின் ஆட்டோகிராப் படமும், ஞாபகம் வருதே பாடலும் நமக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருபவை. சமீபத்தில் வந்த, தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் திரைப்படமும் அதே வகை தான்.

வலைபதிவாளர்களில், எனக்குத் தெரிந்த வரையில் துளசி டீச்சரும், ராமலக்ஷ்மியும் தங்களது பள்ளி நாட்களை மிக அழகாக நினைவு கூர்ந்து எழுதியிருக்கின்றனர்.

நேற்று காலை என்ன சாப்பிட்டோம், போனவாரம் எங்கு போனோம் என்பதெல்லாம் மறந்து விடுகிறது இந்த நாற்பதுகளின் தொடக்கத்தில்; ஆனால், பள்ளிக்கூட கால நினைவுகள் மட்டும் பல்லில் சிக்கிய உணவு துகள் போல, உறுத்திக்கொண்டே இருக்கிறது.. மனதில் பசுமையாக!

எனது பள்ளி நாட்களில், ரொம்ப சுவாரசியமாக எதுவும் நடந்துவிடவில்லை. இருந்தாலும் இப்போது நினைத்து பார்க்கையில், விரல் விட்டு எண்ணும் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன..

அது 1970ம் வருடம். இப்போது போல பெற்றோர்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க, முட்டி மோதி.. விண்ணப்ப படிவத்துக்கே தேவுடு காக்க வேண்டிய நிலை இருக்கவில்லை.

அப்பா அலுவலகம் போய்விட, பக்கத்து வீட்டு தாத்தா ஒருத்தர் ஸ்கூலில் சேர்த்து விட்ட நினைவு. எல்கேஜி/ யூகேஜி எல்லாம் இல்லை.. நேரடியாக முதல் வகுப்புதான். சேர்ந்த பள்ளிதான், ராணிவாய்க்கால் பள்ளிகூடம். பெயரே ஒரு ராஜா காலத்தை நினைவுபடுத்துகிறது அல்லவா? உண்மையில் அங்கு ராணியும் இல்லை, வாய்க்காலும் இல்லை; அங்கு பக்கத்தில் இருந்ததெல்லாம், பெரிய.. வாய்க்கால் போன்ற சாக்கடைதான்! :)) நம் தஞ்சாவூர்தான், சந்துகளுக்கும், சாக்கடைகளுக்கும் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே!

பள்ளிக்கூடத்திலே, சகுந்தலா டீச்சர் க்ளாஸ். அவர் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர் போல; அன்பும், ஆர்வமும் குறையாமல் இருந்தார். பாடமும் நடக்கும், அரட்டையும் நடக்கும். நானும் ராஜாவின் பார்வை என்று பாடிக்காட்டுவதும், ரவா உப்புமா எப்படி செய்வது என்று செய்வது என்று சொல்வதும் (வாணலியிலே சொய்ங்னு... தண்ணிய ஊத்தணும்!), ஒரே ரவுசு பாண்டி தான் போங்கள். (ரவா உப்புமா செய்வது எப்படி என்று, இப்போது, மறந்து விட்டது!) சகுந்தலா டீச்சரும் என் நச்சரிப்பு தாங்காமல், ஒரு நாள் வீட்டிற்கு வந்து, அம்மா கையால் ரவா உப்புமா சாப்பிட்டு போனது, தனி கதை!

அது ஒரு அமைதியான, பொருளாதார ரீதியாக எதிர்பார்ப்புக்களோ, தேடுதல்களோ இல்லாத ஒரு காலம்; வீடு, பள்ளி, வீடு.. நடுநடுவே சைக்கிள் ரிக்.ஷா, சினிமா, மிஞ்சிபோனால் சரவண பவன் ஹோட்டல், அதுவே பெரிய ஆடம்பரம்!

அம்மாவின் தயாரிப்பாக, அர்த்தம் புரியாமலேயே, நிறைய திருக்குறள்களை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பிப்பதும் உண்டு. கற்பூரம் போல கண்டதையெல்லாம் கப்பென்று பற்றிக்கொள்ளும் மனதும், வயதும் அன்று! (இப்போது, அது பச்சை வாழை மட்டை ஆகிவிட்டது.. ஹி.ஹி..)

ஒண்ணாம் வகுப்பில் இருந்த உற்சாகம் எல்லாம், ரெண்டாம் வகுப்பில் சுத்தமாக வடிந்து விட்டது. இந்த முறை வந்த டீச்சர், ஒரு வயதான மராட்டி பாய் என்று நினைவு! வாழ்ந்து முடித்த அலுப்பும், சலிப்பும் முகத்தில் நிரந்தரமாக ஒட்டியிருக்கும்; அவரது வீடுதான், பள்ளியின் எக்ஸ்டென்ஷன்.. அவ்வப்போது சமையலை பார்க்க எழுந்து போய்விடுவார். க்ளாஸும் அவரைப்போலவே, அழுது வடியும். அவரது கணவர், பள்ளியின் கரஸ்பாண்டட் என்றும் நினைவு. பார்ட் டைம் ஆக, மஞ்சள் காமாலைக்கும் மந்திரிப்பார்; இலை/பேப்பர் போட்டு மூடிய மந்திரித்த தண்ணீர் டம்பளருடன், நிறைய பேர் அந்த ஏரியாவில் நடமாடுவதை பார்க்கலாம் :))

இப்போது, விடு மாறி வெகு தொலைவுக்கு போய் விட்டோம். பள்ளி இருந்தது வடக்கு வீதியின் நடுவில்; நாங்கள் வீடு மாறியது, மேல வீதி தாண்டி, முருகன் ஆசிரமம், காளி கோயில் அருகே.. மேல அலங்கத்தில்.. கோட்டைமேடு பார்த்த வீதியில். எப்படியும் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். தனியாக, நடந்து வந்து திரும்பி போக வேண்டும். (இப்போது குட்டிகள் என்னவென்றால், அடுத்த தெரு பள்ளிக்கே.. ஆட்டோ/ வண்டி என அட்டகாசம் பண்ணுதுகள்.. :-))

பள்ளி முடிந்ததும், வகுப்புத்தோழிகளுடன் புறப்பாடு. தமிழ் மணியும், சுபாஷினியும் கூட வருவார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக, அவர்களை தத்தம் வீடுகளில் சேர்த்து விட்டு.. சமத்தாக என் வீட்டிற்கு திரும்பி விடுவேன். இப்படியாக.. ராணி வாய்க்கால் பள்ளியின் தொடர்பு ரெண்டாம் வகுப்போடு முடிந்து விட்டது; மூன்றிலிருந்து.. கொங்கணேஸ்வரர் கோயில் பள்ளி.. (வரும் பதிவுகளில் பார்க்கலாம், விட்டுருவோமா உங்களை அவ்வளவு சுலபமாக?!)

பின்னாளில், தமிழ்மணியையும் சுபாஷினியையும், ஆறாம் வகுப்பில் சேரும் போது கே.ஹெச்.ஸ் பள்ளியில் சேரும்போது தொலைவிலிருந்து பார்க்க நேரிட்டது; இப்போது, சிறு வயதின் குழந்தைத்தனம் மறைந்து, புதிதாக வெட்கம்(?!) தோன்றி விட்டதால், அவர்களிடம் என்றுமே பேசும் வாய்ப்பு கிட்டவில்லை!!

இன்று ஏறத்தாழ 36/37 ஆண்டுகள் கழித்து இந்த பதிவை எழுதும்போது.. எனக்கே பத்தாவது படிக்கும் மகனும் எட்டாவது படிக்கும் மகளும் இருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்மணியும், சுபாஷினியும் எங்கே எப்படி இருக்கிறார்கள், தஞ்சையிலா, சென்னை, மும்பையிலே அல்லது வெளிநாட்டிலா? தெரியவில்லை... அவர்களுக்கு திருமணமாகி மகன் இருந்தால் கல்லூரி படிப்பை முடித்தும், மகள் இருந்தால், பேரன் பேத்தி கூட எடுத்திருக்கலாம், யார் கண்டது?? :-))))

-தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடரும்..

13 comments:

ஆயில்யன் said...

இனிதாய் இளம் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!


இதைப்பார்த்து இன்னும் பலருக்கு தம் பள்ளி கால ஞாபகங்கள் நினைவுக்கு மலரலாம்!

காத்திருப்போம் !

எதிர்பார்த்திருப்போம்! :)

ஆயில்யன் said...

துறை சார்ந்த //Civil,Structural Engineer கட்டிட,கட்டுமான //

இது சம்பந்தமாகவும் பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன் ! :)

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ஆயில்யன், நானும் கடகம்தான் ஆயில்யம்தான். அதுதான் ஆயில் வளநாட்டிலே வேலையோன்னு தோணுது! :)))

வருத்தபடாத வாலிபர் சங்கம் அது இதுன்னு உங்க வலைபதிவுகள் ஒரே கலக்கலா இருக்கும் போல தெரியுது.. வந்து பார்க்கிறேன், நிதானமாக எல்லாத்தையும்..

Dammam Bala (தமாம் பாலா) said...

பொறியில்துறை சார்ந்த பதிவுகள் போடணுன்னு எனக்கும் ஆசை இருக்கு. அதே சமயம் அதில் எழுதக்கூடிய விஷயங்கள், நன்கு சரி பார்த்து எழுதவேண்டியவையும் கூட. எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் நிச்சயமாக. உங்கள் கோரிக்கைக்கு நன்றி. குறைந்த பட்சம் நமது பதிவில் இதற்கு சுட்டியாவது கொடுக்கலாம். வலைபதிவில் நீங்க சீனியர் அதனாலே, இது சம்பந்த பட்ட ஏற்கனெவே உள்ள பதிவுகள் பற்றி எனக்கு சொன்னால் நல்லது, நண்பரே :))

துளசி கோபால் said...

ஆரம்பமே அருமையா வந்துருக்கு பாலா.

உங்களுக்காவது பக்கத்துவீட்டுக்காரர் பள்ளியில் கொண்டு சேர்த்தார்.

நானு?

மல்லிகா அக்காதான் என் கல்விக் கண்ணைத் திறந்துவைத்த தெய்வமுன்னு சொல்லவா?

ஒரு நாள் பத்தவச்சுடவா என் கொசுவத்தியை?:-)

தியாகராஜன் said...

வணக்கம் திரு பாலா அண்ணார் அவர்களே.
தொடரட்டும் இளமைகால நினைவுகள்.
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த காலத்தை யாவருமே மறக்கமாடார்களே.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க, துளசி டீச்சர்.. உங்க ஊக்கத்துக்கும், பாரட்டுக்கும் ரொம்ப நன்றி!

சின்னவயசுலேந்தே நாம் பார்த்த மனிதர்கள், சந்திச்ச அனுபவங்கள் நிரந்தர பாதிப்பா, மனசுலேயே தங்கிடறது இல்லையா, அதை இறக்கி வைக்கும் முயற்சிதான்.. இது!

அது என்னது கொசுவத்தி ஏத்தறது? உங்க கிட்டே வலைபதிவாளர் ஜார்கன்/ஸ்லாங் அப்படின்னு ஒரு டிக்ஷ்னரி போடற அளவு சரக்கு இருக்குன்னு நினைக்கிறேன் :-))

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க தியாகு.. வணக்கம்.
ரொம்ப சரியாவே சொன்னீங்க.. வரவில்லாமல் செலவு செய்த காலம்.. சூப்பர்!

ராமலக்ஷ்மி said...

அருமை. இரண்டாம் பாகம் படித்து விட்டு இங்கு வந்தேன்.

// எனக்குத் தெரிந்த வரையில் துளசி டீச்சரும், ராமலக்ஷ்மியும் தங்களது பள்ளி நாட்களை மிக அழகாக நினைவு கூர்ந்து எழுதியிருக்கின்றனர்.//

ஆகா, பதிவிலே எனக்கு சான்றிதழா? நன்றி. பள்ளி நாட்களானாலும் நான் எழுதியவை பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி அல்ல. அதையும் எழுதலாமோ எனத் தோன்ற வைத்து விட்டார்கள் துளசி மேடம் தன் "சட்டாம்பிள்ளை" பதிவின் மூலம்.

//நேரடியாக முதல் வகுப்புதான். //

ப்ளே ஸ்கூல் போல நர்ஸரி உண்டு. அதே போல் ஒன்றாம் வகுப்புக்கு முன் "பேபி க்ளாஸ்" உண்டு யுகேஜிக்கு பதில்.

//அது என்னது கொசுவத்தி ஏத்தறது?//

இப்படித்தான் நானும் விழித்தேன் வந்த புதிதில். அவ்வப்போது பொறுமையாகச் சொல்லித் தந்தார்கள் துளசி மேடம். பிறகு தேறி விட்டதாக அவர்களே சான்றிதழும் கொடுத்து விட்டார்கள் தெரியுமா:)?

Unknown said...

//தமிழ் மணியும், சுபாஷினியும் கூட வருவார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக, அவர்களை தத்தம் வீடுகளில் சேர்த்து விட்டு.. சமத்தாக என் வீட்டிற்கு திரும்பி விடுவேன். //

ஆஹா...
அப்பொழுதே ஆரம்பிச்சாச்சா? :P

திவாண்ணா said...

ராணி வாய்க்கால் தெரு .ம்ம்ம்ம். அது என் புகுந்த வீடு இருந்த இடமாச்சே! 70 -75 ல் என் மனைவி மருத்துவ கல்லூரி. 85 க்குப்பின் இடம் பெயர்ந்து விட்டார்கள்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க,திவா சார்..
எல்லா இடத்திலேயேயும் உங்களுக்கும் கனெக்ஷன் இருக்கு போல. :))

Dammam Bala (தமாம் பாலா) said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//ஆஹா...
அப்பொழுதே ஆரம்பிச்சாச்சா? :P//

ஆமாம், ரிஷான்..
அப்போலேந்தே நாம..
பெண்களின் பாதுகாவலன் தானே :))