January 15, 2022

பொங்கல் 2022

மண்ணில் செய்த பானையில்
மண்ணில் விளைந்த அரிசியும்
மண்ணில் தோன்றி கணுவாய்
விண்ணோக்கிய கரும்பையும்

சாறாக்கி வெல்ல சர்க்கரையாய்
சோறாக்கி நெய்யும் திராட்சையும்
சேர்த்து பாலுடன் பொங்கலிடும்
தருணம்  நாளை வரப் போகிறது

கற்றறிந்தால் துறைபோகியவன்
என்பார்  நீரையும் மண்ணையும் 
கால்நடை செல்வத்தையும் தனது
அனுபவ அறிவால் படித்ததோர்

இயற்கை விவசாயி வயலுக்குள்
அயராது ஆண்டு முழுதும் செய்த
அருந்தவத்தின் பயனை அழகாய்
அறுவடை செய்து அதை பொன்

பொருளாய் மாற்றும் இந்நேரம்
திருமகள் வீட்டின் வாசல் கதவை
தட்டும் சத்தத்தில் கோமாதாவின்
கழுத்து சலங்கை ஒலி சேரட்டும்

பொங்கலோ பொங்கலென்றும்
ஓங்கி ஒலிக்கட்டும் சிறுவர் குரல்
இல்லந்தோறும் நிறைந்திடட்டும்
எல்லாவளமும் நலமும் மகிழ்வும்

No comments: