மண்ணில் செய்த பானையில்
மண்ணில் விளைந்த அரிசியும்
மண்ணில் தோன்றி கணுவாய்
விண்ணோக்கிய கரும்பையும்
சாறாக்கி வெல்ல சர்க்கரையாய்
சோறாக்கி நெய்யும் திராட்சையும்
சேர்த்து பாலுடன் பொங்கலிடும்
தருணம் நாளை வரப் போகிறது
கற்றறிந்தால் துறைபோகியவன்
என்பார் நீரையும் மண்ணையும்
கால்நடை செல்வத்தையும் தனது
அனுபவ அறிவால் படித்ததோர்
இயற்கை விவசாயி வயலுக்குள்
அயராது ஆண்டு முழுதும் செய்த
அருந்தவத்தின் பயனை அழகாய்
அறுவடை செய்து அதை பொன்
பொருளாய் மாற்றும் இந்நேரம்
திருமகள் வீட்டின் வாசல் கதவை
தட்டும் சத்தத்தில் கோமாதாவின்
கழுத்து சலங்கை ஒலி சேரட்டும்
பொங்கலோ பொங்கலென்றும்
ஓங்கி ஒலிக்கட்டும் சிறுவர் குரல்
இல்லந்தோறும் நிறைந்திடட்டும்
எல்லாவளமும் நலமும் மகிழ்வும்
No comments:
Post a Comment