October 17, 2008

பழனிக்கு ஒரு பதிவு

பழனிக்கு ஒரு பதிவு
தமாம் பாலா

“ஐயா, நீங்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்?”-பையன்.
“நான்.. எல்லா ஊர்களையும் சேர்ந்தவன்!”-பெரியவர்.
-அல்கெமிஸ்ட், பாலோ கொயிலோ


எந்த ஒரு மனிதனுக்கும், சொந்தமாக சொத்தோ, வீடு, வாசல் நிலம் புலமோ இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சமாக ஒரு பெயரும், ஊரும் இருக்கும். சில பேருக்கு, அந்த ஊரே, பெயராகவும் அமைந்து விடுவது உண்டு. பழனி, திருப்பதி, சிதம்பரம் என்று அது போன்ற பெயர் உள்ளவர்களை சந்திக்கும் போது, எனக்கு அவர்கள் தனிமனிதன் போல் இல்லாமல் அந்த ஊர் போலவே தோன்றுகிறார்கள்.

போன மாதம், வானவில்லாய் தோன்றி மறைந்த வருட விடுமுறையில், பழனி என்ற ஒரு மனிதரை சென்னையில் சந்தித்தேன் ; அன்றாட வாழ்வின் ஒரு அரை மணி நேர பயணத்தின் போது. வழக்கமான ஒரு சுவாரஸ்யம் குறைந்த சந்திப்பு என்றுதான், நானும் உங்களைப்போல நினைத்திருந்தேன்.

சென்னையின் இரண்டாம் வெயில் காலம் செப்டம்பரில்; போக்குவரத்து நெரிசல் என்று வழக்கமான ‘இட/கால நிரப்பல்’ பேச்சுகளில் தொடங்கினோம். அவர், திசை மாறி, ‘வோல்காவிலிருந்து கங்கை வரை’ படித்திருக்கிறீர்களா? என்றார். கேள்விப்பட்டிருக்கிறேன், வாசிக்க வாய்ப்பு கிட்டவில்லை இன்னும் என்றேன்.

பிறகு மெல்ல, தான் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் தீவிர வாசகர் என்றும், அவரை நேரில் பார்த்து பழகும் பேறு பெற்றவன் என்றும் விளக்கினார். அந்த எழுத்துலக சிங்கத்தின் கதைகள், வாழ்க்கை அனுபவ புத்தகங்கள், மற்றும் பிரமிக்க வைத்த மேடைப்பேச்சுகள் என்று சொல்லிக்கொண்டே போனார். பேச்சு, சினிமா பழங்கால திரைக்கவிஞர் மாயவநாதன் என்று எல்லா திசைகளிலும் பயணித்ததில் அரை மணிநேரம், அரை நிமிடமாக சுருங்கி விட்டது; எனக்கோ ஒரு தமிழ் இலக்கிய பட்டறையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வும், நிறைவும் ஏற்பட்டு விட்டது.
ஒரு மாதம் ஆகியும், நினைவில் நிற்கும் இந்த சம்பவத்தை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் சந்தோஷமே!

அது சரி.. யார் அந்த பழனி, நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்கின்றீர்களா? அவரை பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சென்னை ராஜ தானிக்கு வரவேண்டும்; ஒரு ‘தானி’யில் பயணிக்க வேண்டும். தமிழ், அரசுக்கட்டிலிலும் ஆள்கிறது, ஆட்டோவும்.. ஓட்டுகிறது; ஆம்.. பழனி.. ஒரு ஆட்டோ ஓட்டுனர்!

அன்றாட வாழ்வின் லாப நஷ்டங்களை மீறி, ஒரு இலக்கிய வாசகனின் நிரந்தர மகிழ்ச்சியை அவரிடம் கண்டேன், அதை பாராட்டும் விதமாய் அவருக்கு இந்த பதிவு! :))))

No comments: