June 29, 2008

எனக்கொரு தாத்தா இருந்தார்..அவர் என்னை போலவே இருந்தார்!

மகிழ்ச்சி பொங்கும் விதமாய் வாழ்வை தொடங்கும் மனிதரில், வெகு சிலரால் மட்டுமே பேரன் பேத்தி எடுக்கும் காலம் வரை சந்தோஷத்தை தொலைக்காமல் காப்பாற்ற முடிகிறது.

எனக்கு அப்பா வழி தாத்தா, எட்டாக்கனிதான். அவர்தான், என் அப்பா எஸ்.எல்.சி படிக்கும் போதே போய்விட்டாரே :(

அம்மா வழி தாத்தா தான் எங்கள் ஹீரோ. அவரை நாங்கள் “போபால் தாத்தா” என்று அழைப்போம். (மத்திய பிரதேசத்தில் வேலையில் இருந்ததால்)

அறுபதுக்கு மேல் கூட, டீ ஷர்ட் அணிந்து, உற்சாகமாக இருப்பார். எழுபதுக்கும் மேல், காலமாகும் வரைக்கும் வேலையை விடவில்லை.

அவரது, குறும்பும், இளமையும் கடைசி வரை குன்றவே இல்லை.
“பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்’ என அருமையாய் பாடுவார்.

“இந்த கட்டைக்கு, பாதம் கீர் கிடைத்தால் போதாதா? பழையது வேறே வேண்டுமா?” என அகடவிகடமாய் பேசுவார்.

நம் கையில் இருக்கும் கடலையை தட்டி மேலே அனுப்பிட, அது தானாக உயர பறந்து, கீழே விழும் போது லாவகமாக விழுங்குவார்.

என் முப்பத்தொரு வயது வரை இப்படி ஒரு சூப்பர் தாத்தாவின் அன்பை அனுபவித்த நான், என் குழந்தைகள் – இந்த உறவுகளின் சங்கிலியை அனுபவிக்க இயலவில்லையே என பலமுறை நினைப்பதுண்டு.

காலையில் நினைத்தது மாலையில் நடக்காவிட்டாலேயே துவண்டு போய்விடுகிறது நம் மனது. சொந்த வாழ்வின் சோகங்களை, குளித்து தலை துவட்டி துண்டை உதறி காய போடுவது போல, ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்துடன் நடமாடிய "போபால் தாத்தாவை" நினைத்து பார்க்கும் போது ஒரு வித வியப்பே மிஞ்சுகிறது.

அஞ்சு பெண் பெற்றால், அரசனும் ஆண்டியென்பார்கள். அஞ்சாமல் அசராமல் வாழ்க்கையை முழுவதாக அனுபவித்து, அதில் முத்திரை பதித்த அவரைப்பற்றி "எனக்கொரு தாத்தா இருந்தார், அவர் என்னைப் போலவே இருந்தார்" என்று பாடத்தோன்றுகிறது.

சொர்க்கத்திலிருந்து, "பேராண்டி, எங்க காலத்துல இந்த கம்ப்யூட்டர்/ப்ளாக் எல்லாம் இல்ல.. இருந்தா அதையும் ஒரு கை பாத்திருப்பேன்" என்று தாத்தாவின் கம்பீரமான குரல், சுட்டெரிக்கும் சவுதி வானத்திலிருந்து இறங்கி, தூசிக்காற்றுடன் சேர்ந்து மூச்சு குழலில் நுழைந்து மனக்குகைக்குள் எதிரொலிக்கிறது! உங்களுக்கும் கேட்கிறதா? :-))




4 comments:

duriarasanblogpsot.com said...
This comment has been removed by the author.
duriarasanblogpsot.com said...

தாத்தா நன்றாக இருந்தார்.

பேராசிரியர் க.துரையரசன்

duriarasanblogpsot.com said...

தாத்தா நன்றாக இருந்தார்.

பேராசிரியர் க.துரையரசன்

Dammam Bala (தமாம் பாலா) said...

மிக்க நன்றி, பேராசிரியரே தங்கள் பின்னூட்ட ஔடதத்துக்கு.. :))