July 18, 2021

வரங்கள்


தண்ணீர் உணவின்றி
தவமாய் தவமிருந்தும்
வரம் தர வராத கடவுள்
வந்தார் எனது கனவில்

ஒரு வரம் தருகின்றேன்
பெறுவாய் இப்போதே
என்றதும் உயிர் வாழ
எனக்கு உடல்நலத்தை

வேண்டினேன் இரண்டு
வரங்களாய் தருகிறேன்
என்றார் இறைவன் நான்
எனது நட்பும் குடும்பமும்

பெற்றேன் மூன்று வரம்
ஏற்றுக் கொள் என்றார்
ஏட்டுக்கல்வி செல்வமும்
மேட்டுக்குடி பிறப்பையும்

கேட்டுப் பெற்றேன் நாலு
வரம் தருகிறேன் என்றார்
கிழக்கிலும் மேற்கிலும்
வடக்கிலும் தெற்கிலும்

வெற்றி மட்டுமே வேண்டி
சுற்றினேன் உலகெங்கும்
மற்றும் ஐந்து வரம் தரவே
சற்றும் தாமதிக்காமலே

நிலம் நீர் காற்று நெருப்பு
ஆகாயம் அனைத்துமே
எனது கைவசம் ஆகிடவே
ஆண்டவனை வேண்டிட

ஆறாய் வரத்தை கூட்டிய
பேரிறையிடம் அறுசுவை
உண்டியை இறைஞ்சிட
அதுவும் கிடைத்த போது

ஏழு வரம் இதுவே இறுதி
தொழுது கேளென்றான்
வாழுகின்ற காலம் வரை
ஏழு ஸ்வரங்கள் போதும்

இசையே இறையே நீயும்
ஆசை ஆசையாய் கானம்
பாடும் குயிலின் குரலில்
குழலில் வாழ்கிறாய் என

நான் கூறும் போது கனவு
தான் கலைந்தது பூபாளம்
பாடிட புதிதாய் பிறந்தேன்
என்னை நான் மறந்தேன்

No comments: