ஆலயத்துக்கு செல்லாதீர்
ஆண்டவன் பாதத்தில் மலர்
தூவி வழிபட அதற்கு முன்
தூய அன்பை கருணையை
உமது வீடுகளில் நிறைப்பீர்
ஆலயத்துக்கு செல்லாதீர்
பலிபீடத்தின் முன் தீபங்கள்
ஏற்றிட அதற்கு முன் கூட்டியே
பாவ கர்வ அகம்பாவ இருளை
அகத்திலிருந்து அகற்றிடுவீர்
ஆலயத்துக்கு செல்லாதீர்
தலைவணங்கி தொழுதிட
அதற்கு முன் சகமனிதருக்கு
தலை வணங்கி இழைத்த
அநீதிகளுக்கு வருந்துவீர்
ஆலயத்துக்கு செல்லாதீர்
முழந்தாளிட்டு இறைஞ்சிட
அதற்கு முன் இல்லாதவன்
ஒருவனை தூக்கி நிறுத்த
தரை நோக்கி தலை குனிவீர்
இளையோரை வளப்படுத்த
அன்றி நசுக்கிட நினையாதீர்
ஆலயத்துக்கு செல்லாதீர்
காலமெல்லாம் செய்த பாவம்
தீர மன்னிப்பு கோரி வழிபட
அதற்கு முன் இதயபூர்வமாய்
உங்களை காயப்படுத்தியவர்
எல்லோரையும் மன்னித்திடுவீர்
No comments:
Post a Comment