November 23, 2019

ஆண்கள் அழுவதில்லை

ஆண்கள் அழுவதில்லை
தமாம் பாலா

சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என்றார்
உண்மையோ பொய்யோ

முட்டி மோதி முன்னுக்கு
வருவதை பிறக்கும் முன்
கற்றவன் இவன் கர்மவீரன்

படித்து முடித்து முடிக்காமல்
துடிப்பாக தொழில் செய்தும்
மடிப்பு கலைந்த உடையுடன்

இரவுபகலாய் உழைத்து தன்
உறவுகளை உயர்த்துவான்
மறந்தும் தன் துன்பங்களை

எண்ணி ஆண் அழுவதில்லை
கண்ணீரும் வியர்வையும் கூட
தண்ணீரில் கலந்த மீன் போல

எத்தனை அடித்தாலும் தாங்கும்
வித்தகன் இவனே தாங்குவான்
சத்தமில்லாத அவமானங்களை

உவர் நீர் குடித்து வளர்ந்து
இனிப்பு நீர் தரும் தென்னை
ஆண்களில் தான் எத்தனை

ஆண்களுக்கு அங்கீகாரம்
அது தேவையில்லை துளி
அன்பும் பாசமும் போதுமே

No comments: