August 10, 2009

எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம் (சென்னை, 9-8-2009)



எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம் (சென்னை, 9-8-2009)
தமாம் பாலா


வருட விடுமுறை கிட்டத்தட்ட முடிந்து ஒரு வாரம் தான் பாக்கி. ஞாயிறு,லீவு நாளா இருக்கு, நண்பர் கருணாநிதியை போய் ஒரு நடை பார்த்திட்டு வந்திடலாம்னு போன் போட்டேன்; வாங்க வீட்டிலே தான் இருக்கேன் அப்படின்னாரு அவரும்.

சாயந்தரம் ஆயிடுச்சே, காபி சாப்பிட்டுட்டு போங்கன்னு வீட்டிலே சொல்றாங்க. அப்போ தான் நம்ப மச்சான் வெங்கட்டுக்கு ஒரு போன் கால்! “பாலா... எஸ்.பி.பியோட மியூசிக் ப்ரோக்ராமுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கு”, நீங்க போயிட்டு வரலாமே” அப்படிங்கறாரு போன் பேசிட்டு..

பூசாரியை பார்க்க கிளம்பினவன் முன்னாடி, பக்தா என்ன வரம் வேணும்னு சாமியே வந்த மாதிரி, இந்த திடீர் பரிசு! அசடு வழிய கருண்ஸ்க்கு போன் போட்டு.. ஹி..ஹி.. அப்புறம் வர்றேன்னேன், அவரும் புரிஞ்சுக்கிட்டு, அதனாலென்ன, பரவாயில்லைன்னுட்டார்.

சேப்பாக்கம் யூனிவர்சிட்டி செண்டினரி ஏசி(?!) ஹாலில் 9-8-2009 அன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் வழங்கும் மகா கொண்டாட்டம், அப்படின்னு ஏ4-ஏ3 சைஸ்க்கு இடைப்பட்ட பெரிய நுழைவுச்சீட்டு.. எப்போ வேணும்னாலும் உங்களை ஹாலை விட்டு வெளியே அனுப்பிடுவோம்னு ஏகப்பட்ட கண்டிஷனோடு.

குழந்தைங்க யாரும் வரலைன்னுட்டாங்க; நானும், மனைவி ராதிகாவும், அவளோட அண்ணி ஜெயாவும் சேப்பாக்கிலே ஆஜர் ஆயிட்டோம். ஷீன்லாக், எல்.ஜி.மொபைல்னு ஒரே பாம்ப்லெட்டா கையிலே திணிச்சு உள்ளே அனுப்பினாங்க.. ஹாலில் மிதமான கூட்டம். மங்கள மஞ்சள் சீருடையிலே கணேஷ் க்ருபா இசைக்குழுவினர், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்னு இன்ஸ்ட்ருமெண்டலிலே அமர்க்களமா ப்ரோக்ராமை ஆரம்பிச்சுட்டாங்க.

டிக்கெட்டிலேயும், வாசலிலேயும் இருந்த எஸ்.பி.பி பெயர், மேடையிலே மிஸ்ஸிங்! கோவை முரளி,அனந்து மற்றும் குழுவினர் பாடின ஜனனி, ஜனனி பாட்டும் தவப்புதல்வன் படத்து, இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் பாட்டும் அடுத்து அடுத்து வந்துச்சு. நல்லாவே பாடுனாங்க.

எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்த எஸ்.பி.பி, தக தகன்னு ஒரு தங்க பட்டு சட்டையிலே மேடைக்கு வந்ததும், சபை களைகட்டிடுச்சு! தொகுப்பளினியை டீவிலே பார்த்த ஞாபகம்; தமிழும் இங்க்லீஷும் கலந்து சரளமா எஸ்.பி.பி பத்தி பல புள்ளி விவரங்கள சும்மா அள்ளி விட்டாங்க. ஆனா, வயசு ஆக ஆக “அவரோட யூத் புல்நெஸ் கொறஞ்சுகிட்டே வருதுன்னு” சொன்னப்போ, அர்த்தம் வேறெ மாதிரி வருதேன்னு, ராதிகா டக்குன்னு கண்டுபிடிச்சிட்டா!

நான் உங்கள் வீட்டுப்பிள்ளைங்கிற மாதிரி ஒரு நட்போட, யதார்த்தமா சிம்பிளா இருக்கார் எஸ்.பி.பி. ஆடியன்ஸோட சிரிச்ச முகமா பேசுறதாகட்டும், பாடுற பொண்ணுங்க வீக்கா இருக்காங்க; மைக் வால்யூமை பாத்து ஜாஸ்தி பண்ணுங்க, பாடிட்டு போகும் போது ஸ்பீக்கரோட மைக் க்ளாஷ் ஆகுது, பாத்து ஆப் பண்ணுங்க, ஹாலிலே ஏசி எப்பவுமே சரியா வேலை செய்றது இல்லே நீங்க எல்லாரும் யுனிவர்சிடிக்கு லெட்டர் போடுங்கன்னு, இனிமையா இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கறதாகட்டும் எஸ்.பி.பிக்கு இணை எஸ்.பி.பி தான்! லல்லுவை ஐ.ஐ.எம்மில் லெக்சர் கொடுக்க கூப்பிட்ட மாதிரி இங்கிதமான வழி நடத்துதலுக்கு பாடும் நிலா பாலுவை பணித்தாலும் தகும்!

முப்பத்து அஞ்சாயிரம் பாட்டுக்கு மேலே பாடின மனுஷன், சொல்றார்.. நல்ல பாட்டுன்னு, ஒரு பத்து/பதினஞ்சு பாட்டையே, (அரச்ச மாவை அரச்சது போல, இது என் அண்டர்ஸ்டாண்டிங்க் :-) பாடாமே, இந்த தடவை வித்தியாசமான அபூர்வமான பாட்டை எடுத்திருக்கோமுன்னு! கையோட பாடல் வரிசையை குறிச்சு வச்சுக்காதது என் தப்புதான்.. :-( நினைப்புலே இருக்கிற முக்கிய பாட்டுங்க..


1. உனை நினைத்தேன் பூவே,பூவே

2. உன்ன நினைச்சேன்.. பாட்டு படிச்சேன் சூப்பரோ சூப்பர், (அதிலும் ஆல்பர்ட் வயலின் ஒத்துழைப்போடு) கண்ணுலே தண்ணி தளும்பிடுச்சு..
3. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ..ஒத்திக்கோ (நம்ப சவுதி காலை ஆபீஸ் சவாரியிலே ஆஸ்தான பாட்டுங்கோ அது :-)) நம்ப ஜே வரிசைக்கு மேலே உள்ள பால்கனியிலே, ஒரு வெண்தாடி பெரியவர் டான்ஸ் ஆடி அனுபவிச்சு, மிராண்டா கிப்ட் ஹாம்பரும் வாங்கிட்டார் இந்த பாட்டுக்கு.
4. மாருகோ மாருகோ மாருகையி.. துள்ளல் பிரம்மாண்டம்.. பொம்பிளைங்க கூட ஆடி அசத்திட்டாங்க! சென்னை நாம நினைச்சதை விட ரொம்ப்ப.. முன்னேறிடுச்சுடா, சாமி!!
5. வா வா பக்கம் வா (தங்க மகன் பாட்டு.. 25 வருஷத்துக்கு முன்னாடி அப்பா தஞ்சை குமரன் தியேட்டருக்கு கூப்பிட்டு போன ஞாபகம்)
6. மைனே பியார் கியா படத்தின், தில் திவானா மற்றும் சங்கராபரணம் பாடல்கள் சிறப்பு போனஸ் !!
7. நாளை நமதே டைட்டில் சாங், கோவை முரளியுடன் இணைந்து.. அதே அந்த காலத்து இனிமை துளியும் மாறாமல்
8. தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய் ஹிந்த்- சும்மா ஜிவ்வுன்னு மயிர்கூச்செரியும் அனுபவமாய்!
9. இந்தியன் படத்தின் கப்பலேறி போயாச்சு, சூப்பர் ஹிட் சாங், கலக்கலாய்
10. ராகங்களின் சுகமான மெலடியான, நீயொரு ராக மாலிகை மற்றும் பாட்டு உருவான கதைகள்.


சாயங்காலம் 6-30க்கு ஆரம்பிச்ச நிகழ்ச்சி 10மணிக்கு மேலேயும் போய்கிட்டே இருந்துச்சு.. பிள்ளைங்க வீட்டிலேர்ந்து கூப்பிட்டதாலே வீட்டுக்கு போகவே மனசு இல்லாம இடத்தை காலி பண்ண வேண்டியதா போயிடுச்சு :((


நம்ப பதிவை முடிக்கிறத்துக்கு முன்னாடி குறிப்பிட்டு சொல்ல வேண்டியது..


இசைக்குழு :-
கணேஷ் க்ருபா இசைக்குழு பத்தி எனக்கு அதிகம் தெரியாது; ஆனாலும் இந்த நிகழ்ச்சி மூலமா அதன் இசைக்கலைஞர்களுடைய, கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிகழ்ச்சி பூராவும் பளிச்சிட்டது. கோட் சூட் போட்டு வழி நடத்தியவர் தான் கணேஷ் க்ருபான்னு நினைக்கிறேன், தான் பாட்டு எதுவும் பாடமே, கமெண்ட்ஸ் அது இதுன்னு டாமினேட் செய்யாமே கருமமே கண்ணாயினார் போல நல்ல நிகழ்ச்சிய குடுத்திருக்காரு அவரு!


ஆண் பாடகர்கள் எஸ்.பி.பிக்கு ஈடு கொடுத்தாங்க; பாடகிகள் தான் ரொம்பவே அடக்கி/அமுக்கி வாசிச்சிட்டாங்க.. ஹூம். அதிலும் 14 வயசு பையன் ஒருத்தன் கூட பாடினான்.. அவனையும் பாராட்டி எழுத ஆசைதான். என்ன செய்யறது, இந்த காலத்துலே டிவி ஷோவிலே பசங்க டேலண்டுலே கலக்கறாங்க; எஸ்.பி.பி பாடற மைடை அல்லவா, அந்த லெவலுக்கு ஹோம் ஒர்க் பண்ண வேண்டாமோ? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! குழு பாடகர்கள் பாடிய பாடல்களை இந்த பதிவிலே பட்டியல் போடத வகைக்கு எனக்கும் ஒரு குட்டு போட்டுக்கறேன்!


ஆடியன்ஸ்:-
டிக்கெட்டிலே போட்ட பல கண்டிஷன்களோட, ஒன்லி சீரியஸ் லிஸனர்ஸ் ஆர் அல்லௌட் அப்படின்னு போட்டிருக்கலாம் (க்ளாஸிபைட்லே ஒன்லி சீரியஸ் பையர்ஸ் டு காண்டாக்ட்/ப்ரோகர்ஸ் எக்ஸ்க்யூஸ்னு போடற மாதிரி)


நானே பாடின பாட்டுன்னாலும், நிகழ்ச்சிக்காக புதுசா பக்குவமா ப்ராக்டீஸ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு, பாலு விலாவாரியா சொல்றார்; ஏசி வேலை செய்யாத/ சூடான விளக்குகளோட வியர்வையோட அவரும் இசைக்குழுவும் சும்மா மாங்கு மாங்குன்னு பாடிக்கிட்டு இருக்காங்க, ஆடியன்ஸ் என்னடான்னா, தீவுத்திடல் எக்ஸிபிஷன் கணக்கா ஆளுக்கு ஆளு பக்கதுலே அரட்டை அடிச்சிக்கிட்டு, செல்போன் பேசிக்கிட்டு, நொறுக்கு தீனி வாங்கறத்துக்காக கால் வீசி நடந்து கிட்டு.. கொடுமைடா சாமி! :(((


இது போதாதுன்னு, ஜெயண்ட் ஸ்க்ரீன்லே, ப்ரோக்ரமை காட்டிகிட்டு இருக்கும் போதே, குறுக்கே குறுக்கே சைலண்டா, ப்ரகாஷ் ராஜ் ஷீன் லாக் மாப்பிள்ளைக்கு லட்டு திணிக்கிறாரு/ ராதிகா வந்து ராசியான குமரன் நகை மாளிகைக்கு உதடு அசைகிறாங்க, இது ஸ்பான்ஸர் ரவுசு!


கைத்தட்டல் பஞ்சம் கூட தெரிஞ்சது. கை தட்டி ஊக்குவிக்கிறத்துக்கும், சைலண்டா பாட்டு முடியறத்துக்கும் எல்லாரையும் டோஸ்ட்மாஸ்டரிலே தான் சேர்க்கணும்னு தோணுது!


(நாமளும் எஸ்.பி.பி போல ஒரு இஞ்சினியர், “பெயரளவிலும்” சின்ன ஒத்துமை.. என்ன அவரு ஒரு ஜம்போ ஸ்பெஷல் மசால் தோசைன்னா, நாம சாதா தோசை!! அவரு சிகரம்/அடியேன் தகரம் அவ்வளவுதான் வித்தியாசம்)


மொத்ததில், அப்பாஸ் கல்சுரல் வழங்கிய மகா கொண்டாட்டம், எங்கும் பாலு, எதிலும் பாலு, பரவசமூட்டிய பழரசம்.


இந்த பதிவை முழுக்க படிச்சவங்களுக்கும், முதல் வரியோ, முக்காவாசியோ, இல்லே அப்புறம் ஆப் லைனில் படிக்கலாம்னு சேவ் செஞ்சு படிக்காமலேயே டெலீட் செய்ய போறவங்களுக்கும், நன்றி.. வணக்கம் !!!!!

8 comments:

Anonymous said...

Aahaa Kalakkal view sir. I enjoyed fully in your lovely writings. All the best. Thx for immediate link. Covai Ravee

Mohan kumar said...

டி.வி. யில என்னைக்கு போடுவாங்க சார்!..

Dammam Bala (தமாம் பாலா) said...

thanks for your visit and comments ravi.

Dammam Bala (தமாம் பாலா) said...

thanks for your visit mohan.

expect tele-cast on 15th Aug in Raj TV.

Mohan kumar said...

Thank U Dammam Sir...

Prasanna said...

Dear Bala
First of all neenga kattida poriyalar (Civil Engr) , naan kattida kalai nibunar (Architect).
Neengalum SPB yoda Great fan ...Naanum avaroda theevira visiri...Ungalukum ennakum Ravi Common friend...Ippadi nammakulla pala otrumai ...
Unga pathivai padikumpothu pakathula ukanthu oruthar solra madhiri irunthathu ...
Naan chennaila irukum pothu SPB fans meeting , musical concert ellam kandipa poiduvan ...Avara ethana thadavai parthu pesinalum every time i feel it as First time ...Cochin la irunthathala intha concert miss aaiduchu , but unga padhivu mulyama antha kurai poidichu ...Thanks for registering it un your blog ...All the best for more memorable moments ....

Luv and Live with Music
Prasan

Anonymous said...

Dear Prasanna..

//First of all neenga kattida poriyalar (Civil Engr) , naan kattida kalai nibunar (Architect).
Neengalum SPB yoda Great fan ...Naanum avaroda theevira visiri...Ungalukum ennakum Ravi Common friend...Ippadi nammakulla pala otrumai ...//

ப்ரசன்னா இதுமட்டும் தெரியுமா? உங்களூக்கு நான் சிவில் இஞ்சினியர்களை உருவாக்க உதவுபவனும் கூட (கோவை தொழில்நுட்ப கல்லூரியில் இருக்கிறேனப்பா_ இன்னமும் நெருங்கிட்டோம் அப்படித்தானே?

//Unga pathivai padikumpothu pakathula ukanthu oruthar solra madhiri irunthathu ...
Naan chennaila irukum pothu SPB fans meeting , musical concert ellam kandipa poiduvan ...Avara ethana thadavai parthu pesinalum every time i feel it as First time ...Cochin la irunthathala intha concert miss aaiduchu ,//

எனக்கும் நேரில் பார்த்த திருப்தி ப்ரச்ன்னா. தாமாம் பாலாவிற்கு மறுபடியும் நன்றி.

Anonymous said...

translation in english please!!

Sai Easwar Manda